Friday, March 9, 2012

செந்தூர் முருகா



நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க வேண்டும்
அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும்

வெற்றிவேல் முருகா கந்தா, வேலவா செந்தில் குமரா
   வேலினை ஏந்தி வந்தோம், விழிகளைத் திறந்து பாராய்
கொற்றவை புதல்வா பாலா, கோலமயில் ஏறிடும் அழகா,
   கூட்டமாய் காண வந்தோம், குறைகளைத் தீர்க்க வாராய்
மற்றவை எல்லாம் நாங்கள் , மறந்து(ன்)னைக் காண வந்தோம்
   மயிலோனே கொஞ்சம் எங்கள் மனதோடு பேச வாராய் .
ஒற்றுமை யாக வந்தோம், ஊரோடு சேர்ந்து வந்தோம்
   உன்பதம் காண வந்தோம், ஓடோடி வாராய் கந்தா !

செந்தூரின் கடலின் ஓரம், சில்லென்ற அலையின் ஈரம்
  தெறித்திடும் அந்த நேரம் , சிதறாதோ நெஞ்சின் பாரம்?.
சிந்தையில் முருகா உந்தன் சிங்கார முகத்தை நாளும் 
   சிந்தித்து கடக்கும் தூரம் சிறுதூரம் ஆகிப் போகும்
வெந்திடும் வெயிலின் அனலும் வாட்டிடும் பனியின் குளிரும்
   வேலனே உன்னைக் காணும் வேட்கையில் மறைந்தே போகும். .
வந்ததுயர் எல்லாம் உந்தன் வாசலில் வந்து சொன்னால் 
  வான்கதிர் முன்னே பனியாய் வழியின்றி உருகி ஓடும்.  
  
கடமைகள் ஆற்ற வில்லை, காசுபணம் பொருட்டே இல்லை 
  கந்தனே உன்னைக் காண, காலங்கள் பார்க்க வில்லை .
நடப்பது நடக்கட்டும் என்று நடக்கிறோம் உன்னைக் காண ,
   ஞானவேல் காட்டும் பாதை, நம்பாதை என்றே தோண.
கடம்பனே என்று சொன்னோம் கால்வலி தோணவில்லை
  கதிர்வடி  வேலா என்றோம்,  கடப்பதும் தூரம் இல்லை .
கடலோரம் கோயில் கொண்ட கடவுளே செந்தூர் முருகா
  காலங்கள் தோறும் உந்தன் காலடி பணிந்தோம் வாராய்.

வள்ளிமேல் வைத்த காதல் விழிகளால் நோக்க வேண்டும்.
  வஞ்சகன் சூரனைக் கொன்ற கரங்களால் காக்க வேண்டும்
துள்ளிவரும் வேலைக் கொண்டு துயரங்கள் ஓட்ட வேண்டும்,
   தோகைமயில் ஏறி வந்து , தூயமுகம் காட்ட வேண்டும்.
உள்ளத்தில் தெளிவு வேண்டும், உடலினில் உறுதி வேண்டும்.
   உன்நாமம் சொல்லிச் சொல்லி  ஊழ்வினை தாண்ட வேண்டும்.
வள்ளலே செந்தூர் முருகா, வருகிறோம் உன்னை நோக்கி
   வளமாக்கு எங்கள் வாழ்வை, வருகின்ற தடைகள் நீக்கி .

முப்புரம் எரித்த அப்பன் மும்மலம் எரிக்க வேண்டும்.
  மூவடி பெற்ற மாமன் , முன்னின்று காக்க வேண்டும்.
தொப்பையார் அண்ணன் துணையால் தொட்டது துலங்க வேண்டும்
   துர்க்கையாம் உந்தன் அன்னை, துணையாகி நிற்க வேண்டும்
அப்பனே உன்னி டத்தில் அடக்கமாய் கேட்ட பாடம் 
    அகந்தையால் பிரம்மன் அன்று அகப்பட்டு உணர்ந்த பாடம்
சுப்பிர மணியா எனக்கு சொல்லியே ஆக வேண்டும்
  சூழ்ந்திடும் வினைகள் எல்லாம் சொல்லாமல் போக வேண்டும்.

