Monday, April 26, 2021

வள்ளலார் போற்றி

 



அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.


வடலூர் ஈன்ற வள்ளல் குணமே

   வாடிய பயிர்கண்டு வாடிய மனமே

கடவுளை ஜோதியில் காட்டிய குருவே

 கடவுளாய் ஜோதியில் கலந்திட்ட உருவே

மடமையைச் சாடிய மாபெரும் துணிவே

   மனதினைச் செம்மையாய் மாற்றிய கனிவே.

அடங்கா  எண்ணங்கள் அடக்கிட வருவாய்.

   அருட்பெருஞ் சோதியாய் அகத்தினில் மலர்வாய்.


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.


குரு வணக்கம் பாடியிருப்பவர் தம்பி பிரபாகரன். 



                                                                                                                              சிவகுமாரன் 

Saturday, April 24, 2021

சதுரகிரி பாமாலை

 


சரணம் சரணம் சரணமய்யா சந்தன மகாலிங்கம் சரணமய்யா

  சரணம் சரணம் சரணமய்யா சுந்தர மகாலிங்கம் சரணமய்யா.


சித்தரெல்லாம் கூடும் மலை சதுரகிரி- எங்கும்

   சிவமய மான சதுரகிரி

சக்தியெல்லாம் கொண்டமலை சதுரகிரி - எந்த

    சந்தேகமும் இல்லை இது கயிலைபுரி.                           ( சரணம்) 


சிவன்மலை ஏறவந்தோம் சரணமய்யா - சிவன்

   திருவடி காணவந்தோம் சரணமய்யா 

அவனிடம் அடைக்கலம் ஆனோமய்யா - அவன்

   அரசுக்கே அடிமையாய் ஆனோமய்யா             ( சரணம் )


காடுமலை தாண்டி வந்தோம் சரணமய்யா - ஈசன்

  கருணையை வேண்டிவந்தோம் சரணமய்யா 

பாடும்பொருள் சிவனன்றி வேறு இல்லைய்யா- சென்று 

  பார்க்கும் வரை சோறு தண்ணி தூக்கமில்லையா .  ( சரணம் )


ஆசிர்வாதப் பிள்ளையாரே சரணமய்யா - உங்கள்

   ஆசிகேட்டு ஓடிவந்தோம் சரணமய்யா

ஈசனிடம் எங்கள் குறை சொல்லிவிடய்யா - கொஞ்சம்

  எம்மைப் பற்றி அப்பனிடம் அள்ளிவிடய்யா.                ( சரணம்)


தாணிப்பாறை பேச்சியம்மா சரணமம்மா - உங்கள் 

   தாள்பணிந்து வேண்டுகிறோம் சரணமம்மா

ஏணிப்படி யாயிருந்து ஏற்றிவிடம்மா - எங்கள்

 ஏக்கங்களை ஊதித்தள்ளி ஓட்டிவிடம்மா                      ( சரணம் )


கருப்பண்ண சாமிகளே சரணமய்யா - உங்கள்

    காவல்தனை வேண்டிவந்தோம் சரணமய்யா 

விருப்பமாய் மலையேற வந்தோமய்யா - எந்த

  வேளையிலும் எங்களுக்கு காவல் நில்லய்யா        ( சரணம்)


கோரக்க நாதரே சரணமய்யா - உங்கள் 

  குகைதனை தேடிவந்தோம் சரணமய்யா 

பாரங்கள் குறைத்திடக் கேட்டோமய்யா - உங்கள்

    பாதத்தில் சுமைகளைப் போட்டோமய்யா              ( சரணம் )


நாவல்மர ஊற்றுதனைக் கண்டோமய்யா - அந்த

   நன்மைதரும் தீர்த்தமள்ளி உண்டோமய்யா 

நோவுகின்ற தேகம்தாங்கி வந்தோமய்யா - எந்த

   நோய்நொடியும் ஒடும்வரம் கேட்டோமய்யா               ( சரணம்)


இரட்டைலிங்கம் சந்நிதிக்கு வந்தோமய்யா - அங்கே

   ஈசனையும் மாலனையும் கண்டோமய்யா 

திட்டமெல்லாம் ரெண்டுபேர்க்கும் சொன்னோமய்யா -நாங்க

   தொட்டதெல்லாம் வெற்றிபெறக் கேட்டோமய்யா         ( சரணம்)


காராம்பசுத் தடத்திற்கு வந்தோமய்யா - ஈசன் 

   கருணையை அவ்விடத்தில் கண்டோமய்யா -

தீராவினை தீர்க்கச் சொல்லி கேட்டோமய்யா - வினை

   தீர்ந்ததென்று நம்பி நடை போட்டோமய்யா               ( சரணம்)


தவசிப்பாறை தரிசனம் கண்டோமய்யா - அங்கே

   தவம்செய்யும் சித்தர்களே சரணமய்யா 

அவசியம் எங்க குறை கேளுங்கய்யா - கொஞ்சம்

   அதைப்பற்றி சிவனிடம் கூறுங்கய்யா                         ( சரணம் )


