Tuesday, December 20, 2011

மண் சுமந்தவா



நமசிவாய ஓம் - சுவாமி
  நமசிவாய ஓம்
நமசிவாய ஓம் - சுவாமி
  நமசிவாய ஓம் 

மண் சுமந்தவா - பாதி 
   மதி சுமந்தவா 
பெண் சுமந்தவா - பொங்கும் 
   புனல் சுமந்தவா 
கண்  சிவந்தவா - நெற்றிக் 
   கனல் சுமந்தவா
என் சுமைகளைக்- கொஞ்சம் 
   இறக்கி வைக்க வா .                               (நமசிவாய ஓம் )

ஆலம் உண்டவா - நல்ல 
   அரவம் பூண்டவா 
சூலம் கொண்டவா - நெற்றிச் 
   சுடரைக் காட்டவா 
கோலம் காட்டவா - என்னில் 
   குடி புகுந்தவா 
நீல கண்டனே - நெஞ்சில் 
   நேசம் கொண்டு வா .                               (நமசிவாய ஓம் )


பித்தன் ஆனவா - சக்திப் 
   பிரியன் ஆனவா 
அத்தன் ஆனவா - என்னை 
   அடிமையாக்க வா 
சத்தம் ஆனவா - அதன்
   சரணம் ஆனவா 
நித்தம் பாடினேன் - கேட்டு 
     நீயும் ஓடி வா .                                        (நமசிவாய ஓம் )
 . 
தோடணிந்தவா - புலித் 
   தோலணிந்தவா
ஆடல் காட்ட வா - உன் 
   அழகைக் காட்ட வா 
பாடல் கேட்டு வா - எந்தன்
   பக்திபார்த்து வா 
கூடல் ஆண்டவா - எந்தன் 
    குரலைக் கேட்டுவா .                                (நமசிவாய ஓம் )


இடப வாகனா - தமிழ்
   இசையின் மோகனா 
நடன  ஈஸ்வரா - ப்ரணவ
   நாத சங்கரா 
சுடலைக் காத்தவா - உயிர்
  சுருதி  சேர்த்தவா 
கடவூர் ஆண்டவா - என் 
   கவலை போக்க வா .                                   (நமசிவாய ஓம் )


அம்மை ஆனவா - எங்கள்
   அப்பன் ஆனவா
இம்மை சிறக்க வா - அதில்
   இன்பம் சேர்க்க வா
நம்ப வைத்தவா - உன்னை
   நாட வைத்தவா
ஜம்புகேஸ்வரா - இந்த
   ஜன்மம் காக்க  வா .                                     (நமசிவாய ஓம் )


கோட்கள் ஆள்பவா - அவை
   கூடி சூழ்பவா
நாட்கள் திறப்பவா - அதை
   நகரச் செய்பவா
மீட்க ஓடிவா - வாழ்வை
   மேன்மையாக்க வா
ஆட்கொண்டேஸ்வரா - என்னை
   ஆண்டு கொள்ளவா .                                     (நமசிவாய ஓம் )


காற்றைப் படைத்தவா - மூலக்
   கனலை உடைத்தவா
நீற்றைத் தந்தவா - இந்த
   நிலத்தில் வந்தவா
ஏற்றுக் கொள்ளவா - என்னை
   இழுத்துச் செல்லவா
கூற்றை உதைத்தவா - என்னைக்
   கூட்டிக் கொள்ளவா .                                     (நமசிவாய ஓம் )


ஆதியானவா - வாழ்வின்
   அந்தம் ஆனவா
ஜோதி ஆனவா - உயிரின்
   சுடரும் ஆனவா
நாதம் ஆனவா - அதில்
   நடனம் செய்பவா
வேதம் ஆனவா - எந்தன்
    விதியை மாற்ற வா                                      (நமசிவாய ஓம் )


அகில மானவா - அணுவின்
   அணுவு மானவா
முகிலு மானவா - முகிலின்
   மழையு மானவா
பகலும் ஆனவா - வரும்
   இரவும் ஆனவா
சகலம் ஆனவா - உனது
   சக்தியோடு வா                                              (நமசிவாய ஓம் )


வாய்மை யானவா - அதன்
   வலிமை யானவா 
தூய்மை யானவா - உன்னைத்
   தொடரச் செய்தவா 
நேய மானவா - எந்தன் 
   நெஞ்சில் நின்றவா 
தாயு மானவா - என்னைத்
   தாங்கிக்  கொள்ள வா                                    (நமசிவாய ஓம் )


தாளம் ஆனவா - இசைத் 
   தமிழும் ஆனவா 
நாளம் நிறைந்தவா - எந்தன்
   நரம்பில் உறைந்தவா 
ஓலம் கேட்டு வா- எந்தன் 
   உளறல் கேட்க வா 
காளத்தி நாதா - எந்தன்
   கானம்  கேட்க வா                                           (நமசிவாய ஓம் )


