Tuesday, March 15, 2016

ஜோதி கண்டேன்
















ஒம்நமசி வாயவென
  உள்ளம் உயிர் உள்ளிருந்து
நாமணக்க நானுரைக்கும் மந்திரம் -அந்த
சோமனையே கட்டிவரும் எந்திரம்.

பித்தனவன் பேரைச் சொல்லி
  மத்த சுகம் தூரத் தள்ளி
நித்தம்நித்தம் நான் படிக்கும் பாட்டு - என்
அத்தனவன் இன்னருளைக் கேட்டு.

நானுரைக்கும் நூறு கவி
  நாயகனின்  காதில் சென்று
தேனொழுகச் செய்து தித்திக்காதோ -என்
கானம் தவிர்த்தால் அதுவும் காதோ?

ஆதிசக்தி அம்பிகைக்கு 
  அண்டம் புவி ஆளச் சொல்லி 
பாதி உடல் தந்தவனைப் போற்றி - ஒரு 
ஜோதி கண்டேன் உள்ளமதில் ஏற்றி. 

தஞ்சமென அப்பனவன் 
  தாள்பிடித்து நான் தொழுது 
அஞ்செழுத்து மந்திரத்தை ஓதி - என் 
நெஞ்சுக்குள்ளே தீவளர்த்தேன் ஊதி.

உள்ளுக்குள்ளே மூண்டெழுந்து 
  நின்றெரியும் ஜோதியினை 
சொல்லுக்குள்ளே கொண்டுவரக் கூடுமோ?- அவன் 
வல்லமையை நாவெழுந்து பாடுமோ?

காலடியும் மேல்முடியும் 
  கண்டுகொள்ள போட்டியிட்டு 
மாலவனும் பிரம்மனுமே தோற்க -ஒரு 
காலம் வருமோ எனையும் ஏற்க ?

வேதங்களில் நான்குமாகி 
  பூதங்களில் ஐந்துமாகி 
ஆதாரங்கள் ஆறின் வழி தெரிவான் - அவன் 
பாதாளமும் வானுலகும் விரிவான். 

இச்சை கொண்ட தேவரெல்லாம் 

  இன்னமுதம் அள்ளித்தின்ன 
நச்சை மட்டும் தானே உண்ட சாமி - இட்ட 
பிச்சையிலே வாழுதிந்த பூமி. 

ஆலமுண்ட கண்டனிடம் 
  பாலகனும் ஓடிவந்து 
ஓலமிடக் கண்டு உள்ளம் பதைத்தான் - அவன் 
காலனையே காலால் எட்டி உதைத்தான். 

கண்ணப்பனின் கண்பறித்து 

  சின்னப்பிள்ளை ஊன் அரிந்து 
என்ன பயன் கண்டு கொண்டான் அறியேன் - அந்த 
மன்னனிடம் மாட்டிக் கொண்டேன் சிறியேன்.

பிட்டுக்கென மண்சுமந்து 
  பிரம்படியால் புண்சுமந்து 
கட்டிக்கொண்ட புண்ணியங்கள் என்னவோ? - அவன் 
பட்டதெல்லாம் தன்னடியார்க் கல்லவோ ! 

செட்டிப் பெண்ணின் தாயுமாகி 

  பட்டினத்தார் சேயுமாகி 
இட்டமுடன் கொண்ட வேடம் கொஞ்சமோ - இன்னும் 
திட்டமிடும் மேடை எந்தன் நெஞ்சமோ?

இன்பம் வரும் வேளையிலும் 
  துன்பம் வரும் வேளையிலும் 
ஜம்புலிங்கம் பேரைச் சொல்லித் துதிப்பேன் - பொன் 
அம்பலத்திலே மனதைப் பதிப்பேன்.

நெற்றிவிழி யால்மதனைச் 

  சுட்டவனின் பாதமலர் 
பற்றிக்கொண்டு நான்துதித்துக் கிடப்பேன்- அவன் 
உற்ற துணையால் விதியைக் கடப்பேன்.

நெட்டநெடு மாமலையாய் 
  நின்றவனின் பாதமண்ணை 
தொட்டெனது பாவங்களைத் தீர்ப்பேன்-மலை 
சுற்றிவந்து புண்ணியங்கள் சேர்ப்பேன்.

உண்ணாமுலை தேவியோடு 

  ஓடிவந்து காட்சிதர 
அண்ணாமலை தாள்வணங்கி வருவேன்- தவம் 
பண்ணாமலே கேட்டவரம் பெறுவேன்.

கோளனைத்தும் கூடித் தொழும் 
   கூத்தனவன் கால்பிடித்து 
காலனையும் நானெதிர்த்து வெல்வேன் - வாழ் 
நாளனைத்தும் அஞ்செழுத்தைச் சொல்வேன்.