பிலாவடி கருப்பரே சரணமய்யா -எங்கள் 

  பிழைகளைப் பொறுத்திட  வேண்டுமய்யா 

தலைவனை தரிசிக்க வந்தோமய்யா -   வரும் 

   தடைகளை உடைத்திட  வேண்டுமய்யா                     ( சரணம்)


சுந்தரா உன் சந்நிதிக்கு வந்தோமய்யா - உன்  

   சொக்குகின்ற பேரழகைக் கண்டோமய்யா 

வந்தவுடன் வலியெல்லாம்  பறந்ததய்யா - நாங்க 

   வாங்கவந்த வரம் கூட மறந்ததய்யா                           ( சரணம் )


ஆனந்த வல்லியம்மா  சரணமம்மா - நீங்கள் 

    ஆதர வளித்திட  வேண்டுமம்மா 

கானத்தைக் கேட்டிட வாருமம்மா - கொஞ்சம் 

   கடைக்கண்ணை திறந்தெம்மை பாருமம்மா         ( சரணம் )


பச்சைமால் சடைமங்கை சரணமய்யா  - நீங்கள் 

   பால்தந்த லிங்கத்துக்கும்  சரணமய்யா 

இச்சையுடன் பூவுலகம் வந்தீரய்யா - அந்த 

    ஈசனுக்கே பிரம்படி தந்தீரய்யா .                                      ( சரணம்)


சந்தனமே உந்தன் முன்னே வந்தோமய்யா - மனச் 

   சஞ்சலங்கள் அத்தனையும் சொன்னோமய்யா 

சிந்தையிலே உன்னையன்றி வேறு யாரய்யா - வாழ்வின் 

    சிக்கலெல்லாம் தீரக்கண்  திறந்து பாரய்யா             (சரணம்)


அம்பிகையும் இடப்பாகம் கேட்டாளய்யா - நீங்கள் 

   அருள்தந்து அம்மையப்பன் ஆனீரய்யா -

நம்பிவந்தோம் உங்களையே காப்பீரய்யா - எமக்கு 

   நற்கதியைத் தந்து கரை சேர்ப்பீரய்யா                          ( சரணம் )


சந்தன மகாதேவி சரணமம்மா - நீங்கள் 

    தவம்செய்த பாறைக்கும் சரணமம்மா 

வந்துநின்று குறைசொல்லி பணிந்தோமம்மா  - இனி 

    வருவதை எதிர்கொள்ள துணிந்தோமம்மா                    ( சரணம் )


சந்தன விநாயகரே சரணமய்யா - ஸ்ரீ 

   சந்தன முருகவேளே  சரணமய்யா 

தந்தையிடம் எமக்காக தூது செல்லய்யா - கொஞ்சம் 

   தயைகாட்டி  தரிசனம் தரச் சொல்லய்யா                         ( சரணம் )


தவம்செய்யும் சித்தர்களே சரணமய்யா - உங்கள் 

   தாளினைப் பணிந்தோம் சரணமய்யா 

சிவமதை உணர்த்திட வாருமய்யா - எங்கள் 

    சித்தமதில் தெளிவினைத் தாருமய்யா                            ( சரணம் )

 

திருமூல நாயனாரே சரணமய்யா - உங்கள் 

   திருவடி பணிந்தோம் சரணமய்யா 

கருவூர் சித்தரே சரணமய்யா - நீங்கள் 

    காட்டிடும் வழிசெல்ல வந்தோமய்யா                         ( சரணம் )

 

அகத்திய மாமுனி சரணமய்யா - உங்கள் 

   அறிவினில்  சிறுதுளி கேட்டோமய்யா 

அகப்பேய் சித்தரே சரணமய்யா - எங்கள் 

   அகப்பேய் ஓட்டிட வாருமய்யா                                        ( சரணம் )


வான்மீகி நாதரே சரணமய்யா - உங்கள் 

   வாழ்த்தொலி கேட்டிட வந்தோமய்யா 

ஆன்மீக வழிதனில் நடப்போமய்யா - உங்கள் 

   ஆசியி னால்விதி கடப்போமய்யா                       ( சரணம் )


பழனிமலை போகரே சரணமய்யா - திரு 

   பாம்பாட்டிச் சித்தரே சரணமய்யா 

அழகணிச் சித்தரே சரணமய்யா - அந்த 

    அரனருள் கிடைத்திட வழி சொல்லய்யா         ( சரணம் )


வாமதேவா உமக்குச் சரணமய்யா - நீங்கள் 

  வாங்கிவந்த வரத்துக்கும்  சரணமய்யா  

இராமதேவச் சித்தரே சரணமய்யா - உங்கள் 

   இரசவாத வித்தைக்கும் சரணமம்மா                 ( சரணம் )


