Tuesday, April 24, 2012

சிவவெண்பா

அள்ளக் குறையா அமுதமென இன்பங்கள்
உள்ளம் நிறைய வழிந்தோடி- வெள்ளமென
பாயுமாறு செய்ய பணிவோடு ஏத்துவோம்
தாயுமான ஈசனின் தாள்.

அல்லல் தொலைந்தோட அம்பலத்தான் நாமத்தை
சொல்லித் துதித்துச் சுடரேற்றி- தில்லை
நடராசன் பாதங்கள் நாளும் துதிப்போம்
அடடா அதுவே அறம்.

பொன்னம் பலத்தானை பூலோகம் காத்தானை
அண்ணா மலையானை ஆரமுதப்- பண்ணாலே
பாடிக் களிப்பேன்நான்! பாட்டில் சிவத்தையே
தேடித் திளைப்பேன் தினம்.


அஞ்செழுத்து மந்திரத்தை அன்றாடம் உச்சரித்து
தஞ்சமென ஈசனவன் தாள்சேர் - நெஞ்சே
சிவனை மறவாதே ! சீரோடு வாழ
அவனே உனக்கு அரண்.


இறவாப் புகழ்கேட்டேன்! ஈரேழு ஜென்மம்
மறவா மனங்கேட்டேன்!மீண்டும் -பிறவா
வரங்கேட்டேன் அய்யா! வசமாகி எனக்கு
இரங்கினால் இல்லை இடர்.


தரங்குன்றிப் போகா தமிழ்கொண்டு வாழ்த்தி
வரங்கேட்டுப் பார்ப்பேன் வணங்கி! -இரங்காது
போனாலும் போகட்டும்! பூந்தமிழ்ப் பாவொன்று
ஆனாலே அய்யன் அருள்.


-சிவகுமாரன் 



அய்யா சுப்புரத்தினம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். 




28 comments:

சிவகுமாரன் said...

இன்று அட்சயதிருதியை.
தொட்டது துலங்குமாம்.
வாங்குவது வளருமாம்.
என் இறைவா
என் தமிழைத் தொட்டேன்
உன் வரத்தை வேண்டினேன்.
வளரட்டும்
என் தமிழும்
உன் அருளும்.

G.M Balasubramaniam said...

அன்பின் சிவகுமாரா, வெண்பாவின் தரம் பற்றிக் கூறத் தகுதியில்லை எனக்கு. ஆனால் எழுதுவதை ரசிக்கத்தெரியும். சொல்வதா வேண்டாமா என்று பலமுறை
எண்ணிப் பார்த்து எழுதுகிறேன். அந்தக் கடைசி வெண்பா ஒரு சவால் மாதிரித் தெரிகிறது. அங்கே ஒரு “ நான் “ தொக்கி இருக்கிறதோ.? உன் மேல் கொண்ட அன்பே என்னை இதைச் சொல்ல வைக்கிறது. GOD BLESS YOU.!

sury siva said...

http://youtu.be/dfM-tBktFm8

மிகவும் அழகு.
ஐந்தெழுத்துப் பெருமானை
யானும் ஐந்து ராகங்களிலே பாட விழைந்தேன். கடைசி பாவிலே " தரங்குன்றி போகா " என்று சொல்ல வாய் வரவில்லை. ஆகையினால், தரன்குன்றா
தீஞ்சுவை தமிழ் கொண்டு வாழ்த்தி" என பாடியமைக்கு அனுமதி கேட்பேன்.
இரண்டாம் வரியினில் " நான்" என இருக்கலாமோ ? நான் உனை என்று சேர்த்துக்கொண்டேன்.
பாடலை ஒரே மூச்சில் பாடிவிட்டேன்.
எனது வலையிலயும் போட்டுவிட்டேன்.
சுப்பு ரத்தினம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எல்லாமே மனதின் ஆழத்திலிருந்து வந்தமையால் இயல்பாகவே இருக்கிறது சிவா.

படமும் அபூர்வம். அழகு.

ஜீவி said...

//தரங்குன்றிப் போகா தமிழ்கொண்டு வாழ்த்தி
வரங்கேட்டுப் பார்ப்பேன் வணங்கி! -இரங்காது
போனாலும் போகட்டும்! பூந்தமிழ்ப் பாவொன்று
ஆனாலே அய்யன் அருள். //

-- இந்த ஒரு வெண்பாவிலே தான் எத்தனை உணர்வுகள், எவ்வளவு சேதிகள் என்று திகைத்தேன்.

தமிழ்; அதுவும் தரங்குன்றா சொற்களில்!