விறகு விற்றவா - கை 
   வளையல் விற்றவா 
மறைகள் கற்றவா - மன்
   மதனைச் செற்றவா 
கறைகள் அற்றவா - ஒரு
   களங்கம் அற்றவா 
பிறவி அற்றவா - என்னைப் 
    பிடித்துப் பற்ற வா                                           (நமசிவாய ஓம் )


முக்கண் பெற்றவா - வேல்
   முருகைப் பெற்றவா 
தக்கன் மருமகா - அவன் 
   தலையைக் கொய்தவா 
சிக்கல் தீர்க்க வா - எந்தன்
   சிரமம் போக்க வா
சொக்க நாதனே - என்னைச் 
   சொந்த மாக்க வா                                            (நமசிவாய ஓம் )


பரியை அழைத்தவா - பாண்டி
   படையில் நுழைத்தவா 
நரியை அடைத்தவா - வைகை 
   நதியை உடைத்தவா 
புரிய வைத்தவா - உன்னைப்
    புகழ வைத்தவா 
அரியின் மைத்துனா - என்னை
   அருகில் சேர்க்கவா                                         (நமசிவாய ஓம் )


உமையின் காதலா - அகில 
   உலக நாயகா 
சுமைகள் நீக்க வா - எந்தன் 
   சுயத்தைக்  காக்க வா 
சமயம் காத்தவா - தமிழ்ச்
   சங்கம் வளர்த்தவா 
இமயம் உறைபவா - எந்தன்
   இதயம் நிறைய வா                                         (நமசிவாய ஓம் )


தில்லை ஆண்டவா - பெருந்
   துறையூர் ஆண்டவா 
நெல்லை ஆண்டவா - வெண்ணெய்
   நல்லூர் ஆண்டவா 
தொல்லை  நீக்கவா - வாட்டும் 
   துன்பம் போக்க வா
அல்லல் போக்க வா - என்னை 
   அணைத்துக்  கொள்ள வா                             (நமசிவாய ஓம் )

அருணை ஆண்டவா - திரு
   ஆரூர் ஆண்டவா 
கருணை காட்ட வா - மனக்
   கலக்கம் ஓட்ட வா 
இருளைப் போக்க வா - வாழ்வில் 
   இனிமை சேர்க்க வா 
அருளைக் கூட்ட வா - தேவ 
   அமுதம் ஊட்ட வா                                           (நமசிவாய ஓம் )


கயிலை ஆண்டவா - புனிதக் 
   காசி ஆண்டவா 
மயிலை ஆண்டவா - பாண்டி 
   மதுரை ஆண்டவா 
உயிலை எழுதவா - அதில்
   உயிரை எழுதவா 
துயில் எழுந்துவா - எந்தன் 
   துயரம் தீர்க்க வா                                               (நமசிவாய ஓம் )

கண்ணைத் தோண்டவா- பிள்ளைக்
   கறி சமைக்க வா  
மண்ணைத் தோண்டவா - தோண்டிப்
   பாதம் தீண்டவா 
விண்ணைத் தாண்ட வா - எல்லாம்
   வீண் தானல்லவா 
என்னைத் தோண்டினேன் - வருக 
    ருத்ர தாண்டவா                                              (நமசிவாய ஓம் )

                                           

பாடலை என் தம்பி பிரபாகரனின் குரலில் கேட்டு மகிழுங்கள். 



(சிவகுமாரன் கவிதைகளில் ஏற்கெனவே இடுகையிடப்பட்டது. )

Wednesday, December 7, 2011

நடை போடுங்கள்



அய்யப்பா எனச் சொல்லி தினம் பாடுங்கள் - அவன்
  அருட்சோதி முகம்காண மனம் நாடுங்கள்.
மெய்ஞ்ஞான கேள்விக்கோர் விடை தேடுங்கள் - அதற்கு
  முடிதாங்கி மலைநோக்கி நடை போடுங்கள்
                                                                             -சுவாமி(அய்யப்பா )

புலிப்பாலைக் கறந்தோனின் புகழ் கூறுங்கள் - அழகுப்
  பூப்போன்ற முகம் காண மலை ஏறுங்கள்.
மலைப்பாதை தனைச்சுற்றி வலம் வாருங்கள் - அங்கே
  மணிகண்டன் சிரிக்கின்ற எழில் பாருங்கள்.
                                                                               -சரணம் (அய்யப்பா)  

பெருமாளும் பெண்ணாகித் தொட்டான் சிவனை - அந்தப்
  பேரின்பக் காதலால் பெற்றான் இவனை.
திருப்பம்பை  நதிக்கரையில் கிடந்தான் பொன்னன் - அவனை
 திருக்கரத்தால் எடுத்தள்ளி வளர்த்தான் மன்னன்.
                                                                                    -சுவாமி(அய்யப்பா)