வாலைச்  சித்தரே  சரணமய்யா - ஸ்ரீ  

   வல்லபச் சித்தரே சரணமய்யா 

காலங்கி  நாதரே சரணமய்யா - அந்த 

   காலனை வென்றிடும் வழிசொல்லய்யா     ( சரணம் )


குதம்பைச் சித்தரே சரணமய்யா - திரு 

   கொங்கணச்  சித்தரே சரணமய்யா 

பதஞ்சலி மாமுனி சரணமய்யா - உங்கள் 

   பலன்தரும் யோகங்கள் கேட்டோமய்யா      ( சரணம் )


புலிப்பாணிச் சித்தரே சரணமய்யா -திரு 

   புண்ணாக்கீசரே  சரணமய்யா 

கலியுக மெய்யரே சரணமய்யா - இந்த 

    கலியுகம் காத்திட வேண்டுமய்யா                ( சரணம் )


கடுவெளிச் சித்தரே சரணமய்யா - ஸ்ரீ 

    கமலமுனிச் சித்தரே சரணமய்யா 

இடைக்காட்டுச் சித்தரே சரணமய்யா - அந்த 

   ஈசனைக் காணும் வழி  சொல்லய்யா         ( சரணம் )


மருத்துவர் தன்வந்திரி சரணமய்யா - திரு 

   மச்சமுனிச் சித்தரே சரணமய்யா 

வருத்தங்கள் போக்கிட வாருமய்யா - எங்கள்  

   வாழ்க்கைக்கு வளங்களைத்  தாருமய்யா       ( சரணம் )


சட்டைமுனி நாதரே சரணமய்யா - உங்கள் 

   சந் நிதிக்கு வந்து நின்றோம் சரணமய்யா 

பட்டினத்துச் செட்டியாரே  சரணமய்யா - உம்மை 

   பதம்பார்த்த மகனுக்கும் சரணமய்யா                        ( சரணம் )


சிவவாக்கியரே சரணமய்யா - உங்கள் 

   சீரான பாடலுக்கும் சரணமய்யா 

நவநாதச் சித்தர்களே சரணமய்யா - உங்கள் 

  நவபா ஷாணத்திற்கும் சரணமய்யா                            ( சரணம் )


அத்தரி மகரிஷி சரணமய்யா - உங்கள் 

    அழகிய வனத்திற்கு வந்தோமய்யா 

பத்திர கிரியாரே சரணமய்யா - உம்மை 

   பணிந்தடி தொழுதோம் சரணமய்யா                         ( சரணம் )


நந்தியெனும் சித்தரே சரணமய்யா - ஸ்ரீ 

   நாதமுனிச் சித்தரே சரணமய்யா 

சுந்தரா னந்தரே  சரணமய்யா - உம்மை 

    தொழுதடி பணிந்தோம் சரணமய்யா                         ( சரணம் )


யாழ்வல்ல தேவரே சரணமய்யா - உங்கள் 

    யாழிசை கேட்க வந்தோமய்யா 

வாழ்க்கைக்கு வழிசொல்லக் கேட்டோமய்யா -அதை 

    வழங்கிட ஈசனை வரச்  சொல்லய்யா                               ( சரணம் )


யூகியர் புலத்தியர் சரணமய்யா- பல 

     யுகங்களைக் கடந்தோரே சரணமய்யா 

காக புஜண்டரே சரணமய்யா - முக் 

    காலமும் உணர்ந்தோரே  சரணமய்யா                           ( சரணம் )


தேரையரே  உமதடி  சரணமய்யா - ஸ்ரீ 

   ரோமரிஷித் சித்தரே சரணமய்யா 

வேறுயாரும் விட்டிருந்தால் சரணமய்யா - உங்கள் 

     வேர்களுக்கும் விழுதிற்கும்  சரணமய்யா                  ( சரணம் )


 பதினெட்டுச் சித்தர்களே சரணமய்யா - இன்னும் 

    பலகோடிச் சித்தர்களே சரணமய்யா 

அதிசய மலைக்கோர் சரணமய்யா - பல் 

     ஆயிரம் கோடி சரணமய்யா                                           ( சரணம் )


சித்தனுக்கே சித்தன் அந்த சிவன் தானய்யா -எங்கள் 

   சித்தத்திலே  வந்து குடி புகுந்தானய்யா 

சத்தியமாய் காட்சி தந்து அருள்வானய்யா - எங்கள் 

    சரணங்கள் கேட்டு அவன் வருவானாய்யா                     ( சரணம் )

 

சிவசிவ சிவமென்று சொன்னோமய்யா - அந்த 

    சிவனது பாதம்பற்றிக் கொண்டோமய்யா 

தவமின்றி வரங்களைக் கேட்டோமய்யா  - அதை 

   தரும்வரை சோர்ந்துவிட மாட்டோமய்யா                          ( சரணம் )


                                                                                                                     - சிவகுமாரன் 



தம்பி பிரபாகரனோடு சேர்ந்து சரணம் சொல்லுங்கள் .