Monday, September 9, 2013

செட்டிக் குளத்து சித்தி விநாயகா





    நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க வேண்டும் 
அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும்

முன்னவா !  உலகுக் கெல்லாம் மூலவா ! முருகவேளின் 
   மூத்தவா ! வினைகள் தீர்த்து முடிப்பவா ! பிரணவப் பொருளை 
சொன்னவா ! சிவமே உலகம் என்றவா ! கனியை வாங்கிச்
   சென்றவா சிந்தை முழுதும் நின்றவா நேரில் வா வா !
என்னவா எங்கள் இறைவா ! ஈசனின் மைந்தா கணேசா!
   எங்கள்குலம் தன்னைக் காக்க வந்தவா ஆலங்குடியின்
மன்னவா அருள்மிகு சித்தி விநாயகா செட்டிக்குளத்து
   "மண்"ணவா மலரடி தொழுதேன் மகிழ்ந்து நீ முன்னே வா வா !

ஆயிரம் இனங்கள் வாழும் ஆலங்குடி மாநகர்  தன்னில்
   ஆரம்ப எல்லை தனிலே ஆலயம் கொண்ட தேவா
கோயிலும், அருகே அழகாய் குளமொன்றும்   கட்டி வைத்தோம்
    கோயிலை கட்டிவைத்த குலந்தன்னை காக்க வா வா!
வாயிலில் வந்து  நின்றோம் வாயார பாடுகின்றோம்
   வரம் கேட்போர் வாழ்க்கை தன்னை வளமாக்க வேண்டுகின்றோம்
நீயின்றி யாரும் உண்டோ நிமலனே எம்மைக் காக்க
   நெஞ்சத்தின் குறைகள் எல்லாம் நேரிலே வந்து கேட்க.

மோதகம் அவல் பொரி சுண்டல், முந்திரி திராட்சை பொங்கல்
   முன்வைத்து படையல் இட்டால் முந்தி நீ வருவாய் அன்றோ?
காதலால் கவிதை பாடி கண்ணீரால் படையல் இட்டு
   கணபதி உன்னைத் தொழுதேன் கவலைகள் தீர்க்க வாராய்
சோதனை தாண்ட வேண்டும் சோகங்கள் தீர வேண்டும்
   தோல்வியின் தோளில் ஏறி தொடர்ந்து நான் வெல்ல வேண்டும்
ஆதரவு காட்ட வேண்டும் அருட்கரம்  நீட்ட வேண்டும்
    ஆலங்குடி செட்டிக் குளத்து ஐங்கரா காக்க வேண்டும்

அரிதேவன் இலக்குமியோடு அருள்மழை பெய்ய வேண்டும்
   அறுமுகன் ஆண்டு எம்மை அரசாட்சி செய்ய வேண்டும்
சரிபாதி சிவனில் பெற்ற சங்கரி நோக்க வேண்டும்
   சங்கடம் எல்லாம் தீர்த்து சந்ததி காக்க வேண்டும்
திரிசூலம் கொண்ட ஈசன் திருமுகம் காட்ட வேண்டும்
   திருவிளையாடல் காட்டி தீவினை ஓட்ட வேண்டும்
கரிமுகா நீயே எங்கள் கருணைமனு ஏற்க வேண்டும்
   கடவுள்கள் எல்லோரிடத்தும் காண்பித்து சேர்க்க வேண்டும்.

அம்பிகை அரனின் மடியில் ஆசையாய் வளர்ந்த பிள்ளை
   ஆறுமுகத் தம்பியோடு ஆடி விளையாடிய பிள்ளை
தும்பிக்கை பலத்தைக் கொண்டு சூரனை வென்ற பிள்ளை
    சுப்பிர மணியனுக்கு தூதாக சென்ற பிள்ளை
நம்பிக்கை வைத்த பேர்க்கு நலம் யாவும் செய்யும் பிள்ளை
   நாரதர் கலகத்தாலே ஞானப்பழம் பெற்ற பிள்ளை
எம்பிரான் ஈசனின் பிள்ளை எங்கள் செட்டிக் குளத்துப் பிள்ளை
  இன்னல்கள் தீர்க்கும் பிள்ளை இருக்க இனி கவலை இல்லை

 நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க வேண்டும் 
   அல்லவை எல்லாம் தீர்ந்து நல்லதே நடக்க வேண்டும்
நல்லோர்கள் சொல்லும் வார்த்தை நாட்டிலே பலிக்க வேண்டும் 
  நமசிவாய என்னும் ஒலியே நாள்தோறும் ஒலிக்க  வேண்டும்.
பொல்லாதோர் செயல்கள் எல்லாம் பொடிப்பொடி ஆக வேண்டும் 
   பொய் களவு வஞ்சனை சூது  பொசுங்கியே போக வேண்டும் 
எல்லோரும் எல்லாம் பெற்று எங்கள்  சித்தி விநாயகன் அருளால் 
   இணையிலா செல்வம் பெற்று ஏற்றமுடன் வாழ வேண்டும்  



பாடியிருப்பவர் பிரபாகரன்

பாடலை சுப்புத் தாத்தாவின் குரலில் கேட்டு மகிழுங்கள் 







சிவகுமாரன்