Wednesday, March 10, 2021

சரணம் அய்யப்பா

                
             

சரணம்  அய்யப்பா
(ஹரிவராசனம் மெட்டு )

சரணம் அய்யப்பா - சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா - சுவாமி சரணம் அய்யப்பா

அரனின் மோகனம் அரியின் யௌவனம்
 அளித்த சீதனம் அய்யன் உதித்தனன்
பரம தேவனின் பாலன் அய்யப்பன்
  பதங்கள் தேடிஎன் பாடல் அர்ப்பணம் (சரணம்)

வேங்கை வாகனம் விரும்பும் பாலகன்
 விரிந்த கானகம் உறையும் நாயகன் 
தாங்கும் பூமகன் தாளைத் தேடிஎன் 
  தமிழில் கோர்த்திடும் மாலை சமர்ப்பணம்.(சரணம்..)

மாலை அணிந்ததும் வேண்டும் கண்ணியம் 
 மறந்தும் தவறுகள் தவிர்த்தல் புண்ணியம் 
காலை மாலையும் கடவுள் எண்ணமாய்
  காக்கும் விரதத்தால் கருணை திண்ணமாம்.(சரணம்..)

பாதை முழுவதும் பாயும் முட்களாம்
  பாதம்  இடறியே பார்க்கும் கற்களாம்
சோதனைகளைத் தாண்டி அய்யனின்
  சரணம் பாடுங்கள் வாழ்க்கை மலரலாம் ( சரணம்..)

கட்டும் இருமுடி கனப்ப தில்லையே.
   கால்கள் வீங்கியும் வலிப்பதில்லையே.
அட்ட திக்குகள் ஆளும் அய்யப்பன் 
  அருளைப் பொழிவதால் அல்லல் இல்லையே. ( சரணம்...)

பாரம் தலையிலே; பக்தி நெஞ்சிலே 
  பாவக் கணக்குகள் பரமன் கையிலே
வீர மணிகண்டன் பேரைச் சொன்னதும் 
  விதியின் கடுமைகள் விலகிப் போகுமே. ( சரணம்..)

பேட்டைத் துள்ளலில் வேடம் போடுங்கள்.
  பேதம் இன்றியே ஆடிப் பாடுங்கள்.
காட்டுப் பாதையை கடந்து ஓடுங்கள்
   காட்சி  தருகிறான்-(அவனை) கனிந்து தேடுங்கள். (சரணம்..)

பம்பை நதிப்புனல் பாவம் கரைத்திடும்
  படிகள் பதினெட்டும் பாடம் உரைத்திடும்
நம்பி வந்திடில் நலங்கள் சேர்ந்திடும்
  நாளும் வணங்கினால் ஞானம் பிறந்திடும் ( சரணம்..)

பாயும் புலியிடம் பாலைக் கறந்தவன்
  பாவி அரக்கியை அழிக்கப் பிறந்தவன்
நோயும் பிணிகளும் நீக்கும் மருந்தவன்
  நுழைந்து பாருங்கள் (அவன்) இதயம் திறந்தவன் (சரணம்..)

ஜோதி தரிசனம் கோடி புண்ணியம்
  சோகம் துயரங்கள் ஓடும் நிச்சயம்
ஆதி பரமனும் அழகன் விஷ்ணுவும்
  அய்யன்  உருவிலே தோன்றல் சத்தியம். ( சரணம்..)

சாமி அய்யப்பா என்னும் சரணங்கள் 
  சபரி மலையிலே ஒலிக்கும் தருணங்கள்
பூமி கைகளில் அடங்கும் பாருங்கள் 
  புதிய சுகமது உணர வாருங்கள்      ( சரணம்..)

........சுவாமியே......ய்  சரணம் அய்யப்பா......  


சமர்ப்பணம்
சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கும் என் சகோதரர்களுக்கு ...
.
                                                                                               -சிவகுமாரன் 

                                 பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பது .... பிரபாகரன் 


    

14 comments:

thendralsaravanan said...

