Friday, November 2, 2012

நாமபுரீஸ்வரா!


ஆதி அந்தமில் லாத பரம்பொருள் ஆன பேரூர் ஆண்டவா!
   அறம் வளர்த்திடும் நாயகியுடன் ஆடும் ஆனந்த தாண்டவா!
பாதி மதி நதி போது மணி சடை பாம்பு மாலையும் பூண்டவா!
  பாச மிகுதியால் பார்வதி தனை பாதி தேகத்தில் கொண்டவா!
ஜோதி வடிவமாய் தீபரூபமாய் தோற்றம் காட்டி நின்றவா!
  தூய நெஞ்சிலே தீபம் ஏற்றுவோர் சோதனைகளைக் கொன்றவா!
ஆதி நாள்முதல் அறம் வளர்த்திடும் அழகு ஆலங் குடிதனில்    
  அன்னை தர்மசம் வர்த்தினி யுடன் அருள்தரும் நாமபுரீஸ்வரா!

நீறணிந்தவர் நேசம் மிக்கவர் நெஞ்சில் நின்றிடும் நற்றவா!
  நீசர் வஞ்சகர் நேசமற்றவர் நெஞ்சில் தீயினைப் பற்றவா! 
ஏறுமயிலினில் ஏறும்  முருகனை இதயம் மகிழ்ந்திடப் பெற்றவா!
  இளையனாயினும் மகனை குருவென ஏற்று மந்திரம் கற்றவா!
கூறும் அடியவர் குறைகள் தீர்த்திடும் கொற்றவா, எனை உற்றவா!
  கூற்றை உதைத்த உன் பாதமிரண்டையும் காட்டி என்வினை செற்றவா!
ஆறு அம்புலி ஓடிப் பாய்ந்திடும் அழகு ஆலங்குடி தனில்
  அன்னை தர்மசம் வர்த்தினி யுடன் அருள்தரும் நாமபுரீஸ்வரா!

தஞ்சமென்று உன் பாதம் தேடிய மார்க்கண்டேயனைக் காத்தவா!
  தருமி யென்னும் ஓர் ஏழைப் புலவனின் வறுமை நீக்க கவி யாத்தவா !
நஞ்சைக் கண்டதும் அஞ்சி ஓடிய தேவர் வாழ நஞ்சுண்டவா!
  நாயன்மார்களின் அன்பை சோதிக்க வேடம் ஆயிரம் பூண்டவா!
கொஞ்சு தமிழ்க்கவி கூறக் கேட்டதும் கோயில்வாசல் திறந்தவா!
   கெஞ்சும் என்கவி கேட்டு என்மனக் கோயில் வாசல் திறந்து வா!
அஞ்செழுத்தையே நெஞ்சில் ஏற்றிடும் அழகு ஆலங்குடி தனில் 
   அன்னை தர்மசம் வர்த்தினி யுடன் அருள்தரும் நாமபுரீஸ்வரா!

வானை நிகர்த்தவன் வையம் நிறைந்தவன் வானவர் ஏத்தும் மறையவா!
  வாட்டும் நோய்களும் வறுமைப் பேய்களும் வையம் தன்னிலே மறையவா!
மானை மழுவினை ஏந்தும் மன்னவா மண்ணில் உன்முகம் காட்டவா!
  மாலும் தேடிய மலரடி தனை காட்டி என்துயர் ஓட்ட வா!
தேனை நிகர்த்ததாம் செந்தமிழ் தனில் சிந்தை மகிழ்ந்திடும் இறையவா!
  தேவி தர்மசம் வர்த்தினியுடன்  தீந்தமிழ் கேட்டு இசைய வா !
ஆனை கட்டியே போரடித்த ஊர் அழகு ஆலங்குடி தனில்
  அன்னை தர்மசம் வர்த்தினி யுடன் அருள்தரும் நாமபுரீஸ்வரா!


ஆலின் கீழமர்ந் தேழுலகையும் ஆளும் தட்சிணா மூர்த்தி நீ.
  அமரர் முக்தி நீ! அணுவின் சக்தி நீ! அளவிலாத ஓர் கீர்த்தி நீ!
மாலின் தங்கையை மணம் முடித்தவன், மங்கை சக்தியின் பாகன் நீ!
  மாறன் அம்புகள் மேல் விழுந்திட மாறுகொண் டெரித்த சூரன் நீ!
வேலின் சக்தியால் வினை யறுத்திடும் வேலனைப் பெற்ற தந்தை நீ!
  வேழ முகத்தொரு பிள்ளை வடிவினில் வெற்றி தந்திடும் விந்தை நீ!
ஆலின் வேரென அருள் தழைத்திடும் அழகு ஆலங்குடி தனில் 
  அன்னை தர்மசம் வர்த்தினி யுடன் அருள்தரும் நாமபுரீஸ்வரா!

நீண்ட வானமும் நீரும் நிலங்களும் நெருப்பும் காற்றும் நீயன்றோ!
  நேற்றும் நாளையும் இன்றும் உலகினில் நிகழும் மாற்றம் நீயன்றோ!
மாண்டு மடிவதும் மீண்டும் பிறப்பதும் மாயன் உந்தன் செயலன்றோ!
  மாறும் உலகினில் மாற்றம் யாவுமே மாறச் செய்வதும் நீயன்றோ!
வேண்டும் வரங்களை வேண்டும் முன்னரே விரும்பித் தருவதும் நீயன்றோ!
  வேண்டும் அடியவர் வேண்டும்  வரங்களை வேண்டச்  செய்வதும்  நீயன்றோ!
ஆண்டு தோறும் உன் அருளைப் பாடிடும் அழகு ஆலங்குடி தனில் 
  அன்னை தர்மசம் வர்த்தினி யுடன் அருள்தரும் நாமபுரீஸ்வரா!