நீற்றை  அள்ளிப் பூசிக்கொண்டு 

  நேசன்புகழ் பேசிக்கொண்டு 
போற்றுகின்றேன் அய்யனவன் பேரை - மனதில் 
ஏற்றிக்கொண்டு ஓட்டுகின்றேன் தேரை.

பாடுபட்டுக் காத்த உயிர் 
  கூடுவிட்டு ஓடும்வரை 
ஆடுகின்ற ஆட்டங்களும் எத்தனை - பதறி 
தேடுகின்றேன் ஆட்டுவிக்கும் பித்தனை. 


சிவகுமாரன் 
 
  பிரபாகரனின், ஊனை உருக்கும்  குரலில் இறையனுபவம் பெறுங்கள்

சமர்ப்பணம் : 
அருட்கவி வலைத்தளத்திற்கு தொடர்ந்து ஆதரவு  அளித்து வந்த, இறைத்தொண்டர் அமரர் : இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு  

Sunday, February 14, 2016

ஆண்டுதோறும் நடப்போம்.



பழனிமலை தணிகைமலை 
   பரங்குன்றம் சுவாமிமலை
அழகர்மலை செந்தூர் அலை எங்கும் - எங்க(ள்)
   ஆறுமுகா உந்தன் அருள் பொங்கும்.

பார்வதியின் வேலெடுத்து 
   பகைவெல்ல  சூளுரைத்து
சூரர்குலம் வேரறுத்துக் கொன்றாய்-அந்தச்
   சூரனையும் சேவலாக்கி நின்றாய்.

சுட்டபழம் கேட்ட அவ்வை
   செந்தமிழில் நீ மயங்கி
இட்டமுடன் நாவல்கனி பறித்தாய்- அதை
   எடுத்தவள் மணல் ஊதச் சிரித்தாய்.

கண்ணில் காதல் கொப்பளிக்க
   கணபதி ஒத்துழைக்க
கன்னிமானைத் தேடுவதாய் துரத்தி - நீயும் 
   கவர்ந்திட்டாய் மயங்கினாள் குறத்தி.

புள்ளிமானைத் தேடிக்கிட்டு 
   பொறுப்பின்றி மெனக்கெட்டு
வள்ளி பின்னே சுத்தி நீயும் திரிந்தால் - உன்னை
   வையப் போறார் அப்பனுக்குத் தெரிந்தால். ...

வேதகுரு பிரம்மனையே
   வேதத்திற்குப் பொருள்கேட்டு
சோதித்தது போதுமடா குறும்பா-எம்மைச்
   சோதித்திட உந்தன் மனம் இரும்பா?

அத்தனுக்கேப்  பிரணவத்தின்
   அரும்பொருள் சொல்லிவைத்த 
புத்திரனே ஞானஸ்கந்த குருவே - எங்கள் 
   புத்தியெல்லாம் உந்தன் எழில் உருவே,

அப்பன் மேலே கோச்சுக்கிட்டு 
   ஆண்டிக்கோலம் பூண்டுக்கிட்டு
தப்புசெய்ய வேணாமய்யா கந்தா- உன்னைத்
   தாங்கிக்குவோம் கீழிறங்கி வந்தா

உச்சிமலை ஏறிக்கிட்டு 
   ஒய்யாரமா நின்னுக்கிட்டு
பச்சபுள்ள பேலெதுக்கு ஆட்டம்? - உன்னைப்
   பாக்க இங்க காத்திருக்கு கூட்டம்.

கோவணத்தக் கட்டிக்கிட்டு 
   குன்றின்மேலே ஏறிக்கிட்டு
தேவையில்லை இந்தக் கோபம் முருகா - எங்கள்
   தேவையெல்லாம் தீர்க்க ஓடி வருவாய்.

ஆறுபடை வீடு நோக்கி 
    ஆறுதலைத் தேடி வந்தோம் 
ஆறுதலைக் கொண்ட எங்கள் சாமி- நீயும் 
   ஆசைமுகம் ஆறிலொன்றைக் காமி. 

கந்தா உன்னைப் பாடிக்கொண்டு
   கால்வலிக்க ஓடிக்கொண்டு
வந்து நின்றோம் உந்தன் வாசல் தேடி - நீயும்
   வழங்கிட வேணும் அருள் கோடி

கால்வலியைத் தாங்கிக்கிட்டு 
   கண்டதையும் தின்னுக்கிட்டு
வேல்முருகா உன்னைக் காண வந்தோம் - எங்க(ள்)
   வேண்டுதலை உன்னிடத்தில் தந்தோம்.

சொந்தவேலை விட்டுப்புட்டு
   சொந்தங்களைக் கூட்டிக்கிட்டு
கந்தா உன்னைக் காண ஓடி வாரோம்- நீயும்
   கண்டுக்காட்டி என்ன செய்யப் போறோம்?

