Friday, January 26, 2024

கோணேஸ்வரா


  வெண்பா 

(அய்யனைத் தரிசிக்கும் வரை )

கோணேஸ் வராஉந்தன் கோல எழில்தன்னைக் 

காணேனோ என்னிருக் கண்களால் ? - வீணே 

பிழைத்துக் கிடக்கின்றேன் , பெற்றவா என்னை 

அழைத்துக் கொடுப்பாய் அருள். 


 (அய்யனைத்  தரிசித்த பின் ) 

கோணமலை ஈஸ்வரனின் கோல எழில்தன்னைக் 

காணவந்தேன் , பேரருளில் கட்டுண்டேன் - வீணடைந்து 

போகாதென் வாழ்க்கை ! பொலிந்திடச்  செய்திடுவான் !

ஆகா அவனே அரன் (ண் ).

-சிவகுமாரன்.

25.01.2024

@ திருகோணமலை 


 

Monday, January 22, 2024

ஓம் முருகா


ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் 
                                ஓம்  முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் 


ஓம் முருகா ஓம் முருகா என்று கூறு - அந்த 

   உச்சிமலைக் கோயிலுக்குச் சென்று ஏறு .

கோமணத்து ஆண்டியை நீ பக்தியோடு - தினம் 

   கும்பிட்டுக்கொள் அதுவொன்றே பற்றுக் கோடு                       ( ஓம் முருகா )


கந்தனுக்கு பழனியில் படைவீடு - அதைக் 

   கொண்டுவர ஆசையுடன் நடைபோடு .

வந்ததுயர் ஓடிவிடும் அடியோடு - அவனை 

   வரச் சொல்லி பாடு ஒரு முடிவோடு.                                                 ( ஓம் முருகா )


ஆறுமுகன் பேரைச் சொல்லி ஆடிப்பாடு - அந்த 

   ஆறெழுத்து மந்திரத்தைப் படி ஆடு 

ஏறுமயில் ஏறிவரும் எழில் பாரு - மனதில் 

   ஏக்கமுடன் பழனிக்குச் சென்று சேரு .                                            ( ஓம் முருகா )  


வானுலகத் தேவனுக்கு வாழ்த்து பாடு - அந்த 

   வடிவேலன் புகழினை ஏத்தி ப்  பாடு 

ஆனைமுகன் தம்பியவன் அன்பைப் பாடு - அந்த 

   அண்ணாமலை பிள்ளையவன் அருள்தேடு                                 ( ஓம் முருகா )


வேல்முருகா என்றுசொல்லி மெட்டுப் போடு - அவனை 

   வேண்டுவதில்லை உனக்கென்ன தட்டுப்பாடு 

கால்வலிக்கும் தாங்கி நடை எட்டிப்போடு - அந்த 

   கந்தனை உன் பக்தியாலே கட்டிப்போடு  .                                   ( ஓம் முருகா )


கோலமயில் ஆடுது பார் ஜதியோடு - அதைக் 

   குகனிடம் தூதனுப்பி துதிபாடு 

வேலவனை தூக்கிக் கொண்டு வரச் சொல்லு - நாங்கள் 

   வேண்டும் வரம் அத்தனையும் தரச்  சொல்லு                            ( ஓம் முருகா )


துள்ளிவரும் வேலைக்கண்டு துதிபாடு - உன் 

   துன்பமெல்லாம் ஓடிவிடும் விதியோடு 

வள்ளிமண வாளனைநீ எண்ணிப் பாடு - அவனை

   வலைக்குள்ளே மாட்ட ஒரு கண்ணி  போடு                                  ( ஓம் முருகா )


கணபதி தம்பிஇடம் கனிவோடு - உன் 

   கவலைகள் சொல்லி விடு பணிவோடு 

மனம்விட்டுப்  பேசுசுப்ர மணியோடு - எந்த 

   மலையையும் மோதித் தள்ளு துணிவோடு                              ( ஓம் முருகா )


தந்தனத்தோம் பாட்டுச் சொல்லி தமிழோடு - ஞானத் 

   தங்க ரதத் தேரிழுப்பாய் மகிழ்வோடு 

செந்தூர்க் கடல் வீசுகின்ற அலையோடு - அந்த 

   செந்தில்வேலன் பேரைச் சொல்லி விளையாடு .                    ( ஓம் முருகா )


தக்கத்திமி தக்கத்திமி தாளம் போடு - அந்த 

   தண்டபாணி ஆற்றுக்கொரு பாலம் போடு 

பக்கத்துணை யாயிருப்பான் பயத்தை விடு -அவன் 

   பன்னிருகை கொண்டணைப்பான் கவலைவீடு                   ( ஓம் முருகா )

 

ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் 
                                ஓம்  முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் 

                                                                                                                                 சிவகுமாரன் .