-சிவகுமாரன் 



சுப்புத் தாத்தா பாடுவைதையும் கேளுங்கள் 



Tuesday, August 28, 2012

குறைபொறுத் தருள்வாய் அப்பா.





நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க வேண்டும் 
அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும் 

சபரிமலை வாழும் எங்கள் சாஸ்தாவே சரணமய்யா
  சன்னதி தேடிவந்தோம் சங்கடம் தீருமய்யா 
அபயமென  வந்து நின்றோம் அல்லல்கள் சொல்ல வந்தோம்
  ஐயப்பா என்ற சொல்லில் அகிலமே மறந்தோமய்யா 
தபசிகள் போல நாங்கள் தவக்கோலம் பூண்டோமய்யா
  தவறுகள் ஏதும் கண்டால்  தயைகூர்ந்து பொறுப்பாய் அய்யா
சுபமான வாழ்வைக் கேட்டோம் துயரங்கள் தீரக் கேட்டோம்
   சுமைகளைக் குறைப்பாய் எங்கள் சுவாமியே சரணம் அய்யா.

அய்யப்பா ! அய்யா! அப்பா ! அபயமென வந்தோம் அப்பா
  அனுதினம் வேண்டுகின்றோம் அருளினால் என்ன தப்பா?
பொய்யப்பா வாழ்க்கையெல்லாம் புரட்டப்பா காண்பதெல்லாம்
  புரியாமல் தவித்தேன் நீயும் புதிர்காட்ட வேண்டாமப்பா
மெய்யப்பா! எந்தன் பக்தி மிகையில்லை மெய்தானப்பா
 மேன்மேலும் சோதித் தென்னை மிரட்டினால் தாங்காதப்பா
செய்யப்பா நன்மை ஏதும்! சோதித்த தெல்லாம் போதும்.
  சிறியவன் வாழ்வைக் கொஞ்சம் சீராக்கு அய்யா அப்பா !

மந்திரம் செபித்ததில்லை மாதவம் செய்ததில்லை
  மாலையணி  காலமன்றி  மனமுனை   நினைத்ததில்லை
சிந்தையில் சிவனேயன்றி சிறுதெய்வம் யாருமில்லை
  சிவநாமம் அன்றி ஏதும் செபித்திடும் பழக்கமில்லை
எந்தையாம் சிவனின் பிள்ளை என்பதால் நீயும் சிவமே
  என்று நான் உன்னைத் தேடி இருமுடி தாங்கி வந்தேன்
குந்தி நீ அமர்ந்திருக்கும் கோலத்தைக் கண்ட பின்னே
  குருவெனப் புரிந்து கொண்டேன், குறைபொறுத் தருள்வாய் அப்பா.                

அப்பனாம் சிவனை நானும் அனுதினம் வேண்டி வந்தேன்-
   அன்னையாம் மாலனுக்கும் அருந்தமிழ் பாடிவைத்தேன்
தொப்பையார் அண்ணன் பாதம் தொடர்ந்துநான்  தொழுது வந்தேன்
   தோகைமயில் சோதரன் கேட்க தேன்தமிழ் விருந்து வைத்தேன்
முப்போதும் இறையைப் பாடும் முனைப்போடு வாழுகின்றேன்
  முத்தமிழ் கேட்ட இறையின் முடிவென்ன நானும் அறியேன்
இப்போது உன்னைப் பாடி இருமுடி தாங்கி வந்தேன்.
  எல்லோரும் போல நீயும் இருப்பாயோ அறியேன் அய்யா.

இருமுடி தலையில் தாங்கி  இதயத்தில் உன்னை ஏந்தி
  எழில்முகம் காணவேண்டி  ஏங்கியே வந்தோமய்யா
திருவடி தன்னைக் கண்டால் தீவினை போகுமென்றே
  தினமுந்தன் நாமம் சொல்லி தேடியே வந்தோமய்யா
ஒருமுறை வந்தால் போதும் உள்ளத்தில் நீபுகுந்து
  உடலோயும் காலம் வரையில் உனைத்தேட வைப்பாய் அன்றோ?
கருணையின் வடிவே எங்கள் கவலையின் முடிவே உந்தன்
  கழலடி போற்றுகின்றோம் காத்திட வருவாய் அய்யா.

அரியினை வணங்குவோர்கள் அரன்பதம் நினைப்பதில்லை
  அரன்புகழ் பாடுவோர்கள் அரியினைத் துதிப்பதில்லை 
அரிதாக  அவனிதன்னில் அவதாரம் கொண்டநீயோ
  அரிஹர  மைந்தனாகி அதிசயம் காட்டுகின்றாய் 
பரிவோடு காக்க வந்த பரந்தாமன் அம்சம் நீயே.
  பகையினை அழிக்க வந்த பரமசிவன்  வம்சம் நீயே. 
சரிவரப் புரிந்து கொண்டால் சமயத்தில் பேதம் இல்லை 
  சபரியில் வந்து நின்றால் சமயத்திற் கேது எல்லை?

புலிப்பாலைக் கறந்த உந்தன் பொல்லாத வீரம் வேண்டும்.
  பொன்பொருள்  துறந்து சென்ற பொறுமையின் ஈரம் வேண்டும்.
கலிகால   பாவம்  நெஞ்சைக் கவராத நிலையும் வேண்டும்
  கடல்போலும் செல்வம் கண்டும் கனக்காத தலையும் வேண்டும்
பொலிவான தேகம் வேண்டும் புயல் போலும் வேகம் வேண்டும்
  பொய்க்காத மேகம் வேண்டும் பூந்தமிழ் தாகம் வேண்டும்.
மலிவான சுகங்கள் தன்னில் மயங்காத மோகம்  வேண்டும்.
 மற்றுமோர் பிறவி இல்லா மட்டிலா யோகம்  வேண்டும். 

