பரங்குன்றம் சுவாமிமலை
அழகர்மலை செந்தூர் அலை எங்கும் - எங்க(ள்)
ஆறுமுகா உந்தன் அருள் பொங்கும்.
அழகர்மலை செந்தூர் அலை எங்கும் - எங்க(ள்)
ஆறுமுகா உந்தன் அருள் பொங்கும்.
பார்வதியின் வேலெடுத்து
பகைவெல்ல சூளுரைத்து
சூரர்குலம் வேரறுத்துக் கொன்றாய்-அந்தச்
சூரனையும் சேவலாக்கி நின்றாய்.
சூரர்குலம் வேரறுத்துக் கொன்றாய்-அந்தச்
சூரனையும் சேவலாக்கி நின்றாய்.
சுட்டபழம் கேட்ட அவ்வை
செந்தமிழில் நீ மயங்கி
இட்டமுடன் நாவல்கனி பறித்தாய்- அதை
எடுத்தவள் மணல் ஊதச் சிரித்தாய்.
செந்தமிழில் நீ மயங்கி
இட்டமுடன் நாவல்கனி பறித்தாய்- அதை
எடுத்தவள் மணல் ஊதச் சிரித்தாய்.
கண்ணில் காதல் கொப்பளிக்க
கணபதி ஒத்துழைக்க
கன்னிமானைத் தேடுவதாய் துரத்தி - நீயும்
கணபதி ஒத்துழைக்க
கன்னிமானைத் தேடுவதாய் துரத்தி - நீயும்
கவர்ந்திட்டாய் மயங்கினாள் குறத்தி.
புள்ளிமானைத் தேடிக்கிட்டு
பொறுப்பின்றி மெனக்கெட்டு
வள்ளி பின்னே சுத்தி நீயும் திரிந்தால் - உன்னை
வையப் போறார் அப்பனுக்குத் தெரிந்தால். ...
வையப் போறார் அப்பனுக்குத் தெரிந்தால். ...
வேதகுரு பிரம்மனையே
வேதத்திற்குப் பொருள்கேட்டு
சோதித்தது போதுமடா குறும்பா-எம்மைச்
சோதித்திட உந்தன் மனம் இரும்பா?
வேதத்திற்குப் பொருள்கேட்டு
சோதித்தது போதுமடா குறும்பா-எம்மைச்
சோதித்திட உந்தன் மனம் இரும்பா?
அத்தனுக்கேப் பிரணவத்தின்
அரும்பொருள் சொல்லிவைத்த
புத்திரனே ஞானஸ்கந்த குருவே - எங்கள்
புத்தியெல்லாம் உந்தன் எழில் உருவே,
அப்பன் மேலே கோச்சுக்கிட்டு
ஆண்டிக்கோலம் பூண்டுக்கிட்டு
தப்புசெய்ய வேணாமய்யா கந்தா- உன்னைத்
தாங்கிக்குவோம் கீழிறங்கி வந்தா
தப்புசெய்ய வேணாமய்யா கந்தா- உன்னைத்
தாங்கிக்குவோம் கீழிறங்கி வந்தா
உச்சிமலை ஏறிக்கிட்டு
ஒய்யாரமா நின்னுக்கிட்டு
பச்சபுள்ள பேலெதுக்கு ஆட்டம்? - உன்னைப்
பாக்க இங்க காத்திருக்கு கூட்டம்.
பச்சபுள்ள பேலெதுக்கு ஆட்டம்? - உன்னைப்
பாக்க இங்க காத்திருக்கு கூட்டம்.
கோவணத்தக் கட்டிக்கிட்டு
குன்றின்மேலே ஏறிக்கிட்டு
தேவையில்லை இந்தக் கோபம் முருகா - எங்கள்
தேவையெல்லாம் தீர்க்க ஓடி வருவாய்.
தேவையில்லை இந்தக் கோபம் முருகா - எங்கள்
தேவையெல்லாம் தீர்க்க ஓடி வருவாய்.
