குன்றெல்லாம் குடியாக உருவானவன் -கொஞ்சம்
மன்றாடிப்பார் நேரில் வருவானவன்.
அன்றாடம் துதிப்போர்க்குள் இருப்பானவன் - தன்
அடியாரை எதிர்ப்போர்க்கு நெருப்பானவன் - முருகன் ( குன்றெல்லாம்...) 1.
உமைபாகன் நுதற்கண்ணில் உருவானவன் - அந்த
உலகாளும் தந்தைக்கே குருவானவன் .
கேட்டாலே தரும் கல்ப தரு ஆனவன் - நீ
கேட்டுப் பார் , எடுத்தள்ளித் தருவானவன் - முருகன் (குன்றெல்லாம்...) 2.
காட்டிடையன் போல்வேடம் தரித்தானவன்- சுட்ட
கனிஈந்து மணல்ஊதச் சிரித்தானவன்
திமிர்கொண்ட அசுரன் தோல் உரித்தானவன் - என்
தமிழுக்கும் அவனேதான் உரித்தானவன் - முருகன் (குன்றெல்லாம்...) 3.
மலையேறி அரையாடை அணிந்தானவன் - பின்
மனம்மாறி கடுங்கோபம் தணிந்தானவன் .
குறவள்ளி தனைத்தேடி மணந்தானவன் - பொதிகைக்
குளிர்த் தென்றல் தமிழ்வீசும் மணம்தான்அவன்- முருகன்(குன்றெல்லாம்) 4.
திருஅருண கிரிநாவில் இருந்தானவன் - ஊமைக்
குருபரனின் பிணிதீர்க்கும் மருந்தானவன்.
புவிசுற்ற மயிலேறி பறந்தானவன் - என்
கவிகொத்திச் செல்கின்ற பருந்தானவன் - முருகன் (குன்றெல்லாம்) 5.
படைதன்னை வேல்கொண்டு பொடிசெய்தவன் - அசுரன்
பகைவென்று அதிற் சேவற் கொடி செய்தவன் .
உலகெங்கும் தமிழ்நெஞ்சே குடி ஆனவன் - என்
உளம் உழுது பயிர் செய்யும் குடியானவன் - முருகன் (குன்றெல்லாம்) 6.
அவ்வைக்குத் தமிழ் ஞானப் பழமானவன் -வள்ளி
அழகுக்கு மனம்மயங்கி கிழமானவன் -
உயர்வான வழிகாட்டும் மறை ஆனவன் - அவனை
உனக்குள்ளே தேடிப்பார் மறையான் அவன் - முருகன் (குன்றெல்லாம்) 7.
செந்தூரில் அலைவீசும் கடலானவன் -இன்பச்
செந்தமிழின் இசையே தன் உடலானவன் -
குருப்ரம்மன் சிறைவழக்கின் தீர்ப்பானவன் - உன்
குறைசொல்லிப் பார்அனைத்தும் தீர்ப்பான்அவன்-முருகன்(குன்றெல்லாம்)8
தெய்வானை வள்ளிக்கும் துணையானவன் -இன்பத்
தேன்தமிழின் இன்சுவைக்கு இணையானவன் !
அடியாரின் விழி நீர்க்கு அணையானவன் - அவனை
அகல்விளக்காய் ஏற்றிப்பார் ,அணையான்அவன்-முருகன்(குன்றெல்லாம்) 9.
ஓங்கார நாதத்தின் பொருளானவன் - தினம்
ஓம் என்று சொல்லிப்பார் அருள்வான் அவன் .!
உலகத்தின் இருள்நீக்கும் ஒளி ஆனவன் - நீ
உளமுருகிக் கேள் எதையும் ஒளியான் அவன் - முருகன் (குன்றெல்லாம்) 10.
பிரபாகரனின் தெய்வீகக் குரலில்
என் அம்மாவின் குரலில்
சிவகுமாரன்