கையிலே சேரும் செல்வம் கரையாமல் நிற்க வேண்டும்.
  கடனின்றி வாழ்வை ஓட்டும் கணிதங்கள் கற்க வேண்டும்.
பொய்யிலே புரள்வோர் தம்மை புரிந்துநான் வில(க்)க வேண்டும்
  பொன்மனம் கொண்டா ரோடு  பொருள்தந்தும் கலக்க வேண்டும் .
பையவே எந்தன் வாழ்வின் பரிமாணம் மாற வேண்டும்.
  பைந்தமிழ் பாடிப் பாடி பரமனைச் சேர வேண்டும் 
அய்யப்பா  உன்மேல் இட்ட ஆணைகள்  பலிக்க வேண்டும்.
  ஆலயந்  தோறும் எந்தன் அருந்தமிழ் ஒலிக்க வேண்டும். 

வன்புலி ஏறிவந்த வைத்திய நாதா போற்றி
  வையத்தில்  புதிதாய் வந்த "வைணவச் சைவா" போற்றி 
அன்பிலே சிவத்தைக் காணும் அரனவன் வித்தே போற்றி
  அறிதுயில் காணும் அந்த அரங்கனின் முத்தே போற்றி
ஒன்பது கோள்கள் தாக்கம் ஓய்ந்திட வைப்பாய் போற்றி 
  ஓயாது தொழுவோர் நெஞ்சில் ஒளியாகி நிற்பாய் போற்றி 
மன்பதை உயிர்கட் கெல்லாம் மன்னவா போற்றி போற்றி 
  மலரடி தொழுதோம் காப்பாய் மணிகண்டா போற்றி போற்றி 

கரிமலை நாதா போற்றி கலியுக வரதா போற்றி
  காட்டிலே உறைவாய் போற்றி கருணையைப் பொழிவாய் போற்றி
அரியணை துறந்தாய் போற்றி அரக்கியை அழித்தாய் போற்றி
  அரிஹர சுதனே போற்றி அய்யப்பா போற்றி போற்றி 
சொரிமுத்து அய்யா போற்றி சுந்தர வடிவே போற்றி
  சோதியாய்த் தெரிவாய் போற்றி சுகங்களைத் தருவாய் போற்றி
சரிவிலா  வாழ்க்கை தருவாய் சந்தனப் பிரியா போற்றி 
  சகமெலாம் காக்கும் எங்கள் சங்கரன் புதல்வா போற்றி. 

மகிஷியை போரில் வென்ற மாமணி கண்டா போற்றி
  மாளிகைப் புறத்து அம்மன் மனங்கவர் மன்னா போற்றி
சகிப்போடு  மகுடம் தள்ளி சன்யாசம் பூண்டாய் போற்றி
  சபரியில் கோயில் கொண்ட சாஸ்தாவே போற்றி போற்றி
தகிக்கின்ற மகரஜோதி தணலிலே எரிவாய் போற்றி
  தளும்பிடும் பம்பையாற்றுத் தண்ணீரில் தெரிவாய் போற்றி
அகிலத்தைக் காக்க வந்த அரிஹர மைந்தா போற்றி
  அருள்மழை பொழிவாய் எங்கள் அய்யப்பா போற்றி போற்றி.

வீரமணி கண்டா போற்றி வேங்கைவா கனனே  போற்றி
  வேலவன்  தமையா போற்றி வேதனை தீர்ப்பாய் போற்றி
தாரமொன் றில்லாய் போற்றி தவமணிச் செல்வா போற்றி 
  தாருக வனத்தா போற்றி தாங்கிட வருவாய் போற்றி
பாரங்கள் குறைப்பாய் போற்றி பாவங்கள் பொறுப்பாய் போற்றி 
  பந்தள  அரசே போற்றி பம்பையின் பரிசே போற்றி 
ஆரண்ய வாசா போற்றி ஆரியங் காவா போற்றி 
  ஆனந்த  ரூபா போற்றி அய்யப்பா போற்றி போற்றி .

    -சிவகுமாரன் 

பாடியிருப்பவர் - பிரபாகரன் 
  

Tuesday, July 24, 2012

ஏழுமலை வாசா


நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க வேண்டும் 
அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும் 


ஏழுமலை  வாசா எங்கள் இதயமதில் வாழும் நேசா
  இலக்குமியின் தாசா நெஞ்சம் இரங்குவாய் சீனிவாசா
வாழும் உயிர் அத்தனைக்கும் வாழ்வளித்து காக்கும் ஈசா
  வருகிறோம் உன்னை நோக்கி வர(ம்)வேண்டும் வரதராசா
பாழும் இந்த உலகின் பாவம் போக்கிடும் பாப நாசா
  பாதங்கள் பணிந்தோம் உந்தன் பார்வையைக் காட்டு இலேசா
சூழுகின்ற துயரம் எல்லாம் சுக்கு நூ றாக்கி தூசாய்
  சுகமாக்கு எங்கள் வாழ்வை திருமலை வெங்க டேசா !


பன்னிரு ஆழ்வார் போல பாடிடும் புலமை இல்லை
  பாயிரம் கீர்த்தனை சொல்லி பணிந்திடும் பொறுமை இல்லை
உன்னையும் பங்கில் சேர்க்க ஓகோவென தொழிலும் இல்லை
  உண்டியல் தன்னில் கொட்ட ஒன்றுமே கையில் இல்லை.
என்னிடம் வாங்கிக் கொள்ள நீயொன்றும் ஏழை இல்லை
  எனக்கீந்தால் உந்தன் செல்வம் எள்ளளவும் குறைவதில்லை.
மன்னிய செல்வம் எல்லாம் மட்காதோ சேர்த்து வைத்தால்?
  மகிழாதோ மண்ணுயிர் எல்லாம் மாலவா மனது வைத்தால்!