அருமை...அருமை... தம்பியின் குரலிலும் இனிமை கூடுகிறது!
வாழ்த்துக்கள்...

சிவகுமாரன் said...

தென்றலுக்கு நன்றி

geetha santhanam said...

ஐயப்பன் அருட்பா அருமை. எங்களுக்குக் குலதெய்வம் சாஸ்தாதான். என் கணவரும் உங்கள் அருட்பாவை விடாமல் படித்து வருகிறார். உங்கள் தமிழ்ப்பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.பாடலைப் பாடியவருக்கும் வாழ்த்துக்கள்.

Lalitha Mittal said...

lyrics as well as music 'sooper'!
swaamiye saranam aiyappaa!

as n wn u find time pl visit my blog fr njoying a 'ammaa song'sung by kala fr aadi velli.

vetha (kovaikkavi) said...

அடடா! இன்று தான் இதைக் கேட்டேன். அருமை! ஆன்மீகத் தேடல். நல்ல வரிகள் பாடலும் சிறப்பு வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http:/www,kovaikkavi.wordpress.com

அப்பாதுரை said...

பிரபாகரன் நன்றாகவே பாடுகிறார். (பின்னணியில் நிறைய 'இசை' :).

சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள். இப்பொழுது என்ன ஐயப்ப விரதம்?

அப்பாதுரை said...

முழுப்பாடலையும் பாடிப் பதிவு செய்திருக்கிறீர்களே? நன்று.

சிவகுமாரன் said...

நன்றி கீதா மேடம்
நன்றி லலிதா மேடம்
நன்றி கவிதை

சிவகுமாரன் said...

நன்றி அப்பாஜி.

ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் சபரிமலையில் நடை திறந்திருக்கும். ஆவணி மாதம் என் சகோதரர்கள் உள்ளிட்ட 50 பேர் எங்கள் ஊரிலிருந்து செல்கிறார்கள்.
ஐயப்பன் என்னை அழைக்கவில்லை.

சாய்ராம் கோபாலன் said...

சிவா

அருமை. இங்கே அமெரிக்காவில் இந்தவருட ஐயப்ப சீசனில் இந்த பாடலை ரிலீஸ் செய்ய முயற்சிக்கின்றேன்.

என் குடும்பத்தில் இந்த நான்கு மாதங்களாக விழுந்த சாவிற்கு (என் சிறிய கிளியையும் சேர்த்து) போகலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றேன் (மாதம் ஒருமுறை பூணல் மாற்றுவதிலேயே கழிந்துவிட்டது !!). நேற்றைய ஆவணி அவிட்டம் முதற்கொண்டு !

என் அம்மா போனவருடம் ஸ்ரத்தையாக எனக்கு எல்லாம் செய்து கொடுத்தார். 41 நாட்கள் விரதம் இருந்தேன். இந்த முறை முடியுமா என்று தெரியவில்லை.

மேலும் சும்மா இருந்தாலே வலது கை தோள் முதல் விரல்கள் வரை வலி பின்னுகின்றது. அதனால் இருமுடி எல்லாம் கட்டிக்கொண்டு இங்கே விழும் பனிப்பொழிவில் இந்தமுறை கஷ்டம் தான்.

இந்த மாதக்கடைசியில் இந்தியா வரும்போது கையை சரி செய்ய முடியவில்லை என்றால் எடுத்துவிட சொல்லபோகின்றேன்.

சிவகுமாரன் said...

மிக்க நன்றி சாய்.
தங்கள் கைவலி சரியாகி , இருமுடி கட்டி, ஐயனைத் தரிசிக்க வேண்டி, எனையாளும் ஈசனிடமும், அவன் பிள்ளை அய்யப்பனிடமும் இறைஞ்சுகிறேன்.

sivamani said...

உன்னை ஐயப்பன் அழைக்க விட்டால் என்ன. உன் பாடல்கள் தான் எங்கள் கூட வருகின்றதே

திகழ் said...

சரண் அடைந்தோம்.

வாழ்த்துகள்

vidivelli said...

congratulation"