மகிஷாவை வதம்செய்ய பிறந்தான் அவன் - சபரி
  மலையேறி அரசாட்சி துறந்தான் அவன்.
அகிலத்தைக் காப்பாற்றும் அருளானவன் - அவன்
  அடிதேடி தொழுவோர்க்கு பொருளானவன் .
                                                                                      -சரணம்(அய்யப்பா)  


விரதத்தை முறையாகக் காப்பாற்றுங்கள் - பெரியோர்
  விரும்பாத பழக்கங்கள் தனை மாற்றுங்கள் .
வரங்கேட்டு பாருங்கள் அள்ளித் தருவான் - அவனை
  வரச் சொல்லி பாடுங்கள் இல்லம் வருவான். 
                                                                                       -சுவாமி(அய்யப்பா)


இல்லாத எளியோரின் இருள் ஓட்டுவான் - அவனை
  எந்நாளும் தொழுவோர்க்கு அருள் கூட்டுவான்.
பொல்லாத தீயோரை தினம் வாட்டுவான்- உலகில்
  பொய்யோரை நல்லோர்க்கு இனம் காட்டுவான். 
                                                                                       -சரணம் (அய்யப்பா)   

பதினெட்டுப் படியேற பாவம் தொலையும் - அவனை
  பணிந்தேத்த நெஞ்சத்தின் பாரம் குறையும்.
கதியற்றுப் போனோர்க்கும் காலம் பிறக்கும் - அய்யன் 
 கருணையினால் அருள்வீட்டின் கதவும் திறக்கும்.
                                                                                     -சுவாமி(அய்யப்பா)

இருமுடியில் தேங்காயில் நெய்யேந்துங்கள் - மனதின்
  ஏக்கங்கள் தனைச் சொல்லி கையேந்துங்கள்.
திருவடியே கதியென்று தாள் சேருங்கள்- அய்யன்
  திருவருளால் வினைதீர்த்து கரை சேருங்கள். 
-சரணம் (அய்யப்பா)  

                                                                                             
 - சிவகுமாரன்.

பாடலை பாடியிருப்பவர் - சிவ.விக்னேஷ்  


 

Sunday, November 20, 2011

ஓம் சரவணபவ


ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 
ஓம் சரவணபவ சரவணபவ ஓம் 
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 
ஓம் சரவணபவ சரவணபவ ஓம் 

கந்தா கடம்பா கார்த்திகை பாலா
  கனிபெற உலகை வலம்வந்த வேலா.
எந்தாய் சக்தியின் இளைய குமாரா
  ஈசனின் மைந்தா ! இடும்பா முருகா!
தொந்திக் கணபதி அன்புத் தமையா 
  தோகை இளமயில்  ஏறிடும் அழகா 
தந்தைக்கு மந்திரம் சொன்னாய் குருவாய் 
  தமியேன் துயருக்கு விடை சொல்ல வருவாய்! 
                                                                                     (ஓம் சரவணபவ) 1

சூரனை வதம்செய்த சுப்பிரமணியா !
  சுடர்வள்ளி அழகினில் சொக்கிய இனியா !
போரினில் அசுரரை பொடிசெய்த வீரா !
  பூவையர் இருவரை மணம்செய்த தீரா !
காரிருள் நீக்கிடும் கதிர்வடி வேலா !
  கார்முகில் வண்ணனின் மருகா முருகா !
சீரிளத் தமிழுக்கு அரசே வருவாய் !
  சிறியேன் குரலுக்கு செவிசாய்த் திடுவாய் .
(ஓம் சரவணபவ) 2 .

முன்னவன் துணையுடன் மணம்செய்த  வேடா
  முப்புரம் எரித்தவன் விழிவந்த வேலா !
அன்னையின் வேலினை கரங்களில் உடையாய் 
  அவ்வையின் தமிழுக்கு கனிதந்த இடையா!
பன்னிரு கரன்கொண்ட பால குமாரா 
  பழம் நீ எனவே பேர்கொண்ட பாலா !
உன்னிரு பாதங்கள் என்தலை வைப்பாய் 
  உன்விழிக் கணைகளை என்மேல் தைப்பாய் 
(ஓம் சரவணபவ) 3. 

நான்முகன் செருக்கினை அடக்கிய வேலா !
  நான்மறை போற்றிடும் ஞானத்தின் பாலா !
கான்மகள் வள்ளியின் காதல் மணாளா 
  காலத்தின் கோலத்தை மாற்றும் குணாளா !
வானுறை தேவரும் வணங்கும் கண்ணாளா 
  வரங்களைத் தடையின்றி வழங்கும் தயாளா !
யானுறும் துயர்கண்டும் இருப்பதேன் வாளாய்?
  "யாம் உளோம் துணை"என சொல் அருளாளா !
(ஓம் சரவணபவ) 4 ..