ஆறுபடை வீடு நோக்கி
ஆறுதலைத் தேடி வந்தோம்
ஆறுதலைக் கொண்ட எங்கள் சாமி- நீயும்
ஆசைமுகம் ஆறிலொன்றைக் காமி.
கந்தா உன்னைப் பாடிக்கொண்டு
கால்வலிக்க ஓடிக்கொண்டு
வந்து நின்றோம் உந்தன் வாசல் தேடி - நீயும்
வழங்கிட வேணும் அருள் கோடி
வந்து நின்றோம் உந்தன் வாசல் தேடி - நீயும்
வழங்கிட வேணும் அருள் கோடி
கால்வலியைத் தாங்கிக்கிட்டு
கண்டதையும் தின்னுக்கிட்டு
வேல்முருகா உன்னைக் காண வந்தோம் - எங்க(ள்)
வேண்டுதலை உன்னிடத்தில் தந்தோம்.
வேண்டுதலை உன்னிடத்தில் தந்தோம்.
சொந்தவேலை விட்டுப்புட்டு
சொந்தங்களைக் கூட்டிக்கிட்டு
கந்தா உன்னைக் காண ஓடி வாரோம்- நீயும்
கண்டுக்காட்டி என்ன செய்யப் போறோம்?
கண்டுக்காட்டி என்ன செய்யப் போறோம்?
வேலையெல்லாம் தள்ளிவச்சு
வேலை மட்டும் நெஞ்சில் வச்சு
வேலவனைக் காண இந்த ஓட்டம் -இப்ப
வேறெதிலும் இல்லை எங்கள் நாட்டம்.
வேலவனைக் காண இந்த ஓட்டம் -இப்ப
வேறெதிலும் இல்லை எங்கள் நாட்டம்.
வெயில்,பனி பார்க்கவில்லை
வெட்டிப்பேச்சு பேசவில்லை
மயிலோனே நீதான் எங்கள் எண்ணம் - உந்தன்
மனதையும் வெல்வோம் அது திண்ணம் .
கார்த்திகேயா உன்னை நாங்கள்
கால்வலிக்கத் தேடிவந்து
பார்த்தவுடன் போகும் வலி பறந்து- எம்மை
பார்த்துவிடு பன்னிருகண் திறந்து.
கால்வலிக்கத் தேடிவந்து
பார்த்தவுடன் போகும் வலி பறந்து- எம்மை
பார்த்துவிடு பன்னிருகண் திறந்து.
பாலசுப்ர மணியனே
பார்வதியின் பாலகனே
காலமெல்லாம் உன்னைப் பாடிக் கிடப்போம் - உன்னைக்
கண்டுவர ஆண்டுதோறும் நடப்போம்.
கண்டுவர ஆண்டுதோறும் நடப்போம்.
தண்டாயுத பாணி உன்னைத்
தமிழ்கொண்டு பாடுதல்போல்
உண்டோ வேறு இன்பங்களும் எமக்கு- இதில்
உண்மை சொல்லு இஷ்டம் தானே உமக்கு(ம்)?
தமிழ்கொண்டு பாடுதல்போல்
உண்டோ வேறு இன்பங்களும் எமக்கு- இதில்
உண்மை சொல்லு இஷ்டம் தானே உமக்கு(ம்)?
கண்ணு ரெண்டும் பூத்துப் போச்சு
காலு கையி வேத்துப் போச்சு
ஒண்ணுமில்லை எமக்கிந்த வாட்டம் -நாங்க
உன்னை சும்மா விட்டு விட மாட்டோம்.
காலு கையி வேத்துப் போச்சு
ஒண்ணுமில்லை எமக்கிந்த வாட்டம் -நாங்க
உன்னை சும்மா விட்டு விட மாட்டோம்.
-சிவகுமாரன்
என்னை எழுத வைத்ததும் , என் தம்பி பிரபுவை பாட வைத்ததும்
அந்த அழகன் முருகனே.