திரைகடல் மணலைப் போலே தீராத செல்வம் வேண்டும்.
  தேடிப்போய் தர்மம் செய்து, தீவினை போக்க வேண்டும். 
கரைதேடிக் களைத்துப் போகா, கடல்அலை போல நானும்  
 காலங்கள் தோறும் உந்தன் கருணையைப் பாட வேண்டும் .
இரைதேடி தேடித் தேடி எஞ்சியது ஒன்றும் இல்லை .
   எத்தனை காலம் இன்னும் ஏங்கிட வைப்பாய் அய்யா ?
நரைகூடிக் கிழடாய் ஆகி நரம்பெலாம் தளரும் முன்னே,
   நான்கொண்ட கடமை தீர்க்க நல்லருள் செய்வாய் அய்யா.
   
தீயாகி காற்றாய் மண்ணாய், திரைகடல் நீராய் விண்ணாய்
   திசையெங்கும் தெரிவ தெல்லாம், திருச்செந்தூர் முருகா நீயே
ஓயாமல் இரையும் கடலின், ஒலியினில் முருகா உந்தன் 
   ஓமென்னும் மந்திரம் தான் உண்மையாய் கேட்குதையா .
வாயார பாடும் தமிழின் வார்த்தைகள் எல்லாம் உந்தன் 
   வடிவத்தைக் கண்டு  சொக்கி, வாய்பொத்தி நிற்குதையா .
தாயாக தந்தை குருவாய் தலைவனாய் உனையே எண்ணி  
   தஞ்சமென வந்தோம் எம்மைத் தாங்கிட வேண்டுமையா .

நாவினில் நீயே தந்த நற்றமிழ் கவிதை உண்டு.
  நடக்கின்ற பாதை தோறும் ஞானவேல் ஒளியும் உண்டு.
ஆவியில் கலந்த அப்பன் அஞ்செழுத்து மந்திரம் உண்டு 
   அஞ்சாதே என்று சொல்லும் அன்னையின் சக்தி உண்டு.
கோவிந்த மாமன் பாதம் கூவி நான் தொழுவதுண்டு  
   கோயில்கள் பலவும் சென்று கும்பிட்டு அழுவதுண்டு 
பூவினில் உறைவாள் அருள்தான் போதாத குறையும் உண்டு.
   பொன்மகள் மாமியிடம்நீ போய்ச் சொன்னால் புண்ணியம் உண்டு. 

இரும்பென தேகம் வேண்டும் இளகிடும் இதயம் வேண்டும்
   இருக்கின்ற காலம் வரையில் இடரிலா வாழ்க்கை வேண்டும்
அரும்பிடும் மலரின் இதழாய் அணைக்கின்ற சுற்றம் வேண்டும்.
   அகிலமே எதிர்க்கும் போதும் அகலாத நட்பு வேண்டும் .
கரும்பென இனிக்கும் தமிழின் கற்கண்டு சொற்கள் வேண்டும்
  கந்தாஉனைப் பாடும் பாடல் காலத்தை வெல்ல வேண்டும்
வரும்போது மரணம் தன்னை வரவேற்கும் உள்ளம் வேண்டும்
   வையத்தில் மற்றோர் பிறவி வாராத வரமும் வேண்டும். 

எந்தையே இறைவா போற்றி எனையாளும் தலைவா போற்றி.
   ஈசனின் மைந்தா போற்றி இடர்களைக் களைவாய் போற்றி 
கந்தனே கடம்பா போற்றி காத்திட வருவாய் போற்றி 
   கணபதி தமையா போற்றி கவலைகள் தீர்ப்பாய் போற்றி.
சுந்தர வடிவே போற்றி சுகமெலாம் தருவாய் போற்றி 
   சூரனை அழித்தாய் போற்றி துயரங்கள் அறுப்பாய் போற்றி.
செந்தில்வேல் குமரா போற்றி சிந்தையில் உறைவாய்  போற்றி  
   சேவற்கொடி உடையாய் போற்றி  சேவடி பணிந்தேன் போற்றி 

                                                                                                           -சிவகுமாரன் 
                                                  தம்பியுடையான் பாட்டுக்கஞ்சான்

 ( 2012 பிப்ரவரி பழனி பாதயாத்திரையின் போது எழுதியது ) 

பொன்மகள் மாமியிடம்நீ போய்ச் சொன்னால் புண்ணியம் உண்டு

 


23 comments:

சிவகுமாரன் said...