 





Monday, April 26, 2021

வள்ளலார் போற்றி

 



அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.


வடலூர் ஈன்ற வள்ளல் குணமே

   வாடிய பயிர்கண்டு வாடிய மனமே

கடவுளை ஜோதியில் காட்டிய குருவே

 கடவுளாய் ஜோதியில் கலந்திட்ட உருவே

மடமையைச் சாடிய மாபெரும் துணிவே

   மனதினைச் செம்மையாய் மாற்றிய கனிவே.

அடங்கா  எண்ணங்கள் அடக்கிட வருவாய்.

   அருட்பெருஞ் சோதியாய் அகத்தினில் மலர்வாய்.


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.


குரு வணக்கம் பாடியிருப்பவர் தம்பி பிரபாகரன். 



                                                                                                                              சிவகுமாரன் 

Saturday, April 24, 2021

சதுரகிரி பாமாலை

 


சரணம் சரணம் சரணமய்யா சந்தன மகாலிங்கம் சரணமய்யா

  சரணம் சரணம் சரணமய்யா சுந்தர மகாலிங்கம் சரணமய்யா.


சித்தரெல்லாம் கூடும் மலை சதுரகிரி- எங்கும்

   சிவமய மான சதுரகிரி

சக்தியெல்லாம் கொண்டமலை சதுரகிரி - எந்த

    சந்தேகமும் இல்லை இது கயிலைபுரி.                           ( சரணம்) 


சிவன்மலை ஏறவந்தோம் சரணமய்யா - சிவன்

   திருவடி காணவந்தோம் சரணமய்யா 

அவனிடம் அடைக்கலம் ஆனோமய்யா - அவன்

   அரசுக்கே அடிமையாய் ஆனோமய்யா             ( சரணம் )


காடுமலை தாண்டி வந்தோம் சரணமய்யா - ஈசன்

  கருணையை வேண்டிவந்தோம் சரணமய்யா 

பாடும்பொருள் சிவனன்றி வேறு இல்லைய்யா- சென்று 

  பார்க்கும் வரை சோறு தண்ணி தூக்கமில்லையா .  ( சரணம் )


ஆசிர்வாதப் பிள்ளையாரே சரணமய்யா - உங்கள்

   ஆசிகேட்டு ஓடிவந்தோம் சரணமய்யா

ஈசனிடம் எங்கள் குறை சொல்லிவிடய்யா - கொஞ்சம்

  எம்மைப் பற்றி அப்பனிடம் அள்ளிவிடய்யா.                ( சரணம்)


தாணிப்பாறை பேச்சியம்மா சரணமம்மா - உங்கள் 

   தாள்பணிந்து வேண்டுகிறோம் சரணமம்மா

ஏணிப்படி யாயிருந்து ஏற்றிவிடம்மா - எங்கள்

 ஏக்கங்களை ஊதித்தள்ளி ஓட்டிவிடம்மா                      ( சரணம் )


கருப்பண்ண சாமிகளே சரணமய்யா - உங்கள்

    காவல்தனை வேண்டிவந்தோம் சரணமய்யா 

விருப்பமாய் மலையேற வந்தோமய்யா - எந்த

  வேளையிலும் எங்களுக்கு காவல் நில்லய்யா        ( சரணம்)


கோரக்க நாதரே சரணமய்யா - உங்கள் 

  குகைதனை தேடிவந்தோம் சரணமய்யா 

பாரங்கள் குறைத்திடக் கேட்டோமய்யா - உங்கள்

    பாதத்தில் சுமைகளைப் போட்டோமய்யா              ( சரணம் )