அரங்கனின் மனங்கவர் அழகிய மருகா  
  அமரர்கள் தேவர்கள் அடிதொழும் முருகா!
பரங்குன்றம் தணிகையில் குடிகொண்ட குமரா 
  பழமுதிர்ச் சோலையில் பலன்தரும் முருகா !
இரங்கிடும் மனங்கொண்ட ஈசனின் மைந்தா 
  இருவரை மணங்கொண்ட இளவலே கந்தா !
கரங்களில் வேல்கொண்டு காத்திட வருவாய் 
  கழலடி பணிந்தோம் கண்களைத் திறவாய் !
(ஓம் சரவணபவ) 5.  

அலைதவழ் செந்தூர்க் கடலிடை உறைவாய் !
  அருணையில் தொண்டருக் கருளிய இறைவா !
சிலையினில் சிரிப்பாய்! சிந்தையில் இருப்பாய் 
  சிறுமையும் தீமையும் சினங்கொண்டு அறுப்பாய் !
மலைமகள் உமையவள் மடிதனில் வளர்ந்தாய் 
  மங்கையர் அறுவரின் கரங்களில் தவழ்ந்தாய் !
வலையிடை மீனென வினைதனில் வீழ்ந்தேன் 
  வடிவேல் கொண்டிந்த வினைவலை அறுப்பாய்!
 (ஓம் சரவணபவ) 6.   

இடும்பனை அழித்த இனியவேல் முருகா 
  இதயத்தில் புகுந்தே இருளினைக் களைவாய் !
கடம்பனுக் கருளிய கார்த்திகை பாலா !
  கருணையின் வடிவாய் காத்திடும் வேலா !
அடம்செய்யும் மனதினை அடக்கிட வருவாய் 
  அருட்கவி கேட்டெனை அரவணைத் திடுவாய்
உடும்பென உனையே பிடித்தேன் வருவாய் 
  உருகிடும் கவிதைகள் வடித்தேன் அருள்வாய் !
(ஓம் சரவணபவ) 7.   
      
கண்களை மூடிக் கொண்டு பிரபாகரனின் கானத்தை கேளுங்கள் .
- சிவகுமாரன் 
s

Friday, October 7, 2011

மதுரை மீனாட்சியே


   


ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்



அன்னையே அம்மையே அகிலாண்ட ஈஸ்வரி
   அங்காள பரமேஸ்வரி 
   அகிலத்தின் ஆதியே அய்யனின் பாதியே 
   அபிராமவல்லித்  தாயே  
என்னைய்யன் என்னப்பன் ஈசனின் துணையாக 
   இமயத்தில் வாழும் உமையே 
   இமயத்தில் வாழ்ந்தாலும் ஏழையின் அன்பான 
   இதயத்தில் வாழும் இறையே .
உன்னையே எண்ணியே உருகிடும் அடியவன் 
   உள்ளத்தில் கோயில் கொள்வாய்
   உவகையாய் நான்தரும் உள்ளார்ந்த கவிதைகள் 
   உரிமையாய் ஏற்றுக் கொள்வாய் .
முன்னைக்கும் பழமைக்கும் முடிவான சக்தியே 
   மூலத்தின் ஆதாரமே 
   முக்கண்ணன் தேவியே மதுரை மீனாட்சியே 
   முன்னின்று காக்க நீயே.                                                           1.

அத்தனைப் பித்தனாய் ஆக்கியே அண்ணலின்
   அங்கத்தில் பாதி கொண்டாய்
   அத்தனை உயிர்களும் அடிபணிந்தேத்திட
   அகிலத்தை ஆட்சி கொண்டாய் .
எத்தனை கயவனை இறுமாந்த மகிஷனை
   எதிர்நின்று போரில் வென்றாய்
   எத்தனை காலமாய் ஏங்கிநான் வேண்டுவேன்
   இன்னும் ஏன் ஏய்த்து நின்றாய் ?
சித்திரை நிலவினை திகழ்வானில் காட்டியே
   தேவிநீ மாயம் செய்தாய் .
   சித்தரைப் போலவே சிறியவன் என்னை ஏன்
   சோதித்துக் காயம் செய்தாய் ?
முத்தமிழ் கவிகேட்டு முன்வினைப் பாவங்கள்
   போக்கி எனைக் காக்க வருவாய்.
   முக்கண்ணன் தேவியே மதுரை மீனாட்சியே 
   முன்னின்று காக்க நீயே. .                                                           2.


