Friday, January 26, 2024

கோணேஸ்வரா


  வெண்பா 

(அய்யனைத் தரிசிக்கும் வரை )

கோணேஸ் வராஉந்தன் கோல எழில்தன்னைக் 

காணேனோ என்னிருக் கண்களால் ? - வீணே 

பிழைத்துக் கிடக்கின்றேன் , பெற்றவா என்னை 

அழைத்துக் கொடுப்பாய் அருள். 


 (அய்யனைத்  தரிசித்த பின் ) 

கோணமலை ஈஸ்வரனின் கோல எழில்தன்னைக் 

காணவந்தேன் , பேரருளில் கட்டுண்டேன் - வீணடைந்து 

போகாதென் வாழ்க்கை ! பொலிந்திடச்  செய்திடுவான் !

ஆகா அவனே அரன் (ண் ).

-சிவகுமாரன்.

25.01.2024

@ திருகோணமலை 


 

Monday, January 22, 2024

ஓம் முருகா


ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் 
                                ஓம்  முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் 


ஓம் முருகா ஓம் முருகா என்று கூறு - அந்த 

   உச்சிமலைக் கோயிலுக்குச் சென்று ஏறு .

கோமணத்து ஆண்டியை நீ பக்தியோடு - தினம் 

   கும்பிட்டுக்கொள் அதுவொன்றே பற்றுக் கோடு                       ( ஓம் முருகா )


கந்தனுக்கு பழனியில் படைவீடு - அதைக் 

   கொண்டுவர ஆசையுடன் நடைபோடு .

வந்ததுயர் ஓடிவிடும் அடியோடு - அவனை 

   வரச் சொல்லி பாடு ஒரு முடிவோடு.                                                 ( ஓம் முருகா )


ஆறுமுகன் பேரைச் சொல்லி ஆடிப்பாடு - அந்த 

   ஆறெழுத்து மந்திரத்தைப் படி ஆடு 

ஏறுமயில் ஏறிவரும் எழில் பாரு - மனதில் 

   ஏக்கமுடன் பழனிக்குச் சென்று சேரு .                                            ( ஓம் முருகா )  


வானுலகத் தேவனுக்கு வாழ்த்து பாடு - அந்த 

   வடிவேலன் புகழினை ஏத்தி ப்  பாடு 

ஆனைமுகன் தம்பியவன் அன்பைப் பாடு - அந்த 

   அண்ணாமலை பிள்ளையவன் அருள்தேடு                                 ( ஓம் முருகா )


வேல்முருகா என்றுசொல்லி மெட்டுப் போடு - அவனை 

   வேண்டுவதில்லை உனக்கென்ன தட்டுப்பாடு 

கால்வலிக்கும் தாங்கி நடை எட்டிப்போடு - அந்த 

   கந்தனை உன் பக்தியாலே கட்டிப்போடு  .                                   ( ஓம் முருகா )


கோலமயில் ஆடுது பார் ஜதியோடு - அதைக் 

   குகனிடம் தூதனுப்பி துதிபாடு 

வேலவனை தூக்கிக் கொண்டு வரச் சொல்லு - நாங்கள் 

   வேண்டும் வரம் அத்தனையும் தரச்  சொல்லு                            ( ஓம் முருகா )


துள்ளிவரும் வேலைக்கண்டு துதிபாடு - உன் 

   துன்பமெல்லாம் ஓடிவிடும் விதியோடு 

வள்ளிமண வாளனைநீ எண்ணிப் பாடு - அவனை

   வலைக்குள்ளே மாட்ட ஒரு கண்ணி  போடு                                  ( ஓம் முருகா )


கணபதி தம்பிஇடம் கனிவோடு - உன் 

   கவலைகள் சொல்லி விடு பணிவோடு 

மனம்விட்டுப்  பேசுசுப்ர மணியோடு - எந்த 

   மலையையும் மோதித் தள்ளு துணிவோடு                              ( ஓம் முருகா )


தந்தனத்தோம் பாட்டுச் சொல்லி தமிழோடு - ஞானத் 

   தங்க ரதத் தேரிழுப்பாய் மகிழ்வோடு 

செந்தூர்க் கடல் வீசுகின்ற அலையோடு - அந்த 

   செந்தில்வேலன் பேரைச் சொல்லி விளையாடு .                    ( ஓம் முருகா )


தக்கத்திமி தக்கத்திமி தாளம் போடு - அந்த 

   தண்டபாணி ஆற்றுக்கொரு பாலம் போடு 

பக்கத்துணை யாயிருப்பான் பயத்தை விடு -அவன் 

   பன்னிருகை கொண்டணைப்பான் கவலைவீடு                   ( ஓம் முருகா )

 

ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் 
                                ஓம்  முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் 

                                                                                                                                 சிவகுமாரன் .