அனுதினம் உன்னைப் பாட அடியேனும் ஆண்டாள் இல்லை
  அவல்தந்து செல்வம் வாங்க அட நானும் குசேலன் இல்லை
கனவிலும் உன்னைக் கொஞ்ச கண்ணாநான் கோபியர் இல்லை
  கடமைசெய் பலனில்லை என்றால் கேட்கநான் அர்ச்சுனன் இல்லை
தினமுந்தன் நாமம் சொல்லித் திரியநான் நாரதன் இல்லை
  திறந்து என் நெஞ்சில் உன்னைக் காட்ட நான் அனுமனும் இல்லை.
மனதிலே ஒருநொடி எண்ணி மறுவேலை பார்க்கப் போகும்
  மனிதன்நான் என்துயர் போக்க மாதவா மனமா இல்லை?


போதுமெனச் சொல்லும் வரையில் பொன்பொருள் சேர்க்க வேண்டும்
  போதாது வாழ்வோர்க் குதவி புண்ணியம் சேர்க்க வேண்டும்.
பாதையில்  இடறும் கற்கள்  படிக்கற்கள் ஆக வேண்டும
  பாதையில் தடம் பதித்து பயணத்தை முடிக்க வேண்டும்.
மோதுவது மலையே எனினும் மோதி நான் பார்க்க வேண்டும்
  முயல்கிற செயல்கள் எல்லாம் முடித்து நான் காட்ட வேண்டும்
வேதனை ஏதுமின்றி விண்ணகம் ஏக வேண்டும்
  வேறொரு கருவில் மீண்டும் வாராது போக வேண்டும்.


மாதவா கண்ணா போற்றி , மாலவா கிருஷ்ணா போற்றி
  மார்பிலே திருமகள் உறையும் மலரவா போற்றி போற்றி
கோதண்ட ராமா போற்றி கோவிந்த ராஜா போற்றி
  கோகுல வாசா போற்றி கோபாலா போற்றி போற்றி
சீதை மண வாளா போற்றி ஸ்ரீரங்கா நாதா போற்றி
  ஸ்ரீதேவி கடைக்கண் காட்ட திருவருள் புரிவாய் போற்றி
வேதத்தின் தலைவா போற்றி வேதனை தீர்ப்பாய் போற்றி
  வேண்டியது எல்லாம் தருவாய் வேங்கடா போற்றி போற்றி!


-சிவகுமாரன் 

பாடியிருப்பவர் --- பிரபாகரன் 
சமர்ப்பணம்: சென்னையிலிருந்து  திருப்பதி வரை பாதயாத்திரை செல்லும் என் சித்தப்பா திரு.அரசு உள்ளிட்ட ஆன்மீக அன்பர்களுக்கு.         

Sunday, June 17, 2012

சிவாயநம என்போம்


சிவாயநம சிவாயநம சிவாயநம என்போம்
சிவாயநம எனவோதிட உருண்டோடிடும் துன்பம்

அரிதேவனும் அடிதேடியே அகழ்ந்தே புவிபோனான்
விரிவானிலே முடிதேடியே விரைந்தும் அயன்காணான்
சரிபாதியில் உமையாளுடன் சமமாகிய தேவா
திரிசூலமும் நதிநாகமும் திகழ்ந்தோங்கிட நீ வா!

ஆலங்குடியானே உனக்(கு) ஆளாயினன் யானே.
ஞாலம் எதிர்த்தாலும் உனை நாளும் தொழுவேனே
காலன்தனை கடிந்தேகியே காலால் உதைத் தாயே
காலங் கடத் தாமல் எனை கரைசேர்த்திடு வாயே

மதிசூடியும் மலர்சூடியும் மழுவேந்தியும் வருவாய்
நதிசூடியும் குளிராதஉன் நுதல்கண்ணைத் திறவாய்
கதிர்வேலனும் கணநாதனும் புடைசூழ்ந்திட வருவாய்
விதி சூழ்ந்திடும் அடியேன்வினை விரைந்தோடிட அருள்வாய்.

கண்கேட்டதும் கறிகேட்டதும் கவிகேட்டதும் ஏனோ?
பெண்கேட்டதும் உருமாற்றியே பேயாக்கிய தேனோ?
மண்போட்டுமே நதிசீறிய மதுரைநகர் நாதா
பண்கேட்டதும் மனம்மாறியே பலன்அள்ளியே நீ தா  

காதல்மனை யாட்டிக்கென உடல்பாதியைத் தந்தாய்
வாதம்செய்ய தமிழேயொரு வடிவாகவே வந்தாய்
வேதம்உணர் முனிவோர்களும் விளங்காப் பொருள் ஆனாய்
பாதம்தொழும் அடியேன் முகம் பாராதேன் போனாய்?


நீராகியும் நெருப்பாகியும் நிலமாகியும் நின்றாய்
கார்வானிலே காற்றாகியும் ககனங்களை வென்றாய்
பாராண்டிடும் பரமா வினை, பாவங்களைக் கொய்வாய்
யாராகினும் எனை வென்றிட இயலாதெனச் செய்வாய்


கடல்,மாமலை நீயே-வான் கதிர் மாமழை நீயே
மடல் தேன் மலர் நீயே -அதன் மணம் பேரேழில் நீயே
உடல் ஆனதும் நீயே - அதன் உயிர் ஆனதும் நீயே
நடராஜனே நீயே - என் நலம் காத்திடுவாயே


நீயே கதி நீயே விதி நீயே சரண் என்றேன்
தாயேஎன தந்தையேஎனத் தாளைத் தொழு கின்றேன்
ஈயேன் என இரங்காமலே இருந்தால் அது முறையோ?
நாயேனையும் பொருட்டாகவே நீ எண்ணுவ திலையோ?