நாவல்மர ஊற்றுதனைக் கண்டோமய்யா - அந்த

   நன்மைதரும் தீர்த்தமள்ளி உண்டோமய்யா 

நோவுகின்ற தேகம்தாங்கி வந்தோமய்யா - எந்த

   நோய்நொடியும் ஒடும்வரம் கேட்டோமய்யா               ( சரணம்)


இரட்டைலிங்கம் சந்நிதிக்கு வந்தோமய்யா - அங்கே

   ஈசனையும் மாலனையும் கண்டோமய்யா 

திட்டமெல்லாம் ரெண்டுபேர்க்கும் சொன்னோமய்யா -நாங்க

   தொட்டதெல்லாம் வெற்றிபெறக் கேட்டோமய்யா         ( சரணம்)


காராம்பசுத் தடத்திற்கு வந்தோமய்யா - ஈசன் 

   கருணையை அவ்விடத்தில் கண்டோமய்யா -

தீராவினை தீர்க்கச் சொல்லி கேட்டோமய்யா - வினை

   தீர்ந்ததென்று நம்பி நடை போட்டோமய்யா               ( சரணம்)


தவசிப்பாறை தரிசனம் கண்டோமய்யா - அங்கே

   தவம்செய்யும் சித்தர்களே சரணமய்யா 

அவசியம் எங்க குறை கேளுங்கய்யா - கொஞ்சம்

   அதைப்பற்றி சிவனிடம் கூறுங்கய்யா                         ( சரணம் )


பிலாவடி கருப்பரே சரணமய்யா -எங்கள் 

  பிழைகளைப் பொறுத்திட  வேண்டுமய்யா 

தலைவனை தரிசிக்க வந்தோமய்யா -   வரும் 

   தடைகளை உடைத்திட  வேண்டுமய்யா                     ( சரணம்)


சுந்தரா உன் சந்நிதிக்கு வந்தோமய்யா - உன்  

   சொக்குகின்ற பேரழகைக் கண்டோமய்யா 

வந்தவுடன் வலியெல்லாம்  பறந்ததய்யா - நாங்க 

   வாங்கவந்த வரம் கூட மறந்ததய்யா                           ( சரணம் )


ஆனந்த வல்லியம்மா  சரணமம்மா - நீங்கள் 

    ஆதர வளித்திட  வேண்டுமம்மா 

கானத்தைக் கேட்டிட வாருமம்மா - கொஞ்சம் 

   கடைக்கண்ணை திறந்தெம்மை பாருமம்மா         ( சரணம் )


பச்சைமால் சடைமங்கை சரணமய்யா  - நீங்கள் 

   பால்தந்த லிங்கத்துக்கும்  சரணமய்யா 

இச்சையுடன் பூவுலகம் வந்தீரய்யா - அந்த 

    ஈசனுக்கே பிரம்படி தந்தீரய்யா .                                      ( சரணம்)


சந்தனமே உந்தன் முன்னே வந்தோமய்யா - மனச் 

   சஞ்சலங்கள் அத்தனையும் சொன்னோமய்யா 

சிந்தையிலே உன்னையன்றி வேறு யாரய்யா - வாழ்வின் 

    சிக்கலெல்லாம் தீரக்கண்  திறந்து பாரய்யா             (சரணம்)


அம்பிகையும் இடப்பாகம் கேட்டாளய்யா - நீங்கள் 

   அருள்தந்து அம்மையப்பன் ஆனீரய்யா -

நம்பிவந்தோம் உங்களையே காப்பீரய்யா - எமக்கு 

   நற்கதியைத் தந்து கரை சேர்ப்பீரய்யா                          ( சரணம் )


சந்தன மகாதேவி சரணமம்மா - நீங்கள் 

    தவம்செய்த பாறைக்கும் சரணமம்மா 

வந்துநின்று குறைசொல்லி பணிந்தோமம்மா  - இனி 

    வருவதை எதிர்கொள்ள துணிந்தோமம்மா                    ( சரணம் )


சந்தன விநாயகரே சரணமய்யா - ஸ்ரீ 

   சந்தன முருகவேளே  சரணமய்யா 

தந்தையிடம் எமக்காக தூது செல்லய்யா - கொஞ்சம் 

   தயைகாட்டி  தரிசனம் தரச் சொல்லய்யா                         ( சரணம் )