தீச்சட்டி ஏந்திய தேவிநின் பக்தரை   
   தீ என்றும் சுட்டதிலையே 
   திக்கற்று நிற்கின்ற பக்தனை நட்டாற்றில் 
   நீஎன்றும் விட்டதிலையே 
பேச்சற்ற பாமரன் நாவிலுன் பேரெழுதி 
   பெரும்புலவன் ஆக்கவிலையோ ?
   பேசத் தொடங்கிய நாள்முதல் நானுனைப் 
   பாடினேன் கேட்கவிலையோ ?
பூச்செண்டு தேடிவரும் பொன்வண்டு போலவே 
   பூவையுனை சுற்றி வருவேன்.
   பூவிழிப் பார்வையென் மேல்விழும் நாள்வரை 
   பொற்பதம் பற்றி வருவேன்.
மூச்சற்றுப் போய்விழும் நாள்வரை நானுனை 
   முடிந்தவரை பாடி வைப்பேன்.
   முக்கண்ணன் தேவியே மதுரை மீனாட்சியே 
   முன்னின்று காக்க நீயே.                                                         3.


கருவினில் சூலாகி வளர்கின்ற நேரத்தில்
   கர்ப்பத்தில் வந்தவள் நீ .
   கால்கை முளைத்திந்த பூமியில் வீழ்ந்ததும்
   கனகமுலை தந்தவள் நீ.
திருவான அறிவோடு கவிசொன்ன வேளையில்
   செந்நாவில் வந்தவள் நீ .
   திக்கற்று திசைமாறி தடுமாறும் வேளையென் 
   துணையாக வந்தவள் நீ.
 உருகியே உனைப்பாடி உளமாரத் தொழுகையில்
   உள்வளர் ஜோதி நீயே .
   ஒருவரும் துணையின்றி உள்ளம் தவிக்கையில்
    உடன்வரும் சக்தி நீயே .
முருகனின் வெற்றிக்கு வேல்தந்த அன்னை நீ
   முத்தமிழ்க் கன்னி நீயே
   முக்கண்ணன் தேவியே மதுரை மீனாட்சியே 
   முன்னின்று காக்க நீயே.                                                           4. 
    
ஆலங் குடித்திட்ட அய்யனைக் காத்தது 
   அன்னையே நீயல்லவா ?
   ஆனை முகத்தவன் அறுமுகன் இருவரின் 
   அன்பான தாயல்லவா ?
காலங்கள் வென்றவள் காற்றைப் படைத்தவள் 
   கருமாரி நீயல்லவா ?
   கடைவிழிப் பார்வைக்கு ஏங்கிடும் நானுந்தன் 
   கண்ணான சேயல்லவா ?
ஞாலங்கள் ஆள்பவள் நான்மறை ஆனவள் 
    நான்முகி நீயல்லவா ?
   ஞானம் பிறப்பிக்க நயனம் திறக்கின்ற 
    நாயகி நீயல்லவா ?
மூலங் குடிகொண்ட மோகனச் செல்வி நீ 
   முண்டகக் கண்ணி நீயே.
   முக்கண்ணன் தேவியே மதுரை மீனாட்சியே 
   முன்னின்று காக்க நீயே.                                                          5


தப்பேதும் செய்தாலும் தடுத்தென்னைக் காப்பது
   தாயுந்தன் பொறுப்பல்லவா?
   தட்டுத் தடுமாறி மேலேறும் வரையுந்தன்
   வயிற்றுக்குள் நெருப்பல்லவா ?
எப்போதும் எங்கேயும் ஏமாந்து போகின்ற
   ஏமாளி மகனல்லவா ?
   ஏமாந்து போகாமல் காப்பதும் மீட்பதும்
   என் அன்னை நீயல்லவா ?
அப்போதும் இப்போதும் அன்னையே கதியென்று
   அடிதொழும் மனமல்லவா?
   அபிராமிப் பட்டரைப் போலவே நானொரு
   அடியார்கள் இனமல்லவா ?
முப்போதும் காப்பவன் முத்தொழில் புரிபவன்
   மோகனம் கொண்ட மயிலே !
   முக்கண்ணன் தேவியே மதுரை மீனாட்சியே 
   முன்னின்று காக்க நீயே.                                                          6.


கனிவான பார்வையுன் கடைக்கண்ணில் காட்டிஎன்
   கவலைகள் போக்க வேண்டும்.
   காலங்கள் தோறுமுன் கருணையைப் பாடியே
   காலம் கழிக்க வேண்டும்.
தனியாகப் போராடி துயர்கண்டு மாளாது
   தளராமல் நில்ல வேண்டும்.
   தடைகோடி வந்தாலும் தாயுந்தன் பேர்சொல்லி
   தாண்டியே செல்ல வேண்டும்.
இனிவரும் காலத்தில் எல்லாமுன் மகனுக்கு
   ஏற்றமே ஆக வேண்டும்.
   என் அன்னை தான் எந்தன் ஏற்றத்தின் காரணம்
   என்று நான் கூற வேண்டும்.
முனிவர்க்கும்  தேவர்க்கும் முதல்வியே இனிவாழ்வில்
   முன்னேற்றம் காண வேண்டும்.
  முக்கண்ணன் தேவியே முத்து மீனாட்சியே 
   முன்னின்று காக்க வேண்டும் .                                                           7.