இந்தப் பாடல் உதித்த தருணமும், ஆண்டவன் சந்திதியில் அரங்கேறிய விதமும் என்னால் மறக்க இயலாத நெகிழ்வான தருணங்கள் .
எங்கள் ஊரிலிருந்து மாசி மாத திருவிழாவை ஒட்டி திருச்செந்தூருக்கு நூற்றுக்கணக்கானோர் பாதயாத்திரை செல்கிறார்கள். எனக்கு அதைப் பற்றிய விபரம் தெரியாது. என் சித்தப்பாவிடம் பாதயாத்திரை மலர் ஒன்று தயாரிக்கச் சொல்லியிருக்கிறார்கள். என் சித்தப்பா என்னிடம் ஃபோனில் , செந்தூர் பாத யாத்திரைக்கு ஒரு பாடல் எழுதி தரச் சொன்னார்கள் முருகனுக்குத் தான் நிறைய எழுதியிருக்கிறோமே, புதிதாக என்ன எழுதப் போகிறோம் என்று நினைத்து பேசாமல் இருந்து விட்டேன். ஆனால் என் சித்தப்பா எழுதச் சொன்னால் எனக்கு அருள்வாக்கு மாதிரி . எப்படியும் எழுதிவிடுவேன். புத்தகத்துக்கான மற்ற எல்லாம் தயாரான நிலையில் , என் கவிதை மட்டுமே பாக்கி. மீண்டும் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கும் போது நான் பழனி பாதயாத்திரையில் திண்டுக்கல்லில் இருந்தேன். என் சித்தப்பா, "திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்வதாக நினைத்துக் கொண்டே நட, பாடல் பிறக்கும் " என்றார்கள். பழனியாண்டவனைப் பற்றி பாடிக் கொண்டே சென்றோம். கண்ணெதிரே பழனி மலை , கற்பனையில் செந்தூர் அலை. நடக்க நடக்க கவிதை பிறந்தது.
மலை ஏறுகையில் பாதி பாடல் தயார். வரிசையில் நிற்கையில் , சுடச் சுட எழுதிய கவிதையை என் தம்பி பாட , கூட்டமே சேர்ந்து பாடியது.
வீடு திரும்புகையில் மீதியையும் எழுதி முடித்து என் சித்தப்பாவுக்கு அனுப்பினேன்.

பத்து நாட்கள் திருச்செந்தூர் பாதயாத்திரை தொடங்கிய அத்தனை பேர் கையிலும் இந்தப் பாடல். என் சித்தப்பா குரலெடுத்துப் பாட கூட்டமே மெய் சிலிர்த்திருக்கிறது.10 நாட்கள் பூஜையின் போதும் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள். வழிநெடுக பாடிக் கொண்டு சென்றிருக்கிறார்கள் . பலருக்கு மனப்பாடம் ஆகிவிட்டது பாடல். பாதயாத்திரையின் பொறுப்பாளர் என் பால்ய நண்பன் ராஜசேகர் என்னைத் தொடர்பு கொண்டு என்னை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்றான்.

பத்தாவது நாள் வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு செந்தூர் சென்றேன். தரிசனம் முடிந்தபின் பாதயாத்திரைக் குழுவினரின் இறுதிநாள் வேல் பூஜை. இந்தப் பாடலை உணர்ச்சிப் பூர்வமாக பாடினார்கள். என்னால் பாட முடியவில்லை. என்னைப் போல் பல பேர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்ததைக் கண்டேன். என் நண்பன் என்னைக் கட்டி அணைத்தான். பலபேர் அந்தப் பாடல் தனக்காக எழுதியதாக உணர்வதாகச் சொன்னார்கள். பாதயாத்திரைக் குழுவினர் ருத்ராட்ச மாலை அணிவித்து கௌரவித்தார்கள்.