தவம்செய்யும் சித்தர்களே சரணமய்யா - உங்கள் 

   தாளினைப் பணிந்தோம் சரணமய்யா 

சிவமதை உணர்த்திட வாருமய்யா - எங்கள் 

    சித்தமதில் தெளிவினைத் தாருமய்யா                            ( சரணம் )

 

திருமூல நாயனாரே சரணமய்யா - உங்கள் 

   திருவடி பணிந்தோம் சரணமய்யா 

கருவூர் சித்தரே சரணமய்யா - நீங்கள் 

    காட்டிடும் வழிசெல்ல வந்தோமய்யா                         ( சரணம் )

 

அகத்திய மாமுனி சரணமய்யா - உங்கள் 

   அறிவினில்  சிறுதுளி கேட்டோமய்யா 

அகப்பேய் சித்தரே சரணமய்யா - எங்கள் 

   அகப்பேய் ஓட்டிட வாருமய்யா                                        ( சரணம் )


வான்மீகி நாதரே சரணமய்யா - உங்கள் 

   வாழ்த்தொலி கேட்டிட வந்தோமய்யா 

ஆன்மீக வழிதனில் நடப்போமய்யா - உங்கள் 

   ஆசியி னால்விதி கடப்போமய்யா                       ( சரணம் )


பழனிமலை போகரே சரணமய்யா - திரு 

   பாம்பாட்டிச் சித்தரே சரணமய்யா 

அழகணிச் சித்தரே சரணமய்யா - அந்த 

    அரனருள் கிடைத்திட வழி சொல்லய்யா         ( சரணம் )


வாமதேவா உமக்குச் சரணமய்யா - நீங்கள் 

  வாங்கிவந்த வரத்துக்கும்  சரணமய்யா  

இராமதேவச் சித்தரே சரணமய்யா - உங்கள் 

   இரசவாத வித்தைக்கும் சரணமம்மா                 ( சரணம் )


வாலைச்  சித்தரே  சரணமய்யா - ஸ்ரீ  

   வல்லபச் சித்தரே சரணமய்யா 

காலங்கி  நாதரே சரணமய்யா - அந்த 

   காலனை வென்றிடும் வழிசொல்லய்யா     ( சரணம் )


குதம்பைச் சித்தரே சரணமய்யா - திரு 

   கொங்கணச்  சித்தரே சரணமய்யா 

பதஞ்சலி மாமுனி சரணமய்யா - உங்கள் 

   பலன்தரும் யோகங்கள் கேட்டோமய்யா      ( சரணம் )


புலிப்பாணிச் சித்தரே சரணமய்யா -திரு 

   புண்ணாக்கீசரே  சரணமய்யா 

கலியுக மெய்யரே சரணமய்யா - இந்த 

    கலியுகம் காத்திட வேண்டுமய்யா                ( சரணம் )


கடுவெளிச் சித்தரே சரணமய்யா - ஸ்ரீ 

    கமலமுனிச் சித்தரே சரணமய்யா 

இடைக்காட்டுச் சித்தரே சரணமய்யா - அந்த 

   ஈசனைக் காணும் வழி  சொல்லய்யா         ( சரணம் )


மருத்துவர் தன்வந்திரி சரணமய்யா - திரு 

   மச்சமுனிச் சித்தரே சரணமய்யா 

வருத்தங்கள் போக்கிட வாருமய்யா - எங்கள்  

   வாழ்க்கைக்கு வளங்களைத்  தாருமய்யா       ( சரணம் )


சட்டைமுனி நாதரே சரணமய்யா - உங்கள் 

   சந் நிதிக்கு வந்து நின்றோம் சரணமய்யா 

பட்டினத்துச் செட்டியாரே  சரணமய்யா - உம்மை 

   பதம்பார்த்த மகனுக்கும் சரணமய்யா                        ( சரணம் )


சிவவாக்கியரே சரணமய்யா - உங்கள் 

   சீரான பாடலுக்கும் சரணமய்யா 

நவநாதச் சித்தர்களே சரணமய்யா - உங்கள் 

  நவபா ஷாணத்திற்கும் சரணமய்யா                            ( சரணம் )