வரம்; தாவென்று கேட்டால், தருவதில் நீ ஈடிணையற்றவன்; அதனால் வணக்கத்துடன் பாவாய் அதைக் கேட்டுப் பார்க்கப் போகிறேன்.

அதற்கு ஒருக்கால் நீ இரங்காது போனாலும் பூந்தமிழ் பாவாக அது அமைந்தாலே, அப்படி அமைதலும் அய்யனின் அருளாலேயே!'-- என்று முடித்ததின் சிறப்பு எண்ணி எண்ணி மகிழத்தக்கதாய்த் தோன்றுகிறது.

உங்களின் மனவெளிப்பாடுகள் உணர்த்தும் பேறுகள் அற்புதம், சிவகுமாரன்! இத் திருநாளில் தங்கம் வேண்டுவோர் பலர் இருக்க, தமிழ் வேண்டுவோனுக்கு அதைத் தராமலா இருக்கப் போகிறான், அந்தப் பிறவா யாக்கைப் பெரியோனும்!

திகழ் said...

இறை இன்பத்துடன்
தமிழ்ச்சுவை பருக முடிந்தது

வாழ்த்துகள்

திகழ் said...

அதிலும் இறுதி வெண்பா

என்ன சொல்ல‌

என்னுள் ஒரு அதிர்வை உண்டாக்கி விட்டது

வணங்குகிறேன் உங்கள் உணர்வுக்கு

Lalitha Mittal said...

சிவகுமாரனின் வெண்பா அருமை !அதை மிகவும் அனுபவித்து சுப்பு
ஐயா பாடி இருக்கும் அழகைப் புகழ வார்த்தை கிடைக்கலை;இருவருக்கும் நன்றி!நன்றி!

sivamani said...

வெண்பா மிக அருமை.கருத்து சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மனம் சிலிர்த்து விட்டது. சுப்பு அய்யாவின் பாடல் நெஞ்சை தொடுகிறது

சிவகுமாரன் said...

அன்பு GMB அய்யா ,

கடைசி வெண்பாவில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு. பார்ப்பேன்- என்று சொன்னாலே அங்கு "நான்" என்ற சொல் இருப்பதாகத் தான் அர்த்தம் . அதை எழுத வேண்டிய அவசியமில்லை. கண்டேன் சீதையை என்று அனுமன் சொல்வதாக கம்பன் பாடுகிறார். "நான் கண்டேன்" என்று சொல்லவில்லை. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது தான் கவிதை.
வெண்பா இலக்கணப்படி இருந்தாலும் பொருள் சிதையாமல் இருப்பதாகத் தான் நினைக்கிறேன்.
நன்றி அய்யா

சிவகுமாரன் said...

அன்பு சுப்புரத்தினம் அய்யா ,

நான் எதிர்பார்க்கவேயில்லை. என் வெண்பாக்களுக் கெல்லாம் இசையமைக்கமுடியும் என்று. அனைத்தும் அருமை. அதிலும் அஞ்செழுத்து வெண்பாக்கு ராகம் - எங்கள் பக்கத்தில் திருமணத்தில் பாடப்படும் நலுங்கு மாதிரி- கேட்க இனிமையாக இருந்தது.
மிக்க நன்றி அய்யா.

சிவகுமாரன் said...

சரியாகச் சொன்னீர்கள். சுந்தர்ஜி. அவனருளாலே அவன்தாள் வணங்கி" என்பது போல, அவன் கொடுத்த தமிழ் என்பதால் , எழுதும் போதே ஒரு அர்ப்பணிப்பு உணர்வு வந்து விடுகிறது.

சிவகுமாரன் said...

அன்பு ஜீவி சார்.
கடைசி வெண்பாவிற்கு தங்களின் விளக்கம் - மறுபடியும் பலமுறை அந்த வெண்பாவை நானே ரசிக்கும் படி வைத்தது.
நன்றி ஜீவி சார்.

சிவகுமாரன் said...

நன்றி திகழ். தமிழாய்ந்த தங்களின் வாழ்த்து என்னை பெருமிதம் கொள்ள வைத்தது.

சிவகுமாரன் said...

நன்றி லலிதா மேடம்.
நன்றி அண்ணா

அப்பாதுரை said...

ஈரேழு ஜென்மம் மறவா மனம், பிறவா வரம்.. எப்படியெல்லாம் எண்ணுகிறது நம் மனம்!
சுப்புரத்தினம் ஐயா உருகிப் பாடியிருக்கிறார்.

சிவகுமாரன் said...

