Tuesday, December 20, 2011

மண் சுமந்தவா



நமசிவாய ஓம் - சுவாமி
  நமசிவாய ஓம்
நமசிவாய ஓம் - சுவாமி
  நமசிவாய ஓம் 

மண் சுமந்தவா - பாதி 
   மதி சுமந்தவா 
பெண் சுமந்தவா - பொங்கும் 
   புனல் சுமந்தவா 
கண்  சிவந்தவா - நெற்றிக் 
   கனல் சுமந்தவா
என் சுமைகளைக்- கொஞ்சம் 
   இறக்கி வைக்க வா .                               (நமசிவாய ஓம் )

ஆலம் உண்டவா - நல்ல 
   அரவம் பூண்டவா 
சூலம் கொண்டவா - நெற்றிச் 
   சுடரைக் காட்டவா 
கோலம் காட்டவா - என்னில் 
   குடி புகுந்தவா 
நீல கண்டனே - நெஞ்சில் 
   நேசம் கொண்டு வா .                               (நமசிவாய ஓம் )


பித்தன் ஆனவா - சக்திப் 
   பிரியன் ஆனவா 
அத்தன் ஆனவா - என்னை 
   அடிமையாக்க வா 
சத்தம் ஆனவா - அதன்
   சரணம் ஆனவா 
நித்தம் பாடினேன் - கேட்டு 
     நீயும் ஓடி வா .                                        (நமசிவாய ஓம் )
 . 
தோடணிந்தவா - புலித் 
   தோலணிந்தவா
ஆடல் காட்ட வா - உன் 
   அழகைக் காட்ட வா 
பாடல் கேட்டு வா - எந்தன்
   பக்திபார்த்து வா 
கூடல் ஆண்டவா - எந்தன் 
    குரலைக் கேட்டுவா .                                (நமசிவாய ஓம் )


இடப வாகனா - தமிழ்
   இசையின் மோகனா 
நடன  ஈஸ்வரா - ப்ரணவ
   நாத சங்கரா 
சுடலைக் காத்தவா - உயிர்
  சுருதி  சேர்த்தவா 
கடவூர் ஆண்டவா - என் 
   கவலை போக்க வா .                                   (நமசிவாய ஓம் )


அம்மை ஆனவா - எங்கள்
   அப்பன் ஆனவா
இம்மை சிறக்க வா - அதில்
   இன்பம் சேர்க்க வா
நம்ப வைத்தவா - உன்னை
   நாட வைத்தவா
ஜம்புகேஸ்வரா - இந்த
   ஜன்மம் காக்க  வா .                                     (நமசிவாய ஓம் )


கோட்கள் ஆள்பவா - அவை
   கூடி சூழ்பவா
நாட்கள் திறப்பவா - அதை
   நகரச் செய்பவா
மீட்க ஓடிவா - வாழ்வை
   மேன்மையாக்க வா
ஆட்கொண்டேஸ்வரா - என்னை
   ஆண்டு கொள்ளவா .                                     (நமசிவாய ஓம் )


காற்றைப் படைத்தவா - மூலக்
   கனலை உடைத்தவா
நீற்றைத் தந்தவா - இந்த
   நிலத்தில் வந்தவா
ஏற்றுக் கொள்ளவா - என்னை
   இழுத்துச் செல்லவா
கூற்றை உதைத்தவா - என்னைக்
   கூட்டிக் கொள்ளவா .                                     (நமசிவாய ஓம் )


ஆதியானவா - வாழ்வின்
   அந்தம் ஆனவா
ஜோதி ஆனவா - உயிரின்
   சுடரும் ஆனவா
நாதம் ஆனவா - அதில்
   நடனம் செய்பவா
வேதம் ஆனவா - எந்தன்
    விதியை மாற்ற வா                                      (நமசிவாய ஓம் )