அத்தரி மகரிஷி சரணமய்யா - உங்கள் 

    அழகிய வனத்திற்கு வந்தோமய்யா 

பத்திர கிரியாரே சரணமய்யா - உம்மை 

   பணிந்தடி தொழுதோம் சரணமய்யா                         ( சரணம் )


நந்தியெனும் சித்தரே சரணமய்யா - ஸ்ரீ 

   நாதமுனிச் சித்தரே சரணமய்யா 

சுந்தரா னந்தரே  சரணமய்யா - உம்மை 

    தொழுதடி பணிந்தோம் சரணமய்யா                         ( சரணம் )


யாழ்வல்ல தேவரே சரணமய்யா - உங்கள் 

    யாழிசை கேட்க வந்தோமய்யா 

வாழ்க்கைக்கு வழிசொல்லக் கேட்டோமய்யா -அதை 

    வழங்கிட ஈசனை வரச்  சொல்லய்யா                               ( சரணம் )


யூகியர் புலத்தியர் சரணமய்யா- பல 

     யுகங்களைக் கடந்தோரே சரணமய்யா 

காக புஜண்டரே சரணமய்யா - முக் 

    காலமும் உணர்ந்தோரே  சரணமய்யா                           ( சரணம் )


தேரையரே  உமதடி  சரணமய்யா - ஸ்ரீ 

   ரோமரிஷித் சித்தரே சரணமய்யா 

வேறுயாரும் விட்டிருந்தால் சரணமய்யா - உங்கள் 

     வேர்களுக்கும் விழுதிற்கும்  சரணமய்யா                  ( சரணம் )


 பதினெட்டுச் சித்தர்களே சரணமய்யா - இன்னும் 

    பலகோடிச் சித்தர்களே சரணமய்யா 

அதிசய மலைக்கோர் சரணமய்யா - பல் 

     ஆயிரம் கோடி சரணமய்யா                                           ( சரணம் )


சித்தனுக்கே சித்தன் அந்த சிவன் தானய்யா -எங்கள் 

   சித்தத்திலே  வந்து குடி புகுந்தானய்யா 

சத்தியமாய் காட்சி தந்து அருள்வானய்யா - எங்கள் 

    சரணங்கள் கேட்டு அவன் வருவானாய்யா                     ( சரணம் )

 

சிவசிவ சிவமென்று சொன்னோமய்யா - அந்த 

    சிவனது பாதம்பற்றிக் கொண்டோமய்யா 

தவமின்றி வரங்களைக் கேட்டோமய்யா  - அதை 

   தரும்வரை சோர்ந்துவிட மாட்டோமய்யா                          ( சரணம் )


                                                                                                                     - சிவகுமாரன் 



தம்பி பிரபாகரனோடு சேர்ந்து சரணம் சொல்லுங்கள் .



  

 









Saturday, March 13, 2021

ஓம் நமசிவாய சிவாய நமஓம்



ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய சிவாய நமஓம் 
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 
ஓம் நமசிவாய சிவாய நமஓம் 

ஆதியும் அந்தமும் இல்லாய் போற்றி
  அணுவிலும் அணுவாய் உள்ளாய் போற்றி.
ஜோதிப் பிழம்பே சுடரே போற்றி
  சோணா சலமே சொக்கா போற்றி 
பாதியில் அம்பிகை கொண்டாய் போற்றி
  பாற்கடல் நஞ்சை உண்டாய் போற்றி.
தீதினை அறுக்கும் தீயே போற்றி
  திருவடி பணிந்தேன்  அருள்வாய் போற்றி .     (ஓம் நமசிவாய)

கண்ணால் காமனை எரித்தாய் போற்றி 
  காலால் காமனை உதைத்தாய் போற்றி .
பண்ணால் கலகம் விளைத்தாய் போற்றி
  பாடகன்  திமிரை தகர்த்தாய் போற்றி 
அண்ணா மலையே அரசே போற்றி 
  ஆரூர் ஆண்ட முரசே போற்றி.
உண்ணா முலையாள் துணைவா போற்றி
  உன்பதம் பணிந்தேன்  அருள்வாய் போற்றி.   (ஓம் நமசிவாய )

