Sunday, November 20, 2011

ஓம் சரவணபவ


ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 
ஓம் சரவணபவ சரவணபவ ஓம் 
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 
ஓம் சரவணபவ சரவணபவ ஓம் 

கந்தா கடம்பா கார்த்திகை பாலா
  கனிபெற உலகை வலம்வந்த வேலா.
எந்தாய் சக்தியின் இளைய குமாரா
  ஈசனின் மைந்தா ! இடும்பா முருகா!
தொந்திக் கணபதி அன்புத் தமையா 
  தோகை இளமயில்  ஏறிடும் அழகா 
தந்தைக்கு மந்திரம் சொன்னாய் குருவாய் 
  தமியேன் துயருக்கு விடை சொல்ல வருவாய்! 
                                                                                     (ஓம் சரவணபவ) 1

சூரனை வதம்செய்த சுப்பிரமணியா !
  சுடர்வள்ளி அழகினில் சொக்கிய இனியா !
போரினில் அசுரரை பொடிசெய்த வீரா !
  பூவையர் இருவரை மணம்செய்த தீரா !
காரிருள் நீக்கிடும் கதிர்வடி வேலா !
  கார்முகில் வண்ணனின் மருகா முருகா !
சீரிளத் தமிழுக்கு அரசே வருவாய் !
  சிறியேன் குரலுக்கு செவிசாய்த் திடுவாய் .
(ஓம் சரவணபவ) 2 .

முன்னவன் துணையுடன் மணம்செய்த  வேடா
  முப்புரம் எரித்தவன் விழிவந்த வேலா !
அன்னையின் வேலினை கரங்களில் உடையாய் 
  அவ்வையின் தமிழுக்கு கனிதந்த இடையா!
பன்னிரு கரன்கொண்ட பால குமாரா 
  பழம் நீ எனவே பேர்கொண்ட பாலா !
உன்னிரு பாதங்கள் என்தலை வைப்பாய் 
  உன்விழிக் கணைகளை என்மேல் தைப்பாய் 
(ஓம் சரவணபவ) 3. 

நான்முகன் செருக்கினை அடக்கிய வேலா !
  நான்மறை போற்றிடும் ஞானத்தின் பாலா !
கான்மகள் வள்ளியின் காதல் மணாளா 
  காலத்தின் கோலத்தை மாற்றும் குணாளா !
வானுறை தேவரும் வணங்கும் கண்ணாளா 
  வரங்களைத் தடையின்றி வழங்கும் தயாளா !
யானுறும் துயர்கண்டும் இருப்பதேன் வாளாய்?
  "யாம் உளோம் துணை"என சொல் அருளாளா !
(ஓம் சரவணபவ) 4 ..

அரங்கனின் மனங்கவர் அழகிய மருகா  
  அமரர்கள் தேவர்கள் அடிதொழும் முருகா!
பரங்குன்றம் தணிகையில் குடிகொண்ட குமரா 
  பழமுதிர்ச் சோலையில் பலன்தரும் முருகா !
இரங்கிடும் மனங்கொண்ட ஈசனின் மைந்தா 
  இருவரை மணங்கொண்ட இளவலே கந்தா !
கரங்களில் வேல்கொண்டு காத்திட வருவாய் 
  கழலடி பணிந்தோம் கண்களைத் திறவாய் !
(ஓம் சரவணபவ) 5.  

அலைதவழ் செந்தூர்க் கடலிடை உறைவாய் !
  அருணையில் தொண்டருக் கருளிய இறைவா !
சிலையினில் சிரிப்பாய்! சிந்தையில் இருப்பாய் 
  சிறுமையும் தீமையும் சினங்கொண்டு அறுப்பாய் !
மலைமகள் உமையவள் மடிதனில் வளர்ந்தாய் 
  மங்கையர் அறுவரின் கரங்களில் தவழ்ந்தாய் !
வலையிடை மீனென வினைதனில் வீழ்ந்தேன் 
  வடிவேல் கொண்டிந்த வினைவலை அறுப்பாய்!
 (ஓம் சரவணபவ) 6.   

இடும்பனை அழித்த இனியவேல் முருகா 
  இதயத்தில் புகுந்தே இருளினைக் களைவாய் !
கடம்பனுக் கருளிய கார்த்திகை பாலா !
  கருணையின் வடிவாய் காத்திடும் வேலா !
அடம்செய்யும் மனதினை அடக்கிட வருவாய் 
  அருட்கவி கேட்டெனை அரவணைத் திடுவாய்
உடும்பென உனையே பிடித்தேன் வருவாய் 
  உருகிடும் கவிதைகள் வடித்தேன் அருள்வாய் !
(ஓம் சரவணபவ) 7.   
      
கண்களை மூடிக் கொண்டு பிரபாகரனின் கானத்தை கேளுங்கள் .
- சிவகுமாரன் 
s

8 comments:

thendralsaravanan said...

தம்பி பிரபாகரனின் பாடலை ஒலிக்கச் செய்து கொண்டே என் காலை பொழுது ஆரம்பமாகியுள்ளது...அழகான எழுத்து...அழகாய் பாடியுள்ளார்.

sury siva said...

கந்தா நின் புகழை பாடும் சிவகுமரனுக்கு இன்றே அருள் செய்வாய். இனிதே செய்வாய். அதை இப்பொழுதே செய்வாய்.
உன் மனம் இறங்க இன்னும் ஒருமுறை
கந்தனாம் நின் புகழை நான் கானடாவில் பாடுவேன்.
சுப்பு தாத்தா

sury siva said...

http://youtu.be/DqTkYdBolgg
listen to this song here also
in Raag ANANDHA BHAIRAVI.

SUBBU RATHINAM

G.M Balasubramaniam said...

உலாவரும் அவன் புகழினையே உன் மொழியில் ஓங்கி ஒலிக்கச் செய்யும் சிவகுமாரா, வாழ்க நீ வையத்துள் வளமுடன்.

அப்பாதுரை said...

கண்களை மூடிக்கொண்டு பிரபாகரன் குரலைக் கேட்க வேண்டும் தான். உணர்ச்சியோடு பாடுகிறார்.

இதென்ன? பூவையர் இருவரை மணம்செய்த தீரா ?

இராஜராஜேஸ்வரி said...

அரங்கனின் மனங்கவர் அழகிய மருகா
அமரர்கள் தேவர்கள் அடிதொழும் முருகா!
பரங்குன்றம் தணிகையில் குடிகொண்ட குமரா
பழமுதிர்ச் சோலையில் பலன்தரும் முருகா /

ஒவ்வொரு வரியும் மேற்கோள் காட்டத்தகுந்த அருமையான அமுதகவி. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

சிவகுமாரன் said...

நன்றி தென்றல், சுப்புத்தாத்தா, GMB &, இராஜராஜெச்வரி மேடம்
நன்றி நன்றி நன்றி

சிவகுமாரன் said...

\\\இதென்ன? பூவையர் இருவரை மணம்செய்த தீரா ?///
ஏன் அப்பாஜி? ஏதேனும் பிழையா? வள்ளி தெய்வானை என்னும் இரு தேவியரை மணம் செய்த தீரனே என்று பாடுகிறேன். இருவரை சமாளிப்பது என்பது தீரச் செயல் தானே.?