என்ன பேறு பெற்றேன். இந்தப் பிறவியில் கவிஞனாய் ஆக்கியதற்காக இறைவனுக்கு நன்றி சொன்னேன் . முன்பு எழுதிய ஒருவரி நினைவுக்கு வருகிறது.
"என் தமிழுக்கும் அவனேதான் உரித்தானவன். "

இராஜராஜேஸ்வரி said...

செந்தூரின் கடலின் ஓரம், சில்லென்ற அலையின் ஈரம்
தெறித்திடும் அந்த நேரம் , சிதறாதோ நெஞ்சின் பாரம்?.

நினைவலைகளில் நீந்தி செந்தூரின் சன்னதியில் நிற்கவைத்த அருமையான வரிகள் அத்தனையும்..

இராஜராஜேஸ்வரி said...

. கண்ணெதிரே பழனி மலை , கற்பனையில் செந்தூர் அலை. நடக்க நடக்க பிறந்த கவிதை இனிமையான மனதி நிறைய வைத்தது.. பாராட்டுக்கள்.. நன்றி..

இராஜராஜேஸ்வரி said...

. கண்ணெதிரே பழனி மலை , கற்பனையில் செந்தூர் அலை. நடக்க நடக்க பிறந்த கவிதை இனிமையான மனதி நிறைய வைத்தது.. பாராட்டுக்கள்.. நன்றி..

இளமுருகன் said...

கடந்த ஒரு மணி நேரமாக, இதே பக்கத்தில் இருக்கிறேன். மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டும், பாடிக்கொண்டும்.

G.M Balasubramaniam said...

ஆசு கவியே. சிவகுமாரா,அருட்கவி பாடியே, அனைவரையும் ஆட்கொள்கிறாய். அழகன் முருகனின் அருள் வேண்டி, பாடப் பணிக்கும் முன், அவனருளாலே , பாமாலை நீ கோர்த்து, அவனுக்கு அணிவிக்க, ஒரு மாலை பலதாகி, அனைவரும் அதையேந்தி, வரம் வேண்டி நெக்குருக, ஓங்கி உரைக்கவே, சிந்தை குளிர்ந்து அப்பாலன் அனைவரையும் காப்பது திண்ணம். வாழ்க வளமுடன்.

sury siva said...

அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும்
என எப்போதும் நினைக்கும் திரு சிவகுமாரன் அவர்கள் கவிதை இதோ: 

subbu rathinam

Lalitha Mittal said...

நீலவண்ண கண்ணாவாடா என்ற பாட்டின் மெட்டில் சுப்பு ஐயா பாடியதைக் கேட்டபடி செந்தில் குமரனை தரிசித்து மகிழ்ந்தேன் ;நன்றி சிவகுமாரன்!

அப்பாதுரை said...

சிலிர்க்க வைக்கும் பின்புலம் சிவகுமாரன். கண்ணெதிரே ஒரு முருகன் கற்பனையில் ஒரு முருகன். வாய்பொத்தி நிற்கும் தமிழ் வார்த்தைகள் மிகமிக ரசித்தேன். தம்பியுடையான் பாடலுக்கஞ்சானும் சரியே. உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. உங்கள் மனம் போல் நடக்கட்டும்.

sivamani said...

இந்த பாடலையும் அதன் பின்புலத்தையும் படித்த பின் எனக்கு வார்த்தைகளே வரவில்லை. எல்லாம் வல்ல முருகன் துணை இருப்பான்

ஜீவி said...