சிவமே உயர் பரமே என தினமும் உனைத் தொழவே
நவகோள்களின் இடையூறு எனை நெருங்காதிடச் செய்வாய்
புவனேஸ்வரி மணவாளனே புகழ்ந்தே உனைப் பாட
தவ வேள்வியின் பலன் கோடி என் தமிழால் பெறச் செய்வாய்.


உனையே தினம் தொழுதே மனம் உருவேறிட வேண்டும்.
எனையே உனதடியான் என இனி கூறிட வேண்டும்
நினைவே சிவமயமாய் உளம் நிறைவைத் தர வேண்டும்.
புனையும் கவிமொழியால் உனைப் புகழ்ந்தேன் வர வேண்டும்.


சிவாயநம சிவாயநம சிவாயநம என்போம்
சிவாயநம எனவோதிட உருண்டோடிடும் துன்பம்


-சிவகுமாரன்

Tuesday, April 24, 2012

சிவவெண்பா

அள்ளக் குறையா அமுதமென இன்பங்கள்
உள்ளம் நிறைய வழிந்தோடி- வெள்ளமென
பாயுமாறு செய்ய பணிவோடு ஏத்துவோம்
தாயுமான ஈசனின் தாள்.

அல்லல் தொலைந்தோட அம்பலத்தான் நாமத்தை
சொல்லித் துதித்துச் சுடரேற்றி- தில்லை
நடராசன் பாதங்கள் நாளும் துதிப்போம்
அடடா அதுவே அறம்.

பொன்னம் பலத்தானை பூலோகம் காத்தானை
அண்ணா மலையானை ஆரமுதப்- பண்ணாலே
பாடிக் களிப்பேன்நான்! பாட்டில் சிவத்தையே
தேடித் திளைப்பேன் தினம்.


அஞ்செழுத்து மந்திரத்தை அன்றாடம் உச்சரித்து
தஞ்சமென ஈசனவன் தாள்சேர் - நெஞ்சே
சிவனை மறவாதே ! சீரோடு வாழ
அவனே உனக்கு அரண்.


இறவாப் புகழ்கேட்டேன்! ஈரேழு ஜென்மம்
மறவா மனங்கேட்டேன்!மீண்டும் -பிறவா
வரங்கேட்டேன் அய்யா! வசமாகி எனக்கு
இரங்கினால் இல்லை இடர்.


தரங்குன்றிப் போகா தமிழ்கொண்டு வாழ்த்தி
வரங்கேட்டுப் பார்ப்பேன் வணங்கி! -இரங்காது
போனாலும் போகட்டும்! பூந்தமிழ்ப் பாவொன்று
ஆனாலே அய்யன் அருள்.


-சிவகுமாரன் 



அய்யா சுப்புரத்தினம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். 




Friday, March 9, 2012

செந்தூர் முருகா



நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க வேண்டும்
அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும்

வெற்றிவேல் முருகா கந்தா, வேலவா செந்தில் குமரா
   வேலினை ஏந்தி வந்தோம், விழிகளைத் திறந்து பாராய்
கொற்றவை புதல்வா பாலா, கோலமயில் ஏறிடும் அழகா,
   கூட்டமாய் காண வந்தோம், குறைகளைத் தீர்க்க வாராய்
மற்றவை எல்லாம் நாங்கள் , மறந்து(ன்)னைக் காண வந்தோம்
   மயிலோனே கொஞ்சம் எங்கள் மனதோடு பேச வாராய் .
ஒற்றுமை யாக வந்தோம், ஊரோடு சேர்ந்து வந்தோம்
   உன்பதம் காண வந்தோம், ஓடோடி வாராய் கந்தா !

செந்தூரின் கடலின் ஓரம், சில்லென்ற அலையின் ஈரம்
  தெறித்திடும் அந்த நேரம் , சிதறாதோ நெஞ்சின் பாரம்?.
சிந்தையில் முருகா உந்தன் சிங்கார முகத்தை நாளும் 
   சிந்தித்து கடக்கும் தூரம் சிறுதூரம் ஆகிப் போகும்
வெந்திடும் வெயிலின் அனலும் வாட்டிடும் பனியின் குளிரும்
   வேலனே உன்னைக் காணும் வேட்கையில் மறைந்தே போகும். .
வந்ததுயர் எல்லாம் உந்தன் வாசலில் வந்து சொன்னால் 
  வான்கதிர் முன்னே பனியாய் வழியின்றி உருகி ஓடும்.  
  
கடமைகள் ஆற்ற வில்லை, காசுபணம் பொருட்டே இல்லை 
  கந்தனே உன்னைக் காண, காலங்கள் பார்க்க வில்லை .
நடப்பது நடக்கட்டும் என்று நடக்கிறோம் உன்னைக் காண ,
   ஞானவேல் காட்டும் பாதை, நம்பாதை என்றே தோண.
கடம்பனே என்று சொன்னோம் கால்வலி தோணவில்லை
  கதிர்வடி  வேலா என்றோம்,  கடப்பதும் தூரம் இல்லை .
கடலோரம் கோயில் கொண்ட கடவுளே செந்தூர் முருகா
  காலங்கள் தோறும் உந்தன் காலடி பணிந்தோம் வாராய்.

வள்ளிமேல் வைத்த காதல் விழிகளால் நோக்க வேண்டும்.
  வஞ்சகன் சூரனைக் கொன்ற கரங்களால் காக்க வேண்டும்
துள்ளிவரும் வேலைக் கொண்டு துயரங்கள் ஓட்ட வேண்டும்,
   தோகைமயில் ஏறி வந்து , தூயமுகம் காட்ட வேண்டும்.
உள்ளத்தில் தெளிவு வேண்டும், உடலினில் உறுதி வேண்டும்.
   உன்நாமம் சொல்லிச் சொல்லி  ஊழ்வினை தாண்ட வேண்டும்.
வள்ளலே செந்தூர் முருகா, வருகிறோம் உன்னை நோக்கி
   வளமாக்கு எங்கள் வாழ்வை, வருகின்ற தடைகள் நீக்கி .