அகில மானவா - அணுவின்
   அணுவு மானவா
முகிலு மானவா - முகிலின்
   மழையு மானவா
பகலும் ஆனவா - வரும்
   இரவும் ஆனவா
சகலம் ஆனவா - உனது
   சக்தியோடு வா                                              (நமசிவாய ஓம் )


வாய்மை யானவா - அதன்
   வலிமை யானவா 
தூய்மை யானவா - உன்னைத்
   தொடரச் செய்தவா 
நேய மானவா - எந்தன் 
   நெஞ்சில் நின்றவா 
தாயு மானவா - என்னைத்
   தாங்கிக்  கொள்ள வா                                    (நமசிவாய ஓம் )


தாளம் ஆனவா - இசைத் 
   தமிழும் ஆனவா 
நாளம் நிறைந்தவா - எந்தன்
   நரம்பில் உறைந்தவா 
ஓலம் கேட்டு வா- எந்தன் 
   உளறல் கேட்க வா 
காளத்தி நாதா - எந்தன்
   கானம்  கேட்க வா                                           (நமசிவாய ஓம் )


விறகு விற்றவா - கை 
   வளையல் விற்றவா 
மறைகள் கற்றவா - மன்
   மதனைச் செற்றவா 
கறைகள் அற்றவா - ஒரு
   களங்கம் அற்றவா 
பிறவி அற்றவா - என்னைப் 
    பிடித்துப் பற்ற வா                                           (நமசிவாய ஓம் )


முக்கண் பெற்றவா - வேல்
   முருகைப் பெற்றவா 
தக்கன் மருமகா - அவன் 
   தலையைக் கொய்தவா 
சிக்கல் தீர்க்க வா - எந்தன்
   சிரமம் போக்க வா
சொக்க நாதனே - என்னைச் 
   சொந்த மாக்க வா                                            (நமசிவாய ஓம் )


பரியை அழைத்தவா - பாண்டி
   படையில் நுழைத்தவா 
நரியை அடைத்தவா - வைகை 
   நதியை உடைத்தவா 
புரிய வைத்தவா - உன்னைப்
    புகழ வைத்தவா 
அரியின் மைத்துனா - என்னை
   அருகில் சேர்க்கவா                                         (நமசிவாய ஓம் )


உமையின் காதலா - அகில 
   உலக நாயகா 
சுமைகள் நீக்க வா - எந்தன் 
   சுயத்தைக்  காக்க வா 
சமயம் காத்தவா - தமிழ்ச்
   சங்கம் வளர்த்தவா 
இமயம் உறைபவா - எந்தன்
   இதயம் நிறைய வா                                         (நமசிவாய ஓம் )


தில்லை ஆண்டவா - பெருந்
   துறையூர் ஆண்டவா 
நெல்லை ஆண்டவா - வெண்ணெய்
   நல்லூர் ஆண்டவா 
தொல்லை  நீக்கவா - வாட்டும் 
   துன்பம் போக்க வா
அல்லல் போக்க வா - என்னை 
   அணைத்துக்  கொள்ள வா                             (நமசிவாய ஓம் )

அருணை ஆண்டவா - திரு
   ஆரூர் ஆண்டவா 
கருணை காட்ட வா - மனக்
   கலக்கம் ஓட்ட வா 
இருளைப் போக்க வா - வாழ்வில் 
   இனிமை சேர்க்க வா 
அருளைக் கூட்ட வா - தேவ 
   அமுதம் ஊட்ட வா                                           (நமசிவாய ஓம் )


கயிலை ஆண்டவா - புனிதக் 
   காசி ஆண்டவா 
மயிலை ஆண்டவா - பாண்டி 
   மதுரை ஆண்டவா 
உயிலை எழுதவா - அதில்
   உயிரை எழுதவா 
துயில் எழுந்துவா - எந்தன் 
   துயரம் தீர்க்க வா                                               (நமசிவாய ஓம் )

கண்ணைத் தோண்டவா- பிள்ளைக்
   கறி சமைக்க வா  
மண்ணைத் தோண்டவா - தோண்டிப்
   பாதம் தீண்டவா 
விண்ணைத் தாண்ட வா - எல்லாம்
   வீண் தானல்லவா 
என்னைத் தோண்டினேன் - வருக 
    ருத்ர தாண்டவா                                              (நமசிவாய ஓம் )

                                           

பாடலை என் தம்பி பிரபாகரனின் குரலில் கேட்டு மகிழுங்கள். 