அடியார்கள் கூட்டத்தில் அடியேனும் ஒருவனாய் 
   அடையாளம் காண வேண்டும்.
   அன்னையின் அருள்பெற்ற அற்புதன் இவனென்று 
   அனைவரும் கூற வேண்டும்.
கொடியோர்கள் தீயோர்கள் கூட்டத்தில் சேராமல்
   குணத்தோடு வாழவேண்டும்.
   கோடியாய் செல்வங்கள் குவிந்தாலும் என்றைக்கும்
   குறையாத பணிவு வேண்டும். 
விடியாது பொழுதென்று வெம்பிக் கிடக்காமல் 
   விதியை நான் வெல்ல வேண்டும்.
   வேதனைக் கற்களை வெற்றிக்குப் படிகளாய் 
    உருமாற்றிக் கொள்ள வேண்டும்.
முடியாத செயலொன்று உண்டெனில் அதனை நான் 
   முடிக்கின்ற சக்தி வேண்டும்.
   முக்கண்ணன் தேவியே மதுரை மீனாட்சியே 
   முன்னின்று காக்க நீயே.                                                            8.

நெற்றிக்கண் கொண்டென்னை நின்கணவன் சுட்டாலும்
   நீவந்து கேட்க வேண்டும்.
   நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் எனைப்பற்றி
   நீகொஞ்சம் சொல்ல வேண்டும்.
வெற்றிக்கு வழிசொல்லும் வேழமுகப் பிள்ளையை
   வினைதீர்க்க சொல்ல வேண்டும்.
   வேல்கொண்டு நின்பிள்ளை நான்கொண்ட வினைஎல்லாம்
   வேரோடு சாய்க்க வேண்டும்
குற்றங்கள் செய்கின்ற நேரத்தில் நீவந்து
   குட்டித் தடுக்க வேண்டும்.
   கூவித் துதித்துன்னை கும்பிட்டு அழைத்தால் -நீ
   குரல்கேட்டு நிற்க வேண்டும்.
முற்றிக் கிடந்தே நான் முடிகின்ற வேளைக்கு
   முன்பேனும் வாருமம்மா
   முக்கண்ணன் தேவியே மதுரை மீனாட்சியே 
   முக்தியைத் தாருமம்மா.                                                                9 .


வானத்துத் தேவரும் வையத்து மாந்தரும் 
   வணங்கிடும் பரமேஸ்வரி
   வாவென்று நான்பாட வாஞ்சையாய் முன்வந்து 
   வரந்தரும் காளீஸ்வரி.
கானத்தில் சுவையாக கவிதைக்குள் இசையாக 
   கலந்திடும் புவனேஸ்வரி.
   கண்மூன்று கொண்டவன் காலனை வென்றவன் 
   கரம்பற்றும் சிவனேஸ்வரி.
ஆனந்தக் கூத்தனை அன்பினால் வசமாக்கி 
   ஆள்கின்ற இராஜேஸ்வரி.
   ஆனை முகத்தவன் அறுமுகன் தாயாக 
   அணைக்கின்ற மாதேஸ்வரி.
மோனம் கலைத்தேஉன் முகம் காட்ட வருவாயே 
   முக்கோடி கண்ணேஸ்வரி    
   முத்து மீனாட்சியே முத்தமிழ் கவிபாடி 
   முறையிட்டேன் நீயே கதி.    .                                                          10 .    




                                                        பாடலைப் பாடியிருப்பவர் : பிரபாகரன் 



              
 ஓம்சக்தி. 
    சிவகுமாரன் 


Thursday, September 1, 2011

விநாயகா



 
         (வெண்பா )
   
தொப்பைக் கணபதியை 
   தோத்திரங்கள் சொல்லிநிதம்
தப்பாமல் பூஜித்தால் 
   தாரணியில் - எப்போதும்
நன்மை பெருகிவர 
   நானிலத்தோர் வாழ்வெல்லாம்
இன்பம் பெறுவார் இனிது,


Friday, July 29, 2011

ஆட்கொள்வாய்

                   நமசிவாய ஓம்  
                      நமசிவாய ஓம் 
                   நமசிவாய ஓம்
                       நமசிவாய ஓம்


அண்ணா மலையில் அனலானாய் 
   ஆனைக் காவில் புனலானாய் 
மண்ணாய் காஞ்சியில் மணக்கின்றாய் 
   மாகாள ஹஸ்தியில் காற்றானாய் 
விண்ணாய் தில்லையில் விரிகின்றாய் 
   விந்தைகள்  பலவும் புரிகின்றாய்
எண்ணா தேனோ இருக்கின்றாய் 
  எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                1.

தக்கன் அழிக்க தலை கொய்தாய் 
   தருமிக் கெனவோர் கவிசெய்தாய் 
திக்குகள் எட்டும் கைக்கொண்டு 
   திருவிளையாடல் புரிகின்றாய் 
முக்கண் கொண்ட உருவானாய் 
   மூலன் தனக்கு குருவானாய் 
எக்கண் கொண்டு எனைப் பார்ப்பாய் ?
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                2.