முப்புரம் எரித்த அப்பன் மும்மலம் எரிக்க வேண்டும்.
  மூவடி பெற்ற மாமன் , முன்னின்று காக்க வேண்டும்.
தொப்பையார் அண்ணன் துணையால் தொட்டது துலங்க வேண்டும்
   துர்க்கையாம் உந்தன் அன்னை, துணையாகி நிற்க வேண்டும்
அப்பனே உன்னி டத்தில் அடக்கமாய் கேட்ட பாடம் 
    அகந்தையால் பிரம்மன் அன்று அகப்பட்டு உணர்ந்த பாடம்
சுப்பிர மணியா எனக்கு சொல்லியே ஆக வேண்டும்
  சூழ்ந்திடும் வினைகள் எல்லாம் சொல்லாமல் போக வேண்டும்.

திரைகடல் மணலைப் போலே தீராத செல்வம் வேண்டும்.
  தேடிப்போய் தர்மம் செய்து, தீவினை போக்க வேண்டும். 
கரைதேடிக் களைத்துப் போகா, கடல்அலை போல நானும்  
 காலங்கள் தோறும் உந்தன் கருணையைப் பாட வேண்டும் .
இரைதேடி தேடித் தேடி எஞ்சியது ஒன்றும் இல்லை .
   எத்தனை காலம் இன்னும் ஏங்கிட வைப்பாய் அய்யா ?
நரைகூடிக் கிழடாய் ஆகி நரம்பெலாம் தளரும் முன்னே,
   நான்கொண்ட கடமை தீர்க்க நல்லருள் செய்வாய் அய்யா.
   
தீயாகி காற்றாய் மண்ணாய், திரைகடல் நீராய் விண்ணாய்
   திசையெங்கும் தெரிவ தெல்லாம், திருச்செந்தூர் முருகா நீயே
ஓயாமல் இரையும் கடலின், ஒலியினில் முருகா உந்தன் 
   ஓமென்னும் மந்திரம் தான் உண்மையாய் கேட்குதையா .
வாயார பாடும் தமிழின் வார்த்தைகள் எல்லாம் உந்தன் 
   வடிவத்தைக் கண்டு  சொக்கி, வாய்பொத்தி நிற்குதையா .
தாயாக தந்தை குருவாய் தலைவனாய் உனையே எண்ணி  
   தஞ்சமென வந்தோம் எம்மைத் தாங்கிட வேண்டுமையா .

நாவினில் நீயே தந்த நற்றமிழ் கவிதை உண்டு.
  நடக்கின்ற பாதை தோறும் ஞானவேல் ஒளியும் உண்டு.
ஆவியில் கலந்த அப்பன் அஞ்செழுத்து மந்திரம் உண்டு 
   அஞ்சாதே என்று சொல்லும் அன்னையின் சக்தி உண்டு.
கோவிந்த மாமன் பாதம் கூவி நான் தொழுவதுண்டு  
   கோயில்கள் பலவும் சென்று கும்பிட்டு அழுவதுண்டு 
பூவினில் உறைவாள் அருள்தான் போதாத குறையும் உண்டு.
   பொன்மகள் மாமியிடம்நீ போய்ச் சொன்னால் புண்ணியம் உண்டு. 

இரும்பென தேகம் வேண்டும் இளகிடும் இதயம் வேண்டும்
   இருக்கின்ற காலம் வரையில் இடரிலா வாழ்க்கை வேண்டும்
அரும்பிடும் மலரின் இதழாய் அணைக்கின்ற சுற்றம் வேண்டும்.
   அகிலமே எதிர்க்கும் போதும் அகலாத நட்பு வேண்டும் .
கரும்பென இனிக்கும் தமிழின் கற்கண்டு சொற்கள் வேண்டும்
  கந்தாஉனைப் பாடும் பாடல் காலத்தை வெல்ல வேண்டும்
வரும்போது மரணம் தன்னை வரவேற்கும் உள்ளம் வேண்டும்
   வையத்தில் மற்றோர் பிறவி வாராத வரமும் வேண்டும். 

எந்தையே இறைவா போற்றி எனையாளும் தலைவா போற்றி.
   ஈசனின் மைந்தா போற்றி இடர்களைக் களைவாய் போற்றி 
கந்தனே கடம்பா போற்றி காத்திட வருவாய் போற்றி 
   கணபதி தமையா போற்றி கவலைகள் தீர்ப்பாய் போற்றி.
சுந்தர வடிவே போற்றி சுகமெலாம் தருவாய் போற்றி 
   சூரனை அழித்தாய் போற்றி துயரங்கள் அறுப்பாய் போற்றி.
செந்தில்வேல் குமரா போற்றி சிந்தையில் உறைவாய்  போற்றி  
   சேவற்கொடி உடையாய் போற்றி  சேவடி பணிந்தேன் போற்றி 

                                                                                                           -சிவகுமாரன் 
                                                  தம்பியுடையான் பாட்டுக்கஞ்சான்

 ( 2012 பிப்ரவரி பழனி பாதயாத்திரையின் போது எழுதியது ) 

பொன்மகள் மாமியிடம்நீ போய்ச் சொன்னால் புண்ணியம் உண்டு

 


Wednesday, February 22, 2012

மாலவன் காணா மலரடி


ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நமஓம் 
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நமஓம் 


நீரெனவாகி நிலமெனவாகி 
   நெடுவானாகி காற்றாகி    
   நெருப்பெனவாகி பொருப்பெனவாகி 
   நீள்கடலாகி கதிராகி 
கார்முகிலாகி கடும்புயலாகி 
   கனமழையாகி தருவாகி 
   காயெனவாகி கனியெனவாகி 
   விதையெனவாகி விரிவோனே! 
பூரணமாகி பூஜ்ஜியமாகி 
   புவிமிசை புதிராய் தெரிபவனே 
   புதியனவாகி பழையனவாகி  
   புதுமைகள் தினந்தினம் புரிபவனே
மாரனின் கணைகள் மேல்விழ சினந்தே 
   மறுகணம் விழியால் எரித்தவனே 
   மாதொரு பாகா , மாலவன் காணா 
   மலரடி தொழுதேன் அருள்வாயே!