பழனியாய் இருந்தால் என்ன?.. இல்லை, திருச்செந்தூராய் இருந்தால் தான் என்ன? இல்லை, திருபெருங்குன்றமாய் இருந்தால் என்ன, சுவாமிமலையாய்த் தான் இருந்தால் என்ன? திருத்தணியாய் இருந்தால் என்ன, அல்லால் பழமுதிர்ச்சோலையாய் இருந்தால் தான் என்ன? அத்தனையும் அவன் படைவீடுகள் தாமே?.. எல்லா வீட்டிற்கும் சொந்தம் காட்டும் பாடல் வரிகள் தாமே?..

இரும்பென தேகம் வேண்டும் இளகிடும் இதயம் வேண்டும்
இருக்கின்ற காலம் வரையில் இடரிலா வாழ்க்கை வேண்டும்
அரும்பிடும் மலரின் இதழாய் அணைக்கின்ற சுற்றம் வேண்டும்.
அகிலமே எதிர்க்கும் போதும் அகலாத நட்பு வேண்டும் .
கரும்பென இனிக்கும் தமிழின் கற்கண்டு சொற்கள் வேண்டும்
கந்தாஉனைப் பாடும் பாடல் காலத்தை வெல்ல வேண்டும்
வரும்போது மரணம் தன்னை வரவேற்கும் உள்ளம் வேண்டும்
வையத்தில் மற்றோர் பிறவி வாராத வரமும் வேண்டும்.

-- வேண்டியவற்றை எல்லாம் வேண்டியவாறே அடுக்கி விட்டீர்கள்;
வேறென்ன வேண்டும்?.. சொல்லத் தெரியவில்லை, சிவக்குமாரா!

அப்பாதுரை said...

"வள்ளிமேல் வைத்த காதல் விழிகளால் நோக்க வேண்டும்" வரியைப் படிக்க மீண்டும் வந்தேன். மீண்டும் :)

Kaumaram Webmasters said...

வணக்கம்,

தங்களின் பாடலையும் அனுபவத்தையும் கௌமாரம்
இணையத்திற்கு தருவீர்களா?

"முருகன் அடியார்களின் தெய்வீக அனுபவங்கள்"
என்னும் பகுதியில் இதை இணைத்தால் நன்றாக
இருக்கும்.

http://kaumaram.com/expr/

மிக்க நன்றி,

(கௌமாரம் இணைய ஆசிரியர்கள்)

சிவகுமாரன் said...

மிக்க மகிழ்ச்சி .வெளியிட்ட பின்பு இணைப்பைத் தெரிவியுங்கள் .நன்றி

சிவகுமாரன் said...

மிக்க மகிழ்ச்சி .வெளியிட்ட பின்பு இணைப்பைத் தெரிவியுங்கள் .நன்றி

Kaumaram Webmasters said...

மிக்க நன்றி ஐயா,

இன்னும் சில நாட்களில் இணைத்துவிடுவோம்.
தங்களுக்கு (இங்கே) எழுதி தெரிவிக்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு எங்களுடன் தோடர்புகொள்ள:

http://kaumaram.com/mmgg/guest_u.php

பக்கத்தைக் காணலாம்.

நல்வாழ்த்துக்கள்! நன்றி, வணக்கம்.

வெற்றிவேல் இறைவனுக்கு அரோகரா!

(கௌமாரம் இணைய ஆசிரியர்கள்)

Nanjil Siva said...
This comment has been removed by the author.
Nanjil Siva said...

பழனியில் உதித்த செந்தூர் முருகன் பாடல் செந்தூர் கடற்கரை மணல்போல் நெஞ்சமும் நெகிழ்ந்தது ... !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

Unknown said...

இந்த ஆடியோ எனது வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டுகிறேன் தங்கள் சம்மதம் தெரிவித்தாள் எனது நம்பர் அனுப்புகிறேன்

Unknown said...

தகவல்

சிவகுமாரன் said...

தங்கள் பெயர் மற்றும் அலைபேசி எண் தெரிவிக்கவும்.

Anonymous said...

ஐயா உங்கள் பாடல் வரிகள் அத்தனையும் மெய்சிலிர்க்க வைத்தது பாட இனிமையாக இருந்தது உங்கள் பாடல் கவிகள் அத்தனையும் அருமை

Anonymous said...

நன்றி