(சிவகுமாரன் கவிதைகளில் ஏற்கெனவே இடுகையிடப்பட்டது. )

Wednesday, December 7, 2011

நடை போடுங்கள்



அய்யப்பா எனச் சொல்லி தினம் பாடுங்கள் - அவன்
  அருட்சோதி முகம்காண மனம் நாடுங்கள்.
மெய்ஞ்ஞான கேள்விக்கோர் விடை தேடுங்கள் - அதற்கு
  முடிதாங்கி மலைநோக்கி நடை போடுங்கள்
                                                                             -சுவாமி(அய்யப்பா )

புலிப்பாலைக் கறந்தோனின் புகழ் கூறுங்கள் - அழகுப்
  பூப்போன்ற முகம் காண மலை ஏறுங்கள்.
மலைப்பாதை தனைச்சுற்றி வலம் வாருங்கள் - அங்கே
  மணிகண்டன் சிரிக்கின்ற எழில் பாருங்கள்.
                                                                               -சரணம் (அய்யப்பா)  

பெருமாளும் பெண்ணாகித் தொட்டான் சிவனை - அந்தப்
  பேரின்பக் காதலால் பெற்றான் இவனை.
திருப்பம்பை  நதிக்கரையில் கிடந்தான் பொன்னன் - அவனை
 திருக்கரத்தால் எடுத்தள்ளி வளர்த்தான் மன்னன்.
                                                                                    -சுவாமி(அய்யப்பா)

மகிஷாவை வதம்செய்ய பிறந்தான் அவன் - சபரி
  மலையேறி அரசாட்சி துறந்தான் அவன்.
அகிலத்தைக் காப்பாற்றும் அருளானவன் - அவன்
  அடிதேடி தொழுவோர்க்கு பொருளானவன் .
                                                                                      -சரணம்(அய்யப்பா)  


விரதத்தை முறையாகக் காப்பாற்றுங்கள் - பெரியோர்
  விரும்பாத பழக்கங்கள் தனை மாற்றுங்கள் .
வரங்கேட்டு பாருங்கள் அள்ளித் தருவான் - அவனை
  வரச் சொல்லி பாடுங்கள் இல்லம் வருவான். 
                                                                                       -சுவாமி(அய்யப்பா)


இல்லாத எளியோரின் இருள் ஓட்டுவான் - அவனை
  எந்நாளும் தொழுவோர்க்கு அருள் கூட்டுவான்.
பொல்லாத தீயோரை தினம் வாட்டுவான்- உலகில்
  பொய்யோரை நல்லோர்க்கு இனம் காட்டுவான். 
                                                                                       -சரணம் (அய்யப்பா)   

பதினெட்டுப் படியேற பாவம் தொலையும் - அவனை
  பணிந்தேத்த நெஞ்சத்தின் பாரம் குறையும்.
கதியற்றுப் போனோர்க்கும் காலம் பிறக்கும் - அய்யன் 
 கருணையினால் அருள்வீட்டின் கதவும் திறக்கும்.
                                                                                     -சுவாமி(அய்யப்பா)

இருமுடியில் தேங்காயில் நெய்யேந்துங்கள் - மனதின்
  ஏக்கங்கள் தனைச் சொல்லி கையேந்துங்கள்.
திருவடியே கதியென்று தாள் சேருங்கள்- அய்யன்
  திருவருளால் வினைதீர்த்து கரை சேருங்கள். 
-சரணம் (அய்யப்பா)  

                                                                                             
 - சிவகுமாரன்.

பாடலை பாடியிருப்பவர் - சிவ.விக்னேஷ்