ஈசா போற்றி இறைவா போற்றி
  இருளை அகற்றும் ஒளியே போற்றி 
நேசா போற்றி நிமலா போற்றி 
  நினைவில் இரண்டறக் கலந்தாய் போற்றி 
ஆசைகள் ஆணவம் அறுப்பாய் போற்றி
    அறியாப் பிழைகள் பொறுப்பாய் போற்றி.
பாசக் கடலே பரமா போற்றி 
  பாதம் பணிந்தேன்  அருள்வாய் போற்றி        ( ஓம் நமசிவாய )

மூவுல காளும் முதல்வா போற்றி 
  முப்புரம் எரிசெய்த முத்தே போற்றி 
ஆவுடை யப்பா அமலா போற்றி 
  ஆலங் குடித்த அமுதே போற்றி 
நாவுக் கரசின் நாதா போற்றி 
  நான்மறை போற்றும் வேதா போற்றி 
பாவுக் கிரங்கி வருவாய் போற்றி  
  பாவம் தொலைக்க அருள்வாய் போற்றி . ( ஓம் நமசிவாய )

சடையில் நதியால் நனைந்தாய் போற்றி
  சந்திரன் தலையில் அனிந்தாய் போற்றி 
இடையில் புலித்தோல் அணிந்தாய் போற்றி 
  இடபம் ஏறியே அமர்ந்தாய் போற்றி
விடைதெரி யாத புதிரே போற்றி 
  விடியலை உணர்த்தும் கதிரே போற்றி
கடையேன் துயரம் களைவாய் போற்றி
  கழலடி பணிந்தேன்  அருள்வாய் போற்றி.  ( ஓம் நமசிவாய )

நள்ளிருள் நடனம் புரிவாய் போற்றி
  நயனங்கள் பரிவுடன் திறவாய் போற்றி
கள்ளத் தனங்கள் களைவாய் போற்றி 
  கனலாய் நெஞ்சில் எழுவாய் போற்றி 
உள்ளம் கவர்ந்த கள்வா போற்றி 
    உயிரில் கலந்த செல்வா போற்றி 
அள்ளக் குறையா அமுதே போற்றி 
   அழைத்தேன் வருவாய் அப்பா போற்றி.   ( ஓம் நமசிவாய )

மாலவன் அறியா மலரடி போற்றி 
   மாதொரு பாகன் சேவடி போற்றி 
காலனும் கைதொழும் காவலன் போற்றி 
  கன்யா குமரியின் காதலன் போற்றி 
பாலகன் உயிரைக்  காத்தாய் போற்றி 
  பாமரன் துயரம் தீர்ப்பாய் போற்றி 
ஆலயம் தோறும் அலைந்தேன் போற்றி 
   அருள்முகம் காட்டிட வருவாய் போற்றி    ( ஓம் நமசிவாய )

தபசிகள் போற்றும் தவமே போற்றி 
  தருமிக்கு உதவிய தமிழே போற்றி 
சபரி நாதனைத் தந்தாய் போற்றி 
   சங்கம் வளர்த்திட  வந்தாய் போற்றி 
சுபம் தரும் கற்பகத் தருவே போற்றி 
   சுழுமுனை திறக்கும் குருவே போற்றி 
அபயம் அபயம்  என்றேன் போற்றி 
   அரவணைத் திடவே  வருவாய் போற்றி   (ஓம் நமசிவாய )

பித்தா போற்றி பிறையோன் போற்றி 
   பிறவி அறுக்கும் பிஞ்சகன் போற்றி 
 அத்தா போற்றி அரனே போற்றி 
    அரணாய் எம்மைக் காப்பாய் போற்றி 
சித்தம் பலமே சீலா போற்றி 
    சித்தி அளிக்கும் சிவமே போற்றி  போற்றி 
சத்தியம் காக்கும் சங்கரன் போற்றி 
   சரணம் அடைந்தேன் காப்பாய் போற்றி   ( ஓம் நமசிவய

ஓமெனும் பிரணவ  ஒலியே போற்றி 
     உணர்ந்தோர் உள்ளத்து ஒளியே  போற்றி 
காமத்தை அழிக்கும் கனலே  போற்றி
    கருணை  நிறைந்த  கடலே  போற்றி 
நாமங்கள் ஆயிரம் கொணடாய்  போற்றி
  நாதத்தின் வடிவாய் நின்றாய் போற்றி
தாமரை பாதங்கள் பணிந்தேன் போற்றி 
   தாங்கிட வருவாய் தலைவா போற்றி      (ஓம் நமசிவாய )