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நமஓம் 
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நமஓம் 


                                                                                                                             -சிவகுமாரன் 


                                  பாடியிருப்பவர்:  சிவ.தேன்மொழி  
  
  அய்யா சுப்புரத்தினம் பாடுவதையும் கேட்டு இன்புறுங்கள் 




Friday, January 6, 2012

அரங்கனே நாராயணா.



பாயிரம் கீர்த்தனை பல்லாண்டு பாடிடும்
  பழக்கமிலை நாராயணா
  பன்னிரு ஆழ்வாரின் பாசுரம் ஒன்றையும்
  படித்ததிலை நாராயணா
வாயினால் மந்திரம் வரிசையாய் ஓதிடும்
  வழக்கமிலை நாராயணா .
  வருகின்ற இலாபத்தில் ஒருபங்கு உனக்கீந்தும்
  வசதியிலை நாராயணா
தாயிடம் சேர்கின்ற தனயனாய் உன்னிடம்
  தஞ்சம்நான் நாராயணா
  தவமொன்றும் செய்யாமல் வரமொன்று கேட்கிறேன்
  தருவாயா நாராயணா
ஆயிரம் பேருண்டு, ஆனாலும் உன்போன்று
  ஆருண்டு நாராயணா?
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.

பூவினில் உறைகின்ற பொன்மகள் துணைகொண்ட
  பூவண்ணா நாராயணா .
  பொன்மகள் பார்வையென் மேல்விழச் செய்தாலே
  போதுமே நாராயணா
கூவிடும் குயில்போல குழலூதி மயக்கினாய்
  கோபாலா நாராயணா .
  குறையிலா செல்வத்தை கொடுத்தென்னை மயக்குவாய்
  குணசீலா நாராயணா
தீவினில் வாடிய சீதைய சிறைமீட்ட
  ஸ்ரீராமா  நாராயணா
  தீராத கடன்தொல்லைச் சிறைமீட்டு துயரங்கள்
  தீர்க்கவா நாராயணா
ஆவினம் மேய்த்தவா அல்லல்கள் போக்கவா
  அழகனே நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.

அவல்தந்த தோழனுக் களவிலா செல்வத்தை
  அருளினாய் நாராயணா
  அவலினும்  சுவையான அமிழ்தான தமிழ்கேட்டு
  அருள்வாயே நாராயணா
புவனங்கள் யாவையும் பொறுப்பாகக் காத்திடும்
  பூபாலா நாராயணா
  புலனைந்தும் தறிகெட்டுப் போகாமல் காத்தருள்
  புரிவாயே நாராயணா
சிவனிடம் வரம்பெற்ற ஸ்ரீபரசு ராமராய்
   சினந்தீர்த்த நாராயணா
   சினங்கொண்ட மனதிலும் திமிர்கொண்ட மதியிலும்
   தீமூட்டு நாராயணா
அவதாரம் பலகொண்டு அதர்மத்த அழித்திட்ட
   அரிதேவா நாராயணா 
   அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
   அரங்கனே நாராயணா.

காட்டுக்குப் போவென்று கைகேயி  சொன்னதும்
  கலங்காத நாராயணா
  கடல்போலும் துன்பத்தை கடுகாக்கும் நெஞ்சத்தை
  காட்டுவாய் நாராயணா
பாட்டுக்கு செவிசாய்த்து ஆழ்வாரின் துயரங்கள்
  போக்கினாய் நாராயணா
  பாட்டொன்று கேட்டிந்த பாமரன் துயரங்கள்
  போக்குவாய் நாராயணா
ஓட்டுக்குள் உடல்மூடி உயிர்வாழும் ஆமையாய்
  ஒளிகின்றேன் நாராயணா
  உலகெங்கும் ஒளிவீசி உலவிடும் ஞாயிறாய்
  உருவாக்கு நாராயணா
ஆட்டுக்குத் தாடிபோல் ஆக்காமல் என்னைநீ
  ஆளாக்கு நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.  

கோடானு கோடியாய் செல்வம் குவித்திடும்
  கோவிந்தா நாராயணா
  கோடியில் ஒருதுளி கொடுத்தெந்தன் குறைகளை
  குறைப்பாயா நாராயணா
வாடாத பாமாலை கோர்த்து உன் வாசலில்
  வருகின்றேன் நாராயணா
  வள்ளலாய் நீஎன்னை வரவேற்று பொற்கிழி
  வழங்காயோ நாராயணா
ஓடாத காவிரி ஒளிராத சூரியன்
  உதவுமோ நாராயணா
  ஒய்யாரமாய் நீயும் உறங்கினால் உலகுக்கு
  ஒப்புமோ நாராயணா
ஆடாது அசையாது இருந்தாலுன் புகழுக்கு 
   ஆகுமோ நாராயணா
   அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
   அரங்கனே நாராயணா.

பார்த்திபன் தேருக்குப் பாகனாய் மாறிய
  பரந்தாமா நாராயணா
  பாதையோ நெடுந்தூரம் , பயணமோ போர்க்களம்
  பயம் போக்கு நாராயணா .
கீர்த்திநிறை வேதமாம் கீதையை அருளிய
  கிருஷ்ணனே நாராயணா
  கேட்பாரில் லாமலே கிடப்போரின் கீதையை
  கேட்கவா நாராயணா
வார்த்தைக்கு வார்த்தை உன் நாமத்தைச் சொல்லியே
  வாழ்கின்றேன் நாராயணா
  வாழ்கின்ற நாள்வரை வளமோடும் நலமோடும்
  வாழவை நாராயணா .
ஆர்த்தெழும் அலையிடை அறிதுயில் போதுமே
  அருள வா நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
   அரங்கனே நாராயணா.