வேலையெல்லாம் தள்ளிவச்சு  
   வேலை மட்டும் நெஞ்சில் வச்சு
வேலவனைக் காண இந்த ஓட்டம் -இப்ப
   வேறெதிலும் இல்லை எங்கள் நாட்டம்.

வெயில்,பனி பார்க்கவில்லை 
   வெட்டிப்பேச்சு பேசவில்லை 
மயிலோனே நீதான் எங்கள் எண்ணம் - உந்தன் 
   மனதையும் வெல்வோம் அது திண்ணம் .
   
கார்த்திகேயா உன்னை நாங்கள்
   கால்வலிக்கத் தேடிவந்து
பார்த்தவுடன் போகும் வலி பறந்து- எம்மை
   பார்த்துவிடு பன்னிருகண் திறந்து.

பாலசுப்ர மணியனே 
   பார்வதியின் பாலகனே
காலமெல்லாம் உன்னைப் பாடிக் கிடப்போம் - உன்னைக்
   கண்டுவர ஆண்டுதோறும் நடப்போம்.

தண்டாயுத பாணி உன்னைத்
   தமிழ்கொண்டு பாடுதல்போல்
உண்டோ வேறு இன்பங்களும் எமக்கு- இதில்
   உண்மை சொல்லு இஷ்டம் தானே உமக்கு(ம்)?

கண்ணு ரெண்டும் பூத்துப் போச்சு
   காலு கையி வேத்துப் போச்சு
ஒண்ணுமில்லை எமக்கிந்த வாட்டம்  -நாங்க
   உன்னை சும்மா விட்டு விட மாட்டோம்.



-சிவகுமாரன் 
 என்னை எழுத வைத்ததும் , என் தம்பி பிரபுவை பாட வைத்ததும்
 அந்த அழகன் முருகனே. 




Sunday, January 24, 2016

அதோபார் அவன்.

+

வெண்பா 

தூரம் பெரிதோ, துணையாய்க் கந்தனவன்
பாரம் சுமந்து பயணிக்க ? -  நேரம்
நெருங்கியது , நீங்கள் நினைத்ததை எல்லாம்
அருள அதோபார் அவன்.

-சிவகுமாரன்


தைப் பூசத் திரு நாளின்று பாதயாத்திரை செல்லும்  எங்கள் குழுவினருக்கு சமர்ப்பணம் 



Monday, January 18, 2016

அழகன் முருகன்


(வழிநடைப் பாடல்)

அரோகரா ஓம் அரோகரா 
            அழகன் முருகன் அரோகரா 
   அரோகரா வேல் அரோகரா 
                அறுபடை முருகன் அரோகரா 

பழனியில் முருகன் படைவீடு - அங்கு 
   பாதங்கள் தேய நடைபோடு 
அழகன் முருகன் அருள்தேடு - அவன் 
   அடிதொழ மறந்தால் வரும்கேடு .                              (அரோகரா)

கவலைகள் இருந்தால் தள்ளிப்போடு- அதை 
   கந்தனவன் காலடியில் அள்ளிப்போடு !
அவனிடம் துயரங்கள் சொல்லிப்போடு - அவன் 
   அருள்மழை பொழிவான்  துள்ளி ஆடு !                    (அரோகரா)

காவடி  தூக்கி மலையேறு -அவன் 
   காலடி பணிந்து  மனம் ஆறு 
பாவங்கள் தீர்த்திட வருமாறு -அந்தப் 
   பாலனை அழைத்து உன் குறை கூறு!                          (அரோகரா)

சரவணப் பொய்கையில் நீராடு - உன் 
   சங்கடம் கழியும் நீரோடு !
வரங்களைத் தரச்சொல்லு சீரோடு - அதை 
   வடிவேலன்  தரும்வரை போராடு!                                 (அரோகரா)

கந்தனுக்கு முகங்கள் ஓராறு - நம்மைக் 
   காத்திடும் கரங்கள் ஈராறு !
செந்தில்வேலன் பேரைச் சொன்னால் சுகம் நூறு -இது 
   சித்தரெல்லாம் கண்டு  சொன்ன வரலாறு                 (அரோகரா)

தண்டபாணி ஏறிவரும் தங்கத்தேரு - அது 
   தகதக வெனவே  மின்னும் பாரு 
கண்டுகொள்ள வேணுமடா கண்கள் நூறு - அதைக் 
   கண்ட பின்னே கவலைகள் ஓடும் பாரு!                    (அரோகரா)

பாடலை பாடியிருப்பது : பிரபு & சுற்றத்தார் 
இசை : செல்வன் 


-சிவகுமாரன்