தாயும் ஆகிய தயவே போற்றி 
   தாயின் சாலப் பரிவே போற்றி 
மாயப்  பிறப்பின் மருந்தே போற்றி 
   மனதுள் மலர்ந்த மலரே போற்றி 
காயக் கடலின் கலமே போற்றி
   கடந்தோர் உள்ளக்  கனிவே போற்றி 
நாயேன் தனக்கும் நயப்பாய் போற்றி 
   ஞானத்தின் நன்மைகள் பயப்பாய் போற்றி   ( ஓம் நமசிவாய )

 தேடற் கரிய தேவே போற்றி 
     தேடக் கிடைக்கும் திருவே போற்றி 
பாடற் கரிய பாவே போற்றி 
   பண்ணில் லயிக்கும் பரமே போற்றி 
ஆடற் கலையின் அழகே போற்றி 
   ஆனந்தத்  தாண்டவ அம்பல போற்றி 
நாடக உலகின் நாயக போற்றி 
   நாயகி துணையுடன் வருவாய் போற்றி  ( ஓம் நமசிவாய )

அருவமும் உருவமும் ஆனாய் போற்றி 
   அகிலத்தை தாங்கும்  தூணே போற்றி 
திருவிளை யாடல்கள் புரிந்தாய் போற்றி 
   திருமுகம் காட்டிட வருவாய் போற்றி 
இருவினை தீர்த்திடும் இறையே போற்றி   
    எனைவைத்துப் பூட்டிடும் சிறையே போற்றி 
கருவினில்  கலந்த துணையே போற்றி 
    கதியென அடைந்தேன் உனையே போற்றி .  ( ஓம் நமசிவாய )

                                                                                                   -  சிவகுமாரன் 
   


                             பிரபாகரனின் குரலில் லிங்காஷ்டகம் மெட்டில்.







Wednesday, March 10, 2021

சரணம் அய்யப்பா

                
             

சரணம்  அய்யப்பா
(ஹரிவராசனம் மெட்டு )

சரணம் அய்யப்பா - சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா - சுவாமி சரணம் அய்யப்பா

அரனின் மோகனம் அரியின் யௌவனம்
 அளித்த சீதனம் அய்யன் உதித்தனன்
பரம தேவனின் பாலன் அய்யப்பன்
  பதங்கள் தேடிஎன் பாடல் அர்ப்பணம் (சரணம்)

வேங்கை வாகனம் விரும்பும் பாலகன்
 விரிந்த கானகம் உறையும் நாயகன் 
தாங்கும் பூமகன் தாளைத் தேடிஎன் 
  தமிழில் கோர்த்திடும் மாலை சமர்ப்பணம்.(சரணம்..)

மாலை அணிந்ததும் வேண்டும் கண்ணியம் 
 மறந்தும் தவறுகள் தவிர்த்தல் புண்ணியம் 
காலை மாலையும் கடவுள் எண்ணமாய்
  காக்கும் விரதத்தால் கருணை திண்ணமாம்.(சரணம்..)

பாதை முழுவதும் பாயும் முட்களாம்
  பாதம்  இடறியே பார்க்கும் கற்களாம்
சோதனைகளைத் தாண்டி அய்யனின்
  சரணம் பாடுங்கள் வாழ்க்கை மலரலாம் ( சரணம்..)

கட்டும் இருமுடி கனப்ப தில்லையே.
   கால்கள் வீங்கியும் வலிப்பதில்லையே.
அட்ட திக்குகள் ஆளும் அய்யப்பன் 
  அருளைப் பொழிவதால் அல்லல் இல்லையே. ( சரணம்...)

பாரம் தலையிலே; பக்தி நெஞ்சிலே 
  பாவக் கணக்குகள் பரமன் கையிலே
வீர மணிகண்டன் பேரைச் சொன்னதும் 
  விதியின் கடுமைகள் விலகிப் போகுமே. ( சரணம்..)