யாரவது கேட்பார்கள் என்று எதிர்பார்த்தேன் அப்பாஜி . பிடித்து விட்டீர்கள். எனக்கு பிறவா வரம் தான் வேண்டும். தவறிப் பிறந்து விட்டால் ஈரேழு ஜென்மத்திலும் மறவா மனம் வேண்டும். அவ்வளவுதான்.
"நம் மனம்" என்று சொன்னது எனக்கு பிடித்திருக்கிறது அப்பாஜி

இராஜராஜேஸ்வரி said...

//தரங்குன்றிப் போகா தமிழ்கொண்டு வாழ்த்தி
வரங்கேட்டுப் பார்ப்பேன் வணங்கி! -இரங்காது
போனாலும் போகட்டும்! பூந்தமிழ்ப் பாவொன்று
ஆனாலே அய்யன் அருள். //

ஐயன் அருளால் கீதமும் ,பூந்தமிழ் பாவும் நிறைவாக மனம் நிறைந்தன.. பாராட்டுக்கள்..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பக்திமணம் கமழும் வெண்பாக்கள். பிரமாதம் சிவகுமாரன். பதிவுலகில் மிகச் சிலரே வெண்பா இயற்றும் திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள். தங்கள் பா தனித் தன்மை பெற்று விளங்குகிறது.

மோகன்ஜி said...

என் அன்பிற்கினிய சிவா! என் அஞ்ஞாத வாசத்திற்குப் பின் இன்று தான் இந்தப் பதிவைப் படித்தேன் .. கேட்டேன்.. என் கண்கள் கசிகின்றன.. என்ன சொல்வேன்.. உனக்கு சிவா கடாக்ஷம் பரிபூரணம் தம்பி. வெண்பாக்களில் எளிமையான வார்க்தைகள். சிவலிங்கத்தின் மீது பூக்கள் சொரிந்தாற்போல் ஒரு மனக் காட்சி என்னுள். பெரியவரின் குரலின் பாவமும் பண்ணும் நயம். எனக்கு ஆசீர்வதிக்கும் தகுதியிருந்தால்... இருந்தமிழ் என்றும் உனைப் பிரியாதிருக்கட்டும்.

Aathira mullai said...

இன்னொரு காரைக்காலம்மையாரை, இன்னொரு அப்பரைத் தரிசித்தேன் தங்கள் வெண்பாக்களில். நண்பா பாடி பாராட்ட நான் சிவாவாக இல்லையே என்னும் ஏக்கத்துடன்.... மெளன்மாக..வாழ்த்துகிறேன்.

G.M Balasubramaniam said...

அன்பின் சிவகுமாரா, நான் சொல்ல வந்த கருத்து சரியாகச் சென்றடைய வில்லை என்றே எண்ணுகிறேன். பாவில் குறை காணவில்லை சொல்லும் பாவத்தில்தான் “நான்” தொக்கி நிற்கிறதோ என்று தோன்றியது. தவறாகவும் இருக்கலாம்.பின்னூட்டங்களில் பலரும் கடைசி வெண்பாவை ரசிக்க நான் மட்டும் வேறு விதமாக சிந்தித்து விட்டேன் போலும். சவால் போல் தோன்றியது வார்த்தைகள். உடனே எழுதிவிட்டேன். வாழ்க வளமுடன்.

சிவகுமாரன் said...

நன்றி இராஜேஸ்வரி மேடம்
நன்றி முரளிதரன் சார்

சிவகுமாரன் said...

மோகன் அண்ணா.
மனம் குளிர்ந்து போகின்றேன்.
ஒவ்வொரு இடுகையின் போதும் நீங்கள் படித்து பின்னூட்டமிட மாட்டீர்களா என நான் ஏங்குவதுண்டு. தங்களின் ஆசீர்வாதம் என் பேறு.

சிவகுமாரன் said...

ஆதிரா மேடம்,
எவ்வளவு பெரியவர்களோடு ஒப்பிடுகிறீர்கள்.
தங்களின் வாழ்த்துக்கு நன்றி

சிவகுமாரன் said...

GMB சார்,
தங்கள் கருத்தை தெரிவிக்க தங்களுக்கு முழு உரிமை உண்டு. தங்கள் கேள்விக்கு நான் பதில் சொன்னேன். அவ்வளவு தான்.
மிக்க நன்றி

Nanjil Siva said...

தில்லை
நடராசன் பாதங்கள் நாளும் துதிப்போம்.... நின்று குதிப்போம் !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

சிவகுமாரன் said...

"நின்று குதிப்போம்." ஆகா. கண்ணை மூடிக் கொண்டு குதிக்கலாம் தான். அவன் காட்டும் இடத்தில்.
நன்றி