பித்தன் என்றோர் பேர்கொண்டாய்
   பிள்ளைக் கறிமேல் பசிகொண்டாய் 
உத்தமி தன்னை இடங்கொண்டாய் 
   உலகைக் காக்க விடமுண்டாய் 
சித்தம் பலத்தில் நடங்கொண்டாய்
    சித்தர்கள் உளத்தில் குடிகொண்டாய் 
எத்தனை யோமுறை தொழக்கண்டாய் 
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?               3.

கங்கையில் பாவம் கழிக்கின்றாய் 
   காசியில் மோகம் அழிக்கின்றாய்
திங்களைத் தலையில் சூடுகின்றாய்
   தீயாய்க் கயவரைச் சுடுகின்றாய்
லிங்கமே தத்துவமே பொருளானாய்
   நித்திலம் காக்கும் அருளானாய்
எங்குனைக் காட்டி எனக்கருள்வாய்?
 எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                 4.

சுந்தரன் தன்னை ஆட்கொள்ள 
   சுவடி கையேந்தி நீவந்தாய் 
தொந்தர வளித்திடும் சூலையினை 
   தந்தபின் அப்பரை ஆட்கொண்டாய் 
மந்திரி வாதவூ ரார்தன்னை 
   மரத்தடி குருவாய் ஆட்கொண்டாய் 
எந்தையே என்னை என்செய்வாய் 
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                5.

அரிஅயன் காணா அடிமுடியை 
   அடியவன் காண அருள்வாயா ?
கரிமுகன் கந்தன் வளர்மடியில் 
   கனிவுடன் எனக்கிடம் தருவாயா?
பரியென நரியினை ஆக்கியவா 
   பரிவுடன் எனைஎன்று பார்த்திடுவாய் ?
எரிகிற மனத்தீ அணைத்திடவே 
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                6.

களிநடம் புரிகின்ற காட்சியினை 
   கண்டுளம் மகிழ்ந்திட அருள்வாயா ?
குளிர்நில வொளிமுகம் காட்டியெந்தன்
   குறைதனைத் தீர்த்திட வருவாயா ?
ஒளியென உளந்தனில் நீபுகுந்து 
   உயிருடன் எப்பொழு திணைந்திடுவாய்?
எளியவன் தரும்கவி மகிழ்ந்தேற்று
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?               7.

பொன்னும் மணியும் தரக்கேட்டேன்
  பொன்னாய் மனதை புடம் போட்டாய் 
உன்னைக் காணும் வரம்கேட்டேன் 
   ஊழ்வினை தாண்டி வரச் சொன்னாய்
முன்னும் பின்னும் அலைக்கழித்தே 
   மூளாத் தீப்போல் எரிக்கின்றாய் .
இன்னும் என்னை என்செய்வாய் ?
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                8.

தொல்லைகள் இன்னும் ஏனென்றேன் 
   தொடர்ந்திடும் முன்வினைப் பயனென்றாய்
அல்லல்கள் தீர்த்திட வாவென்றேன் 
   அனுபவி அனுபவி எனச்சொன்னாய் 
இல்லையோ நீயென பிறர்கேட்டால் 
   எளியவன் எப்படி பதில்சொல்வேன் ?
எல்லையே இல்லா என் இறைவா 
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                9.

வினைப்பயன் விதியெனும் பேரில்எனை 
   விழுலுக்கு நீரென ஆக்குவதேன் ?
தினையள வேனும்உன் திருவடியின் 
   திருவருள் காட்டிடத் தயங்குவதேன் ?
உனைத்தொழு வோர்க்கொரு துயரென்றால் 
   உனக்கது பழியாம் அறியாயோ ?
எனைத்தொடர்ந் திடும்வினை அறுந்திடவே 
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                10.  

      
                                                                -சிவகுமாரன் 
       
பாடலைப் பாடுபவர் : பிரபாகரன் 
   

Saturday, July 9, 2011

நடந்திடுவோம் கடந்திடுவோம்

  
                                                  முருகா முருகா வேல்முருகா 
                                                  முருகா முருகா வேல்முருகா 

வெற்றிவடி வேலவனை வேண்டித் தொழுதோம்
  வேதனைகள் தீர்க்கச் சொல்லி தேம்பி அழுதோம். 
கொற்றவையின் புத்திரனை கூவித் துதித்தோம்-அந்தக்
   கூத்தன்மகன் பாதத்திலே உள்ளம் பதித்தோம் .       ( முருகா ) 

உற்றபகை அத்தனையும் ஓட்ட வருவான்
   'ஓம் முருகா' என்று சொல்ல அள்ளித் தருவான்
சுற்றிவரும் வேலைக் கொண்டு சூழ்ச்சி தடுப்பான்
   தோகைமயில் ஏறிவந்து காட்சி கொடுப்பான்.             (முருகா )

