Sunday, April 12, 2020

மன்றாடிப்பார்



குன்றெல்லாம் குடியாக உருவானவன் -கொஞ்சம்
 மன்றாடிப்பார் நேரில் வருவானவன்.
அன்றாடம் துதிப்போர்க்குள் இருப்பானவன் - தன்
 அடியாரை எதிர்ப்போர்க்கு நெருப்பானவன் -  முருகன் ( குன்றெல்லாம்...)     1.

உமைபாகன் நுதற்கண்ணில் உருவானவன் - அந்த
உலகாளும் தந்தைக்கே குருவானவன்  .
கேட்டாலே தரும் கல்ப தரு ஆனவன் -  நீ
கேட்டுப் பார் , எடுத்தள்ளித் தருவானவன் - முருகன் (குன்றெல்லாம்...)           2.

காட்டிடையன் போல்வேடம் தரித்தானவன்- சுட்ட
கனிஈந்து மணல்ஊதச் சிரித்தானவன்
திமிர்கொண்ட அசுரன் தோல் உரித்தானவன் - என்
தமிழுக்கும் அவனேதான்  உரித்தானவன் - முருகன் (குன்றெல்லாம்...)            3.


மலையேறி அரையாடை அணிந்தானவன் - பின்
மனம்மாறி கடுங்கோபம் தணிந்தானவன் .
குறவள்ளி தனைத்தேடி மணந்தானவன் - பொதிகைக்
குளிர்த் தென்றல் தமிழ்வீசும் மணம்தான்அவன்- முருகன்(குன்றெல்லாம்)   4.

திருஅருண கிரிநாவில் இருந்தானவன் - ஊமைக்
குருபரனின் பிணிதீர்க்கும் மருந்தானவன்.
புவிசுற்ற மயிலேறி பறந்தானவன் - என்
கவிகொத்திச் செல்கின்ற பருந்தானவன் - முருகன் (குன்றெல்லாம்)               5.

படைதன்னை வேல்கொண்டு பொடிசெய்தவன் - அசுரன்
பகைவென்று அதிற்  சேவற் கொடி செய்தவன் .
உலகெங்கும் தமிழ்நெஞ்சே குடி ஆனவன் - என்
உளம் உழுது பயிர் செய்யும் குடியானவன்  - முருகன் (குன்றெல்லாம்)            6.

அவ்வைக்குத் தமிழ் ஞானப் பழமானவன் -வள்ளி
அழகுக்கு மனம்மயங்கி கிழமானவன் -
உயர்வான வழிகாட்டும் மறை ஆனவன் - அவனை
உனக்குள்ளே தேடிப்பார் மறையான் அவன் - முருகன் (குன்றெல்லாம்)          7.

செந்தூரில் அலைவீசும் கடலானவன் -இன்பச்
செந்தமிழின் இசையே தன்  உடலானவன் -
குருப்ரம்மன்  சிறைவழக்கின் தீர்ப்பானவன் - உன்
குறைசொல்லிப் பார்அனைத்தும் தீர்ப்பான்அவன்-முருகன்(குன்றெல்லாம்)8

தெய்வானை வள்ளிக்கும் துணையானவன் -இன்பத்
தேன்தமிழின்  இன்சுவைக்கு இணையானவன் !
அடியாரின் விழி நீர்க்கு அணையானவன் - அவனை
அகல்விளக்காய் ஏற்றிப்பார் ,அணையான்அவன்-முருகன்(குன்றெல்லாம்) 9.

ஓங்கார நாதத்தின் பொருளானவன் - தினம்
ஓம் என்று சொல்லிப்பார் அருள்வான் அவன் .!
உலகத்தின் இருள்நீக்கும் ஒளி ஆனவன் - நீ
உளமுருகிக் கேள் எதையும் ஒளியான் அவன் - முருகன் (குன்றெல்லாம்)     10.


                                                      பிரபாகரனின் தெய்வீகக் குரலில் 




                                                        என் அம்மாவின் குரலில் 







சிவகுமாரன் 



Thursday, January 23, 2020

அழைப்பாயா ?


பூசத் திருநாளில் பொற்பாதம் தேடிவர
ஆசை அதிகமுண்டு ஆறுமுகா- பாசமுடன்
என்னை அழைப்பாயா, ஏங்கித் துடிதுடித்து
உன்னைத் தொடரும் உயிர்.
                                            -சிவகுமாரன்