Wednesday, February 22, 2012

மாலவன் காணா மலரடி


ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நமஓம் 
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நமஓம் 


நீரெனவாகி நிலமெனவாகி 
   நெடுவானாகி காற்றாகி    
   நெருப்பெனவாகி பொருப்பெனவாகி 
   நீள்கடலாகி கதிராகி 
கார்முகிலாகி கடும்புயலாகி 
   கனமழையாகி தருவாகி 
   காயெனவாகி கனியெனவாகி 
   விதையெனவாகி விரிவோனே! 
பூரணமாகி பூஜ்ஜியமாகி 
   புவிமிசை புதிராய் தெரிபவனே 
   புதியனவாகி பழையனவாகி  
   புதுமைகள் தினந்தினம் புரிபவனே
மாரனின் கணைகள் மேல்விழ சினந்தே 
   மறுகணம் விழியால் எரித்தவனே 
   மாதொரு பாகா , மாலவன் காணா 
   மலரடி தொழுதேன் அருள்வாயே!

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நமஓம் 
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நமஓம் 


                                                                                                                             -சிவகுமாரன் 


                                  பாடியிருப்பவர்:  சிவ.தேன்மொழி  
  
  அய்யா சுப்புரத்தினம் பாடுவதையும் கேட்டு இன்புறுங்கள்