அரன்கையில் ஒட்டிய அயன்மண்டை ஓட்டினை 
  அகற்றினாய் நாராயணா .
  அறியாது சூடிய ஆண்டாளின் மாலையை
  அணிந்தாயே நாராயணா
கரங்கூப்பி கதறிய பாஞ்சாலி மானத்தைக்
  காத்தாயே நாராயணா
  கௌரவர் கூட்டத்தின் கண்களில் விரல்விட்டு
  கலக்கினாய் நாராயணா .
வரங்கொண்ட திமிரினால் மதங்கொண்ட இரணியனை
  வதம்செய்தாய் நாராயணா
  வாமனன் உருகொண்டு மூவடி பெற்றபின்
  வளர்ந்தாயே நாராயணா
அரங்கனே அரங்கனே எனுமெந்தன் குரலை நீ  
  அறியாயோ நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.

அகலிகை கல்லாகி உன்னாலே பெண்ணானாள்
  அற்புதா நாராயணா
  அரக்கியும் பெண்ணென்று அவளையும் மன்னித்தாய்
  அச்சுதா நாராயணா
குகனென்னும் எளியோனின் குணம்கண்டு தோழனாய்
  கூட்டினாய் நாராயணா
  கூர்மமாய் உருகொண்டு மேருவைத் தாங்கினாய்
  கோதண்ட நாராயணா  
மகனெந்தன் குறைதீர்க்க மனமின்றிப் போனதோ
  மாதேவா நாராயணா
  மார்பிலே ஸ்ரீதேவி  மயக்கத்தில் நீஎன்னை
  மறந்தாயோ நாராயணா
அகத்திலோர் ஆலயம் அமைத்துன்னை அழைக்கிறேன்
  ஆட்கொள்வாய் நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா. 

சங்கோடு சக்கரம் கதைகமலம் ஏந்திடும்
  ஸ்ரீசக்ரா நாராயணா
  சடகோபா பலராமா ஜெகநாதா ரகுராமா
  சாரங்கா நாராயணா   
மங்கைபெரு மாட்டியை மார்பிலே தாங்கிடும்
  மணமோகா நாராயணா 
  மண் அள்ளித் தின்றவா மலைதூக்கி நின்றவா 
  மாவீரா நாராயணா 
பொங்குகடல் ஆழத்தில் மீனாகி நீந்தியே 
  மறைமீட்ட நாராயணா 
  புவிதன்னை மேல்தூக்கி வந்தவா வராகஸ்ரீ 
  மூர்த்தியே நாராயணா 
அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்தவா 
  இங்கும் வா நாராயணா 
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.             

முத்தொழில் புரிகின்ற மூவரில் முக்கிய 
  துறையேற்ற நாராயணா 
  மோகினி உருகொண்டு அமுதத்தைக் காத்தவா 
  மோகன நாராயணா 
சத்தியம் உலகினில் சாகாமல் கல்கியாய் 
  தடுத்தாளும் நாராயணா 
  சங்கரன் துணைகொண்டு சபரியைப் பெற்றவா 
  சங்கர நாராயணா 
உத்தமா உயர்ந்தவா உலகினை அளந்தவா 
  ஒப்பிலி நாராயணா 
  உரியேறி நெய்திருடி உண்டவா, சகடத்தை 
  உதைத்தவா நாராயணா 
அத்தனை உயிர்களும் அடிபணிந் தேத்திடும் 
  அண்ணலே நாராயணா 
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.   

இல்லாமை எனும்வார்த்தை இல்லாமல் செய்திட
  எழுந்துவா நாராயணா
  எளியோரும் வலியோரும் இல்லாத வரலாறு
  எழுத வா நாராயணா
கல்லாமை பொய்களவு காணாத உலகத்தைக்
  காட்டவா நாராயணா
  கதியற்றுத் திரிவோரை உன்கருணைக் கயிற்றாலே
  கட்டவா நாராயணா
எல்லாமும் எல்லார்க்கும் என்னுமோர் கீதையை
  இயற்ற வா நாராயணா
  இன்னுமோர் அவதாரம் எடுத்திந்த உலகுக்கு
  இறங்கி வா நாராயணா 
அல்லாடும் மாந்தர்க்கு ஆதார வாழ்வினை
  அளிக்க வா நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.

மாலவா கேசவா மாயவா தூயவா 
  மணிவண்ணா நாராயணா
  மாதவா ஸ்ரீதரா மதுசூதனா சீதை
  மணவாளா  நாராயணா
ஞாலத்தைக் காப்பவா நான்மறை மீட்டவா
  நரசிம்மா நாராயணா
  நாரத கானத்தின் நாயகா காளிங்க
  நர்த்தனா நாராயணா
மூலமும் முடிவுமாய் ஆனவா கலியுக
  மூர்த்தியே நாராயணா
  முதலைக்கும் யானைக்கும் முக்தியைத் தந்தவா
  முகுந்தனே நாராயணா
ஆலவாய் அண்ணலின்  தோழனே சக்தியின்
  அண்ணனே நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.


நாராயணா நமோ நாராயணா 
நாராயணா நமோ நாராயணா 
-சிவகுமாரன் 

பாடலைப் பாடியிருப்பவர் பிரபாகரன் 

என் கவிதைகளின் ரசிகன் அய்யா திரு சுப்புரத்தினம் பாடியிருப்பதையும் கேளுங்கள்