பேட்டைத் துள்ளலில் வேடம் போடுங்கள்.
  பேதம் இன்றியே ஆடிப் பாடுங்கள்.
காட்டுப் பாதையை கடந்து ஓடுங்கள்
   காட்சி  தருகிறான்-(அவனை) கனிந்து தேடுங்கள். (சரணம்..)

பம்பை நதிப்புனல் பாவம் கரைத்திடும்
  படிகள் பதினெட்டும் பாடம் உரைத்திடும்
நம்பி வந்திடில் நலங்கள் சேர்ந்திடும்
  நாளும் வணங்கினால் ஞானம் பிறந்திடும் ( சரணம்..)

பாயும் புலியிடம் பாலைக் கறந்தவன்
  பாவி அரக்கியை அழிக்கப் பிறந்தவன்
நோயும் பிணிகளும் நீக்கும் மருந்தவன்
  நுழைந்து பாருங்கள் (அவன்) இதயம் திறந்தவன் (சரணம்..)

ஜோதி தரிசனம் கோடி புண்ணியம்
  சோகம் துயரங்கள் ஓடும் நிச்சயம்
ஆதி பரமனும் அழகன் விஷ்ணுவும்
  அய்யன்  உருவிலே தோன்றல் சத்தியம். ( சரணம்..)

சாமி அய்யப்பா என்னும் சரணங்கள் 
  சபரி மலையிலே ஒலிக்கும் தருணங்கள்
பூமி கைகளில் அடங்கும் பாருங்கள் 
  புதிய சுகமது உணர வாருங்கள்      ( சரணம்..)

........சுவாமியே......ய்  சரணம் அய்யப்பா......  


சமர்ப்பணம்
சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கும் என் சகோதரர்களுக்கு ...
.
                                                                                               -சிவகுமாரன் 

                                 பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பது .... பிரபாகரன் 


    

Tuesday, January 19, 2021

கலியுக மெய்யா

                         



கலியுக மெய்யா கலியுக மெய்யா 

   கடுந்தவம் புரியும் கலியுக மெய்யா.

கலியுக மெய்யா கலியுக மெய்யா

      கண்திறந் திடுவாய் கலியுக மெய்யா


.திருவட வாளம் உறைந்திடும் அய்யா

   தீவினை போக்கிடும் கலியுக மெய்யா.

அருள்தனை வேண்டி அலைந்தபின் மெய்யாய்

  அணுகினோம் உந்தன் ஆலயம் அய்யா.

கருணைக் கடலே கலியுக மெய்யா 

   கழலடி பணிந்தோம் காப்பாய் அய்யா.

வருந்துயர் எல்லாம் ஆக்கிடு பொய்யாய்.

   வம்சங்கள் தொடர்ந்துனை வணங்கினோம் அய்யா.


சிவனுந்தன் குருவா திருமால் உருவா

  சிவன்அரி ஈன்ற சபரியின் வடிவா

அவனியை அன்பால் அணைத்திடும் தாயா

   ஐம்புலன் அடக்கிய சித்தனும் நீயா.

புவனத்தை வென்ற புத்தனும் நீயா 

  புரியா துன்னை பணிந்தோம் சேயாய்.

தவம்செய்யும் கோலத்தில் அமர்ந்தாய் குருவாய்.

  தவப்பலன் எமக்கே தந்திட வருவாய்.

[

திரைகடல் ஓடி திரவியம் சேர்த்தேன்.

   திசைக்கொரு நபராய் உறவினைப் பிரிந்தேன்

இரைதனைத் தேடி இறகுகள் இழந்தேன்.

   இருப்பதைக் கொண்டு இன்புற மறந்தேன்.

வரைமுறை இன்றி வாழ்க்கையைக் கழித்தேன்.

  வருவதை எதிர்கொள்ள வழியின்றி தவித்தேன்.

கரைதனைத் தேடும் கலம்போல் மிதந்தேன்.

   கலங்கரை விளக்கென உனையே நினைந்தேன்.


 கலியுக மெய்யா கலியுக மெய்யா 

     கடுந்தவம் புரியும் கலியுக மெய்யா.

கலியுக மெய்யா கலியுக மெய்யா

        கண்திறந் திடுவாய் கலியுக மெய்யா.