ஞானப்பழம் ஆனவனின் காலைப் பற்றுவோம்
   நாதமயம் ஆனவன் கோயில் சுற்றுவோம்
ஆனைமுகன் தம்பியவன் அன்பைப் பாடுவோம் 
    ஆறுமுகன் பேரைச் சொல்லி ஆடிப் பாடுவோம்.        (முருகா )

ஆதிசக்தி மடியினில் வளர்ந்தவனாம் 
   ஆறெழுத்து மந்திரமாய் மலர்ந்தவனாம் 
ஜோதிமய மானவனின் செல்ல மகனாம் 
  சோதிக்காமல் அள்ளித்தரும் வள்ளல் குகனாம் .        (முருகா )

வேதகுரு பிரம்மனையே தண்டித்தவனாம் 
   வேலெடுத்து சூரன் தலை துண்டித்தவனாம் 
மாதுகுற வள்ளியினை மணந்தவனாம் 
   மால்மருகன் எங்கள் குறை உணர்ந்தவனாம் .             (முருகா )

அத்தனுக்கே ப்ரணவத்தின் பொருள் சொன்னவன்
   அண்டம் புவி அத்தனையும் ஆளும் மன்னவன் 
சித்தர் போகர் செய்துவைத்த சிலையானவன்
   செந்தூர்க்கடல் வீசுகின்ற அலையானவன்   .                (முருகா )

பழனிக்கு மாலையினை அணிந்திடுவோம்
   பாதம்தேய தேடிவந்து பணிந்திடுவோம்
குழந்தை வேலப்பன் முன்னே மண்டியிடுவோம் 
   குற்றம்குறை தீர்க்கச் சொல்லி தெண்டனிடுவோம்   .  (முருகா )

இடும்பனைத் துதித்தபின் மலை ஏறுவோம்
   இன்னல்துயர் குகனிடம் சென்று கூறுவோம்
குடும்பமே முருகனுக் கடிமை என்போம்
   குமரனுக்கே உயிர் உடைமை என்போம் .        .        .          (முருகா )

தேடிவந்த பக்தர்களின் உள்ளம் அறிவான் 
   தீயவினை பாவங்களை கிள்ளி எறிவான்
பாடிவந்து பாருங்களேன் பலன் அளிப்பான்
   பாசமழை சாரல் தன்னை அள்ளித் தெளிப்பான் .       .      (முருகா )

சுப்ரமண்ய வேலவனை பணிந்திடுவோம் 
   சொட்ட சொட்ட அருள்மழையில் நனைந்திடுவோம்
அப்பனவன் மலைதேடி நடந்திடுவோம்
   அவன்துணை கொண்டு விதி கடந்திடுவோம் .        .        . (முருகா)

                                                                                                     - சிவகுமாரன் 

( 2002  ஆம் ஆண்டு பழனிக்கு பாதயாத்திரை செல்லும் போது, வழிநடைப் பாடலாக எழுதி, உடனே மெட்டமைத்துப் பாடியது )  

பாடலைப் படுபவர் : பிரபாகரன் 



                                                                                                

Sunday, May 29, 2011

அருணை மலையின் ஒளியே


அருணை மலையின் ஒளியே - திரு 
   ஆலவாயின் மணியே
    அண்ணா மலையே அரசே - திரு
    ஆரூர் ஆண்ட முரசே.
கருணைக் கடலே சிவமே -உயர் 
   கயிலை மலையின் பரமே -அன்று
   காமனை எரித்த விழியை - கொஞ்சம் 
   காட்டி எனக்கு அருள்வாயே ,                          (அருணை மலையின்)

இருளில் கிடந்து தடுமாறி 
   ஏங்கித் தவிக்கும் அடியேனின் 
   இன்னல்கள் தீர்த்து மனமிரங்கி 
   இன்னருள் காட்ட வருவாயே.
அருளைக் காட்டி அணைப்பதற்கு   
   அரனே உனக்கு மனமில்லையோ ?
   ஆலம் உண்ட அருட்திரளே
   அண்ணா மலையே அருள்வாயே.               (அருணை மலையின்)

பொருளைக் கேட்கும் புவி மீதில் 
   பொன்னே உனது அருள் கேட்டேன்.
   போற்றிப் புகழ்ந்து எனது உயிர் 
    போகும் வரை நான் உனைத் தொழுவேன்.
குருவே மணியே குணநிதியே 
   கூடல் ஆண்ட அருள்நிதியே 
   கூற்றை உதைத்த பதமிரண்டை
   கூவிப் பிடித்தேன் அருள்வாயே                (அருணை மலையின்)
                             
                                                                     
                                                                                                   -சிவகுமாரன் 


சிவநாமத்தை ஜெபித்துக்கொண்டு இந்தக் குரல் பதிவை கேட்கவும்.